திருப்புகழ் 880 குறித்த நெஞ்சாசை (திருக்குரங்காடுதுறை)

தனத்தனந் தான தனதன
தனத்தனந் தான தனதன
தனத்தனந் தான தனதன ...... தனதான
குறித்தநெஞ்  சாசை  விரகிகள் 
நவிற்றுசங்  கீத  மிடறிகள் 
குதித்தரங்  கேறு  நடனிகள்  ......  எவரோடுங் 
குறைப்படுங்  காதல்  குனகிகள் 
அரைப்பணங்  கூறு  விலையினர் 
கொலைக்கொடும்  பார்வை  நயனிகள்  ......  நகரேகை 
பொறித்தசிங்  கார  முலையினர் 
வடுப்படுங்  கோவை  யிதழிகள் 
பொருட்டினந்  தேடு  கபடிகள்  ......  தவர்சோரப் 
புரித்திடும்  பாவ  சொருபிகள் 
உருக்குசம்  போக  சரசிகள் 
புணர்ச்சிகொண்  டாடு  மருளது  ......  தவிர்வேனோ 
நெறித்திருண்  டாறு  பதமலர் 
மணத்தபைங்  கோதை  வகைவகை 
நெகிழ்க்குமஞ்  சோதி  வனசரி  ......  மணவாளா 
நெருக்குமிந்த்  ராதி  யமரர்கள் 
வளப்பெருஞ்  சேனை  யுடையவர் 
நினைக்குமென்  போலு  மடியவர்  ......  பெருவாழ்வே 
செறித்தமந்  தாரை  மகிழ்புனை 
மிகுத்ததண்  சோலை  வகைவகை 
தியக்கியம்  பேறு  நதியது  ......  பலவாறுந் 
திரைக்கரங்  கோலி  நவமணி 
கொழித்திடுஞ்  சாரல்  வயலணி 
திருக்குரங்  காடு  துறையுறை  ......  பெருமாளே. 
  • குறித்த நெஞ்சு ஆசை விரகிகள் நவிற்று சங்கீத மிடறிகள் குதித்து அரங்கு ஏறு நடனிகள் எவரோடும் குறைப் படும் காதல் குனகிகள்
    பொருளைக் குறித்த விருப்பம் மனதில் கொண்ட காமிகள். பாடும் இசை அமைந்த குரலை உடையவர்கள். குதித்து நாடக மேடையில் ஏறி நடனம் செய்பவர்கள். யாரோடும் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லி காதலை ஊட்டிக் கொஞ்சிப் பேசுபவர்கள்.
  • அரைப்பணம் கூறு(ம்) விலையினர் கொலைக் கொடும் பார்வை நயனிகள் நக ரேகை பொறித்த சிங்கார முலையினர் வடுப் படும் கோவை இதழிகள்
    அரையில் உள்ள பெண்குறியை விலை பேசி விற்பவர்கள். கொலைத் தொழிலைக் காட்டும் கண் பார்வையை உடையவர்கள். நகத்தின் குறிகள் பதியப் பெற்ற அழகிய மார்பகத்தை உடையவர்கள். காயத் தழும்புள்ள கோவைப் பழம் போன்று சிவந்த வாய் இதழை உடையவர்கள்.
  • பொருள் தினம் தேடு(ம்) கபடிகள் தவர் சோரப் புரித்திடும் பாவ சொருபிகள் உருக்கு சம்போக சரசிகள் புணர்ச்சி கொண்டாடு மருள் அது தவிர்வேனோ
    பொருளைத் தினந்தோறும் தேடுகின்ற வஞ்சக மனத்தினர். தவசிகளும் சோர்ந்து போகும்படி செய்கின்ற பாவ உருவத்தினர். (உடலை) உருக்க வல்ல புணர்ச்சி லீலை செய்பவர்கள். அத்தகையோர்களின் சேர்க்கையைக் கொண்டு மகிழும் மயக்கத்தை நான் ஒழிக்க மாட்டேனோ?
  • நெறித்து இருண்டு ஆறு பத மலர் மணத்த பைங் கோதை வகை வகை நெகிழ்க்கும் மஞ்சு ஓதி வனசரி மணவாளா
    சுருண்டும், கரு நிறம் கொண்டும், ஆறு கால்கள் கொண்ட வண்டுகள் மொய்க்கும் பூக்களின் நறு மணம் கொண்டு விளங்கும் புதிய மாலைகள் பல வகையாக கட்டு தளரும், கரு மேகம் போன்ற கூந்தலை உடைய வேடப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே,
  • நெருக்கும் இந்த்ராதி அமரர்கள் வளப் பெரும் சேனை உடையவர் நினைக்கும் என் போலும் அடியவர் பெரு வாழ்வே
    கூட்டமாக உள்ள இந்திரன் முதலிய தேவர்களுக்கும், வளப்பம் கொண்ட சேனையை உடைய மன்னர்களுக்கும், நினைத்துத் துதிக்கும் என்னைப் போன்ற அடியார்களுக்கும் பெரிய செல்வமாக விளங்குபவனே,
  • செறித்த மந்தாரை மகிழ் புனை மிகுத்த தண் சோலை வகை வகை தியக்கி அம்பேறு நதி அது பலவாறும் திரைக் கரம் கோலி
    நிறைந்துள்ள மந்தாரை மலர், மகிழம்பூ இவைகளைக் கொண்டு நிரம்பி விளங்கும் குளிர்ந்த சோலைகள் பல வகையானவையும் கலக்கி, நீர் நிறைந்து வருவதுமான ஆறு, பல துறைகளிலும் அலைகளாகிய கைகளை வளைத்து,
  • நவ மணி கொழித்திடும் சாரல் வயல் அணி திருக் குரங்காடு துறை உறை பெருமாளே.
    புதிய மணி வகைகளைக் கொண்டு தள்ளுகின்ற பக்கங்களையும் வயல்களையும் அணிந்துள்ள திருக்குரங்காடுதுறை* என்ற தலத்தில் வீற்றிருக்கும பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com