திருப்புகழ் 719 சயில அங்கனைக்கு (மதுராந்தகம்)

தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த ...... தனதான
சயிலாங்க  னைக்கு  ருகியி  டப்பக் 
கங்கொ  டுத்த  கம்பர்  ......  வெகுசாரி 
சதிதாண்ட  வத்தர்  சடையி  டத்துக் 
கங்கை  வைத்த  நம்பர்  ......  உரைமாளச் 
செயல்மாண்டு  சித்த  மவிழ  நித்தத் 
த்வம்பெ  றப்ப  கர்ந்த  ......  வுபதேசஞ் 
சிறியேன்த  னக்கு  முரைசெ  யிற்சற் 
றுங்கு  ருத்து  வங்கு  ......  றையுமோதான் 
அயில்வாங்கி  யெற்றி  யுததி  யிற்கொக் 
கன்ற  னைப்பி  ளந்து  ......  சுரர்வாழ 
அகிலாண்ட  முற்று  நொடியி  னிற்சுற் 
றுந்தி  றற்ப்ர  சண்ட  ......  முழுநீல 
மயில்தாண்ட  விட்டு  முதுகு  லப்பொற் 
குன்றி  டித்த  சங்க்ர  ......  மவிநோதா 
மதுராந்த  கத்து  வடதி  ருச்சிற் 
றம்ப  லத்த  மர்ந்த  ......  பெருமாளே. 
  • சயில அங்கனைக்கு உருகி
    மலை மகளாகிய பார்வதியின் பக்திக்கு உருகி
  • இடப்பக்கங் கொடுத்த கம்பர்
    தமது இடது பாகத்தையே கொடுத்தருளிய சிவனார்
  • வெகுசாரி சதிதாண்டவத்தர்
    பலவித வரிசைக் கூத்துக்களையும், ஜதி (தாளம்) நடனங்களையும் ஆடுபவரும்,
  • சடையி டத்துக் கங்கை வைத்த நம்பர்
    ஜடாமுடியில் கங்கை ஆற்றை வைத்த நம் பெருமானும் ஆகிய சிவனாருக்கு
  • உரைமாளச் செயல்மாண்டு சித்தம் அவிழ
    பேச்சற்றுப் போய், செயல் இழந்து, மனம் அழியும்படியாக,
  • நித்தத் த்வம் பெறப் பகர்ந்த உபதேசம்
    என்றும் உள்ளதாகிய தன்மையைப் பெற நீ கூறிய உபதேசத்தை
  • சிறியேன்தனக்கும் உரைசெயில்
    சிறியவனாகிய எனக்கும் நீ சொல்லி உதவினால்
  • சற்றுங் குருத்துவம் குறையுமோதான்
    கொஞ்சமேனும் உனது குருமூர்த்தியாம் பதவி குறைந்திடுமோ என்ன?
  • அயில்வாங்கி யெற்றி
    வேலாயுதத்தை எடுத்துச் செலுத்தி
  • உததியிற் கொக்கன் தனைப்பி ளந்து
    சமுத்திரத்தில் மாமரமாக ஒளிந்த சூரனைப் பிளந்து,
  • சுரர்வாழ
    தேவர்கள் வாழ்வுற,
  • அகிலாண்ட முற்று நொடியினிற் சுற்றும்
    சகல அண்டங்களையும் ஒரு நொடிப் பொழுதில் சுற்றிய
  • திறற் ப்ரசண்ட முழுநீல
    வலிமை வாய்ந்த, கடுமை கொண்ட, முழு நீல நிறமான
  • மயில்தாண்ட விட்டு
    மயிலைப் பாய்ந்தோடச் செய்தவனும்,
  • முதுகுலப்பொற் குன்றிடித்த
    பழைய சிறந்த பொன்மயமான மேருமலையை செண்டால் அடித்தவனுமான*
  • சங்க்ரம விநோதா
    போர் விளையாட்டை உடையவனே,
  • மதுராந்தகத்து வட
    மதுராந்தகத்துக்கு வடக்குப் பகுதியில்
  • திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே.
    திருச்சிற்றம்பலம்** என்னும் திருக்கோயிலில் அமர்ந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com