தனன தானன தானன தனன தானன தானன
தனன தானன தானன ...... தனதான
திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ
திமிர மேயரி சூரிய ...... திரிலோக
தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
சிவசு தாவரி நாரணன் ...... மருகோனே
குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
குணக லாநிதி நாரணி ...... தருகோவே
குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர
குறவர் மாமக ளாசைகொள் ...... மணியேசம்
பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக
பசுர பாடன பாளித ...... பகளேச
பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
பரவு பாணித பாவல ...... பரயோக
சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
சமய நாயக மாமயில் ...... முதுவீர
சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
சமர மாபுரி மேவிய ...... பெருமாளே.
- திமிர மாமன மாமட மடமையேன்
இருள் அடைந்த மனத்தையும், மிக்க அறியாமையையும் கொண்ட எனது - இடர் ஆணவ திமிரமே யரி சூரிய
வருத்தங்களையும், ஆணவத்தையும் விலக்கும் ஞான சூரியனே, - திரிலோக தினகரா சிவ காரண
மூவுலகங்களுக்கும் ஒளி தரும் சூரியனே, சிவனே, மூலாதாரனே, - பனக பூஷண ஆரண சிவசுதா
நாகாபரணரும் வேத முதல்வருமான சிவபிரானின் குமாரனே, - அரி நாரணன் மருகோனே
ஹரி நாராயணனின் மருகனே, - குமரி சாமளை மாது
குமரியும், கருமை கலந்த பச்சை நிறத்தாளும், அன்னையும், - உமை அமலி யாமளை பூரணி
உமா தேவியும், மாசு அற்றவளும், பச்சை வண்ணத்தாளும், நிறைந்தவளும், - குணகலாநிதி நாரணி தருகோவே
குணச்செல்வியும், கலைச்செல்வியுமான நாராயணி பெற்ற தலைவனே, - குருகுகா குமரேசுர சரவணா சகளேசுர
குருநாதனே, குகனே, குமரேசனே, சரவணனே, உருவத் திருமேனி கொண்ட ஈசனே, - குறவர் மாமகள் ஆசைகொள் மணியே
குறவர்தம் தவப் புதல்வி வள்ளி மீது ஆசை கொண்ட மணியே, - சம் பமர பார ப்ரபா அருண படல
நன்றாக வண்டுகள் மொய்க்கும் ஒளிவீசும் சிவந்த கூட்டமான வெட்சி மாலைகளை அணிந்தவனே, - தாரக மாசுக
ப்ரணவப் பொருளானவனே, பேரின்பப் பொருளே, - பசுர பாடன
பாசுரங்களை (தேவாரத்தை) பாடி உலகுக்கு பாடம் கற்பித்தவனே, - பாளித பகளேச
செம்பட்டு அணிந்தவனே, மலைகளுக்கு அரசனே, - பசித பாரண
திருநீற்றில் திருப்தி அடைபவனே, - வாரண துவச
சேவலைக் கொடியில் வைத்தவனே, - ஏடக மாவயில் பரவு பாணித
மேன்மை மிகுந்த பெரிய வேலாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவனே, - பாவல பரயோக
பாடலில் வல்லவனே, மேலான யோக மூர்த்தியே, - சம பராமத சாதல
வாதப் போரிடும் புற மதங்களான புத்தம், சமணம் - இவற்றின் நசிவுக்குக் காரணனே, - சமயம் ஆறிரு தேவத
அகச்சமயம் ஆறிலும், புறச்சமயம் ஆறிலும்* இலங்கும் தெய்வமே, - சமய நாயக மாமயில் முதுவீர
தக்க சமயத்தில் உதவும் தலைவனே, அழகிய மயில் ஏறும் பேரறிவு வீரனே, - சகலலோகமும் ஆசறு சகல வேதமுமேதொழு
சகல உலகங்களும், குற்றமற்ற எல்லா வேதங்களும் தொழும் - சமர மாபுரி மேவிய பெருமாளே.
சமரமாபுரி என்ற திருப்போரூரில்** வீற்றிருக்கும் பெருமாளே.