தனனத் தனத்ததன தனனத் தனத்ததன
தனனத் தனத்ததன ...... தனதான
இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனி
யிரதக் குடத்தையெணு ...... மரபோடே
இருகைக் கடைத்துஇடை துவளக் குழற்சரிய
இதழ்சர்க் கரைப்பழமொ ...... டுறழூறல்
முளரிப் புவொத்தமுக முகம்வைத் தருத்திநல
முதிரத் துவற்பஅல்குல் ...... மிசைமூழ்கி
மொழிதத் தையொப்பகடை விழிகட் சிவப்பமளி
முழுகிச் சுகிக்கும்வினை ...... யறஆளாய்
நளினப் பதக்கழலு மொளிர்செச் சைபொற்புயமெ
னயனத் திலுற்றுநட ...... மிடும்வேலா
நரனுக் கமைத்தகொடி யிரதச் சுதக்களவ
னறைபுட் பநற்றுளவன் ...... மருகோனே
களபத் தனத்திசுக சரசக் குறத்திமுக
கமலப் புயத்துவளி ...... மணவாளா
கடலைக் குவட்டவுணை யிரணப் படுத்தியுயர்
கருவைப் பதிக்குளுறை ...... பெருமாளே.
- இள நீர்க் குவட்டு முலை அமுதத் தடத்தை கனி இரதக்
குடத்தை எ(ண்)ணு(ம்) மரபோடே இரு கைக்கு அடைத்து
இளநீர் போன்றதும் மலை போன்றதும் ஆகிய மார்பகமாகிய அமுதம் பெருகும் இடத்தை, கனி ரசம் அடங்கியுள்ள குடத்தை கருத்துடன் வழக்கமான முறையில் இரண்டு கைகளாலும் அடைத்து, - இடை துவளக் குழல் சரிய இதழ் சர்க்கரைப் பழமொடு உறழ
உ(ஊ)றல் முளரிப் பு ஒத்த முக(ம்) முகம் வைத்து அருத்தி
இடை நெகிழவும், கூந்தல் கலையவும், வாயிதழினின்றும் சர்க்கரை போலவும் பழம் போலவும் ஊறும் (எச்சில்) தேனை தாமரை மலர் போன்ற முகத்தோடு முகம் வைத்து பருகி உண்டு, - நலம் முதிரத் து அற்ப அல்குல் மிசை மூழ்கி மொழி தத்தை
ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி முழுகிச் சுகிக்கும் வினை
அற ஆளாய்
இன்பம் முற்றுவதாகிய அனுபவத்துடன், இழிந்த பெண்குறியிடத்தே முழுகி, பேச்சு கிளியின் பேச்சுக்கு ஒப்பாக, கடைக் கண்கள் செந்நிறம் கொள்ள படுக்கையில் முழுகி இன்பம் அனுபவிக்கும் தொழில் தொலையும்படியாக, நீ என்னை ஆண்டருளுக. - நளினப் பதக் கழலும் ஒளிர் செச்சை பொன் புயம் என்
நயனத்தில் உற்று நடமிடும் வேலா
தாமரை போன்ற திருவடியில் உள்ள வீரக் கழலும், விளங்குகின்ற வெட்சி மாலை அணிந்த அழகிய திரு புயங்களும் என் கண்களில் இடம் பெற்று விளங்க நடனம் செய்கின்ற வேலனே, - நரனுக்கு அமைத்த கொடி இரதச் சுதக் களவன் நறை புட்ப
நல் துளவன் மருகோனே
அருச்சுனனுக்கு ஏற்பட்டிருந்த அநுமக் கொடி பறக்கும் தேரை ஓட்டுபவன், (வெண்ணெய்) திருடன், தேன் கொண்ட மலர்களையும் நல்ல துளசி மாலையையும் அணிந்த திருமாலின் மருகனே, - களபத் தனத்தி சுக சரசக் குறத்தி முகம் கமல அ(ம்)ப் புயத்து
வ(ள்)ளி மணவாளா
கலவைச் சாந்து அணிந்துள்ள மார்பினை உடையவள், இன்பகரமான காமலீலைகள் செய்யும் குறமகள், தாமரையன்ன முகத்தையும் திருக்கரங்களையும் உடைய வள்ளியின் கணவனே, - கடலைக் குவட்டு அவுணை இரணப் படுத்தி உயர் கருவைப்
பதிக்குள் உறை பெருமாளே.
சமுத்திரத்தையும், கிரெளஞ்ச மலையையும் சூரனையும் புண்படுத்தி அழித்து, பேர்பெற்ற மேலான கருவூர்ப்* பதிக்குள் வீற்றிருக்கும் பெருமாளே.