திருப்புகழ் 945 மனத்திரைந்தெழு (அவிநாசி)

தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன ...... தனதான
மனத்தி  ரைந்தெழு  மீளையு  மேலிட 
கறுத்த  குஞ்சியு  மேநரை  யாயிட 
மலர்க்க  ணண்டிரு  ளாகியு  மேநடை  ......  தடுமாறி 
வருத்த  முந்தர  தாய்மனை  யாள்மக 
வெறுத்தி  டங்கிளை  யோருடன்  யாவரும் 
வசைக்கு  றுஞ்சொலி  னால்மிக  வேதின  ......  நகையாட 
எனைக்க  டந்திடு  பாசமு  மேகொடு 
சினத்து  வந்தெதிர்  சூலமு  மேகையி 
லெடுத்தெ  றிந்தழல்  வாய்விட  வேபய  ......  முறவேதான் 
இழுக்க  வந்திடு  தூதர்க  ளானவர் 
பிடிக்கு  முன்புன  தாள்மல  ராகிய 
இணைப்ப  தந்தர  வேமயில்  மீதினில்  ......  வரவேணும் 
கனத்த  செந்தமி  ழால்நினை  யேதின 
நினைக்க  வுந்தரு  வாயுன  தாரருள் 
கருத்தி  ருந்துறை  வாயென  தாருயிர்  ......  துணையாகக் 
கடற்ச  லந்தனி  லேயொளி  சூரனை 
யுடற்ப  குந்திரு  கூறென  வேயது 
கதித்தெ  ழுந்தொரு  சேவலு  மாமயில்  ......  விடும்வேலா 
அனத்த  னுங்கம  லாலய  மீதுறை 
திருக்க  லந்திடு  மாலடி  நேடிய 
அரற்க  ரும்பொருள்  தானுரை  கூறிய  ......  குமரேசா 
அறத்தை  யுந்தரு  வோர்கன  பூசுரர் 
நினைத்தி  னந்தொழு  வாரம  ராய்புரி 
யருட்செ  றிந்தவி  நாசியுள்  மேவிய  ......  பெருமாளே. 
  • மன(ம்) திரைந்து எழும் ஈளையும் மேலிட
    மனம் சுருங்கி வேதனைப்படும்படி எழுகின்ற கோழையும் அதிகரிக்கவும்,
  • கறுத்த குஞ்சியுமே நரையாய் இட
    கரு நிறமுள்ள தலை மயிர் நரை கொண்டு வெளுக்கவும்,
  • மலர்க் கண் அண்டு இருளாகியுமே நடை தடுமாறி
    தாமரை போன்ற கண்கள் பஞ்சடைந்து பார்வை குறையவும், நடை தடுமாற்றம் அடையவும்,
  • வருத்தமும் தர தாய் மனையாள் மக(வு) வெறுத்திட அம் கிளையோருடன் யாவரும்
    துன்பத்தைத் தர, தாயார், மனைவி, மக்கள் ஆகியோர், வெறுப்புக் கொள்ளும் நல்ல சுற்றத்தார் அவருடன் மற்றெல்லாரும்
  • வசைக்கு உறும் சொ(ல்)லினால் மிகவே தினம் நகையாட
    பழிக்கும் படியான சொற்களைச் சொல்வதால், நிரம்ப நாள் தோறும் பரிகசித்துச் சிரிக்க,
  • எனைக் கடந்திடு பாசமுமே கொ(ண்)டு
    என்னை அடக்கி வெற்றிக் கொள்ளும் பாசக் கயிறு கொண்டு
  • சினத்து வந்து எதிர் சூலமுமே கையில் எடுத்து எறிந்து
    கோபத்துடன் வந்து எதிர்த்து, சூலத்தைக் கையில் எடுத்து அதை என் மேல் வீசி,
  • அழல் வாய்விடவே பயம் உறவே தான்
    நெருப்பை வாய் கக்க, பயம் கொள்ளும்படி
  • இழுக்க வந்திடு தூதர்கள் ஆனவர்
    (என்னை) இழுக்க வந்திடும் யம தூதர்கள்
  • பிடிக்கு முன்பு உனது தாள் மலராகிய
    என்னைப் பிடிப்பதற்கு முன்பாக, உன்னுடைய தாமரையாகிய
  • இணைப் பதம் தரவே மயில் மீதினில் வரவேணும்
    இரு திருவடிகளையும் அடியேனுக்குத் தரும் பொருட்டு மயிலின் மீது வந்தருள வேண்டும்.
  • கனத்த செம் தமிழால் நினையே தின(ம்) நினைக்கவும் தருவாய் உனது ஆர் அருள்
    பொருள் செறிந்த செந்தமிழால் உன்னையே தினந்தோறும் நினைக்கவும் உன்னுடைய நிறைந்த திருவருளைத் தந்தருளுக.
  • கருத்து இருந்து உறைவாய் எனது ஆருயிர் துணையாக
    என்னுடைய அருமையான உயிர்க்குத் துணையாக (என்) கருத்திலேயே பொருந்தி வீற்றிருந்து அருள் தருவாய்.
  • கடல் சலம் தனிலே ஒளி சூரனை
    கடல் நீரில் (மாமரமாக) ஒளித்திருந்த சூரனுடைய
  • உடல் பகுந்து இரு கூறெனவே அது கதித்து எழுந்து
    உடலைப் பிளவு செய்ய அது இரண்டு கூறாகத் தோன்றி எழுந்து,
  • ஒரு சேவலும் மா மயில் விடும் வேலா
    ஒப்பற்ற சேவலும், மயிலும் ஆகும்படி செலுத்திய வேலை உடையவனே,
  • அனத்தனும் கமலாலயம் மீது உறை
    அன்னத்தை வாகனமாக உள்ள பிரமனும் தாமரைப் பூவில் வீற்றிருக்கும்
  • திருக் கலந்திடும் மால் அடி நேடிய
    இலக்குமி சேர்ந்துள்ள திருமாலும் தேடிய
  • அரற்கு அரும் பொருள் தான் உரை கூறிய குமரேசா
    சிவபெருமானுக்கு அரிய (பிரணவப்) பொருளை விளக்கி உபதேசித்த குமரேசனே,
  • அறத்தையும் தருவோர் கன பூசுரர்
    அற நெறியை ஓதுவோர்களும், பெருமை பொருந்திய அந்தணர்களும்,
  • நினைத் தினம் தொழுவார் அமராய் புரி
    உன்னை நாள் தோறும் தொழுபவர்களாய் அமர்ந்திருத்தலை விரும்பியுள்ள
  • அருள் செறிந்து அவிநாசியுள் மேவிய பெருமாளே.
    அருள் நிறையப் பாலித்து, அவிநாசி* எனும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com