தான தானன தானன, தான தானன தானன
தான தானன தானன ...... தனதான
பாவ நாரிகள் மாமட மாதர் வீணிக ளாணவ
பாவை யாரிள நீரன ...... முலையாலும்
பார்வை யாமிகு கூரயி லாலு மாமணி யார்குழை
பார காரன வார்குழ ...... லதனாலுஞ்
சாவ தாரவி தாரமு தார்த ராவித ழாலித
சாத மூரலி தாமதி ...... முகமாலுஞ்
சார்வ தாவடி யேனிடர் வீற மாலறி வேமிகு
சார மாயதி லேயுற ...... லொழிவேனோ
ஆவ ஆர்வன நான்மறை யாதி மூல பராவரி
யாதி காணரி தாகிய ...... பரமேச
ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுர
னாதி தேவர்க ளியாவர்கள் ...... பணிபாத
கோவ தாமறை யோர்மறை யோது மோதம்வி ழாவொலி
கோடி யாகம மாவொலி ...... மிகவீறும்
கோவை மாநகர் மேவிய வீர வேலயி லாயுத
கோதை யானையி னோடமர் ...... பெருமாளே.
- பாவ நாரிகள் மா மட மாதர் வீணிகள் ஆணவ பாவையார்
பாவச் செயல் செய்கின்ற விலைமாதர்கள், வீண் பொழுது போக்குபவர்கள், செருக்கு உடைய மாதர்களின் - இள நீர் அ(ன்)ன முலையாலும் பார்வையாம் மிகு கூர்
அயிலாலும் மாமணியார் குழை
இளநீர் போன்ற மார்பகத்தாலும், கண் என்னும் மிகுந்த கூர்மையான வேலாலும், சிறந்த ரத்தினம் நிறைந்த குண்டலங்களாலும், - பார கார் அ(ன்)ன வார் குழல் அதனாலும் சாவது ஆர
விதாரம் அமுது ஆர்தரா இதழால்
அடர்ந்த மேகத்துக்கு ஒப்பான நீண்ட கூந்தலாலும், கொல்லுங் குணம் கொண்டுள்ளதும், செவ்விய இலவு போன்றதும் ஆன, அமுதம் நிறைந்துள்ள வாயிதழாலும், - இத சாத மூரல் இதா மதி முகமாலும்
இனிமை தோன்றும் புன்சிரிப்பாலும், இதம் தரும் நிலவு போன்ற முகத்தாலும், - சார்வதா அடியேன் இடர் வீற மால் அறிவே மிகு சாரமாய்
அதிலே உறல் ஒழிவேனோ
எப்போதும் அடியேனுடைய துன்பங்கள் மிக அதிகமாக, காம மயக்கப் புத்தியே மிகுந்த இனிமை தருவதாய் நம்பி, அத்தகைய புத்தியின் வழியிலே பொருந்துதலை நான் விலக்க மாட்டேனோ? - ஆவ ஆர்வன நான் மறை ஆதி மூல பரா அரி ஆதி காண்
அரிதாகிய பரம ஈச ஆதியார் அருள் மா முருகேச
ஆக வேண்டியவற்றை நிரம்பக் கூறும் நான்கு வேதங்களின் முதல்வரும், மூலப் பரமரும், திருமால் முதலிய தேவர்களும் காண்பதற்கு அரியவருமான பரமேஸ்வரருமாகிய ஆதி மூர்த்தியார் பெற்றருளிய முருகேசனே, - மால் மருகேசுர அனாதி தேவர்கள் இயாவர்கள் பணி பாத
திருமாலுக்கு மருகனாகிய ஈசனே, ஆதி இல்லாதவனே, தேவர்கள் யாவரும் பணிகின்ற பாதனே, - கோ அதா மறையோர் மறை ஓதும் ஓதம் விழா ஒலி கோடி
ஆகம மா ஒலி மிக வீறும்
சிறப்பாக மறையோர் வேதங்கள் ஓதும் ஓசை வெள்ளமும், திருவிழாக்களின் ஒலியும், கோடிக் கணக்கான ஆகமங்களின் பேரொலியும் மிக்கு எழுகின்ற - கோவை மா நகர் மேவிய வீர வேல் அயில் ஆயுத
திருக்கோவலூர்* என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் வீரனே, வேல் என்னும் கூரிய ஆயுதத்தை உடையவனே, - கோதை யானையினோடு அமர் பெருமாளே.
வள்ளி தேவயானையோடு வீற்றிருக்கும் பெருமாளே.