திருப்புகழ் 734 ஆறும் ஆறும் (தேவனூர்)

தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த ...... தனதான
ஆறு  மாறு  மஞ்சு  மஞ்சும்  ஆறு  மாறு  மஞ்சு  மஞ்சும் 
ஆறு  மாறு  மஞ்சு  மஞ்சும்  ......  அறுநாலும் 
ஆறு  மாய  சஞ்ச  லங்கள்  வேற  தாவி  ளங்கு  கின்ற 
ஆரணாக  மங்க  டந்த  ......  கலையான 
ஈறு  கூற  ரும்பெ  ருஞ்சு  வாமி  யாயி  ருந்த  நன்றி 
யேது  வேறி  யம்ப  லின்றி  ......  யொருதானாய் 
யாவு  மாய்ம  னங்க  டந்த  மோன  வீட  டைந்தொ  ருங்கி 
யான  வாவ  டங்க  என்று  ......  பெறுவேனோ 
மாறு  கூறி  வந்தெ  திர்ந்த  சூரர்  சேனை  மங்க  வங்க 
வாரி  மேல்வெ  குண்ட  சண்ட  ......  விததாரை 
வாகை  வேல  கொன்றை  தும்பை  மாலை  கூவி  ளங்கொ  ழுந்து 
வால  சோம  னஞ்சு  பொங்கு  ......  பகுவாய 
சீறு  மாசு  ணங்க  ரந்தை  ஆறு  வேணி  கொண்ட  நம்பர் 
தேசி  காக  டம்ப  லங்கல்  ......  புனைவோனே 
தேவர்  யாவ  ருந்தி  ரண்டு  பாரின்  மீது  வந்தி  றைஞ்சு 
தேவ  னூர்வி  ளங்க  வந்த  ......  பெருமாளே. 
  • ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் அறுநாலும் ஆறுமாய
    மொத்தம் தொண்ணூற்றாறு (6+6+5+5+6+6+5+5+6+6+5+5+24+6=96) ஆகிய
  • சஞ்சலஞ்கள்
    துன்பங்களுக்கு காரணமான தத்துவங்களுக்கும்*
  • வேறதா விளங்குகின்ற
    வேறுபட்டதாக விளங்குகின்றதும்,
  • ஆரணாகமங் கடந்த
    வேதாகமங்களைக் கடந்ததும்,
  • கலையான ஈறு கூறரும்
    உபதேசக் கலையாகிய சித்தாந்தத்தால் கூட கூறுதற்கு ஒண்ணாததும்,
  • பெருஞ்சுவாமியாய் இருந்த நன்றி
    பெரும் தெய்வ நிலையிலிருக்கும் நற்பொருளை
  • ஏது வேறு இயம்பலின்றி
    ஏது (காரணம்) வேறு சொல்வதற்கு இல்லாமல்
  • ஒருதானாய் யாவுமாய்
    ஒப்பற்ற தானேயாக நின்று, மற்ற எல்லாமாகவும் விளங்கி,
  • மனங்கடந்த மோன வீடு அடைந்து
    மனம் கடந்ததான மெளன இன்ப முக்தியை அடைந்து,
  • ஒருங்கி யான்
    சிந்தை ஒருமைப்பட்டு ஒடுக்கமுற்று யான்
  • அவா அடங்க என்று பெறுவேனோ
    ஆசைகள் யாவும் அடங்கும் நிலையை என்று பெறுவேனோ?
  • மாறு கூறி வந்தெதிர்ந்த சூரர் சேனை மங்க
    பகைமை பேசி வந்து எதிர்த்த சூரர் சேனை அழிய,
  • வங்க வாரி மேல்வெகுண்ட
    கப்பல்கள் செல்லும் கடலினைக் கோபித்ததும்,
  • சண்ட விததாரை
    வேகமும் கோபமும் கொண்டதும்,
  • வாகை வேல
    வெற்றி வாகையைச் சூடியதுமான வேலினை ஏந்தியவனே,
  • கொன்றை தும்பை மாலை கூவிளங்கொழுந்து வால சோமன்
    கொன்றைமாலை, தும்பைமாலை, வில்வக் கொழுந்து, இளம் பிறைச் சந்திரன்,
  • நஞ்சு பொங்கு பகுவாய சீறு மாசுணம்
    விஷம் நிறைந்த, வாய் பிளந்த, கோபம் மிகுந்த பாம்பு,
  • கரந்தை ஆறு வேணி கொண்ட
    திருநீறு, கங்கை, யாவையும் சடையில் வைத்த
  • நம்பர் தேசிகா
    நம் தலைவர் சிவபிரானின் குருநாதனே,
  • கடம்பு அலங்கல் புனைவோனே
    கடப்ப மாலையை அணிந்தவனே,
  • தேவர் யாவரும் தி ரண்டு
    அனைத்துத் தேவர்களும் ஒன்று சேர்ந்து
  • பாரின் மீது வந்து இறைஞ்சு
    பூமியிலே வந்து வணங்கும்
  • தேவ னூர்விளங்க வந்த பெருமாளே.
    தேவனூர்** சிறக்க வந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com