தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத்
தனந்தான தனத்தனனத் ...... தனதான
அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்
கசைந்தாடு குழைக்கவசத் ...... திரடோளும்
அலந்தாம மணித்திரளை புரண்டாட நிரைத்தகரத்
தணிந்தாழி வனைக்கடகச் ...... சுடர்வேலுஞ்
சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச்
சிவந்தேறி மணத்தமலர்ப் ...... புனைபாதந்
திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்
தினந்தோறு நடிப்பதுமற் ...... புகல்வேனோ
இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட்
டிளந்தாது மலர்த்திருவைச் ...... சிறைமீளும்
இளங்காள முகிற் கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்
திருங்கான நடக்குமவற் ...... கினியோனே
குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக்
கொடுந்தாரை வெயிற்கயிலைத் ...... தொடும்வீரா
கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக்
குரங்காடு துறைக்குமரப் ...... பெருமாளே.
- அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்கு
அசைந்தாடு குழை
அலங்காரமான கிரீடமும், ஒளி நிறைந்த ஆறு திருமுகங்களில் அழகுடன் அசைந்தாடும் குண்டலங்களும், - கவசத் திரள் தோளும் அலந்தாம
கவசமும், திரண்ட புஜங்களின் மீது போதுமானவரை சூடிய பூமாலைகள், - மணித்திரளை புரண்டாட
ரத்தின மாலைகள் வரிசையாகப் புரண்டு ஆடவும், - நிரைத்த கரத்து அணிந்த ஆழி
திருக்கரங்களில் அணிந்துள்ள மோதிரங்களும், - வனைக்கடகச் சுடர்வேலும்
புனைந்துள்ள வீரக் கடகமும், ஒளி வீசும் வேலும், - சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கு
சிலம்பும், அழகிய வேத ஒலியைச் செய்யும் சலங்கையும், - ஓசை மிகுத்து அதிர
இவைகள் ஓசை மிகுந்த ஒலி செய்ய, - சிவந்தேறி மணத்தமலர்ப் புனைபாதம்
செந்நிறமாய், மணம்வீசும் மலர்களைப் புனைந்துள்ள திருவடிகள் - திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனன
திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனன
(இந்த தாளத்துக்கு) - தினந்தோறு நடிப்பதுமற் புகல்வேனோ
நாள்தோறும் நீ நடனம் செய்யும் அழகையும் - இவை எல்லாவற்றையும் நன்றாகச் சொல்லித் துதிக்க மாட்டேனோ? - இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட்டு
இலங்கைக்கு அரசனான ராவணனின் அசோக வனத்தில் அழகான குரங்காம் அனுமனை அனுப்பி இலங்கையை எரியூட்டி புகையை மூட்டிவிட்டவரும், - இளந்தாது மலர்த்திருவைச் சிறைமீளும்
மென்மையான மகரந்தம் கொண்ட செந்தாமரை மீது அமரும் லக்ஷ்மியாம் சீதையைச் சிறையிலிருந்து மீட்டியவரும், - இளங்காள முகில்
இளமை வாய்ந்தவரும், கருமுகிலைப் போன்ற நிறம் கொண்டவரும், - கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்து
கொடிய அம்பையும் வளைந்த வில்லையும் கையில் ஏந்தியவரும், - இருங்கான நடக்கும் அவற்கு இனியோனே
தந்தை ஆணையால் இருண்ட கானகத்தில் நடந்து வனவாசம் செய்தவருமான ஸ்ரீராமனுக்கு (திருமாலுக்கு) இனியவனே, - குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்க
குலபலமும், கொடிய படைபலமும் படைத்த அசுரர்களின் பெரிய சேனையை அழிப்பதற்காக - முனைக் கொடுந்தாரை வெயிற்கு அயிலைத் தொடும்வீரா
போர்க்களத்தில், கொடியதும், கூர்மையானதும், ஒளிமயமானதுமான வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, - கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை
புணர்க்குமிசை
செழித்த சோலைகளிலும், மலர்ப் பூங்காக்களிலும் கரும்பு ஆலைகள் இயங்குவதால் ஏற்படும் ஓசை கேட்கும் - குரங்காடு துறைக்குமரப் பெருமாளே.
திருக்குரங்காடுதுறைத் தலத்தில்* வீற்றிருக்கும் குமரப் பெருமாளே.



