திருப்புகழ் 702 விலையறுக்கவும் (மாடம்பாக்கம்)

தனன தத்தன தனன தத்தன
தனந்தந் தந்த தந்தா
தனன தத்தன தனன தத்தன
விலைய  றுக்கவு  முலைம  றைக்கவு 
மணந்துன்  றுஞ்செ  ழுந்தார் 
புனைமு  கிற்குழல்  தனைய  விழ்க்கவும் 
விடங்கஞ்  சஞ்ச  ரஞ்சேர் 
விழிவெ  ருட்டவு  மொழிபு  ரட்டவு 
நிணந்துன்  றுஞ்ச  லம்பா  ......  யுதிரநீ  ருடனே 
வெளியி  னிற்கவும்  வலிய  முட்டரை 
யெதிர்ந்தும்  பின்தொ  டர்ந்தே 
யிலைசு  ணப்பொடி  பிளவெ  டுத்திடை 
திரும்பும்  பண்ப  ரன்றே 
யெனவு  ரைத்தவர்  தமைவ  ரப்பணி 
யுடன்கொண்  டன்பு  டன்போய்  ......  சயனபா  யலின்மேல் 
கலைநெ  கிழ்க்கவு  மயல்வி  ளைக்கவு 
நயங்கொண்  டங்கி  ருந்தே 
குணுகி  யிட்டுள  பொருள்ப  றித்தற 
முனிந்தங்  கொன்று  கண்டே 
கலக  மிட்டவ  ரகல  டித்தபின் 
வரும்பங்  கங்கு  ணங்கோர்  ......  புதியபே  ருடனே 
கதைகள்  செப்பவும்  வலச  மர்த்திகள் 
குணங்கண்  டுந்து  ளங்கா 
மனித  னிற்சிறு  பொழுது  முற்றுற 
நினைந்துங்  கண்டு  கந்தே 
கடிம  லர்ப்பத  மணுகு  தற்கறி 
விலன்  பொங்  கும்பெ  ரும்பா  ......  தகனையா  ளுவையோ 
சிலைத  னைக்கொடு  மிகஅ  டித்திட 
மனந்தந்  தந்த  ணந்தா 
மரைம  லர்ப்பிர  மனைந  டுத்தலை 
யரிந்துங்  கொண்டி  ரந்தே 
திரிபு  ரத்தெரி  புகந  கைத்தருள் 
சிவன்பங்  கங்கி  ருந்தா  ......  ளருளுமா  முருகா 
செருவி  டத்தல  கைகள்தெ  னத்தென 
தெனந்தெந்  தெந்தெ  னந்தா 
எனஇ  டக்கைகள்  மணிக  ணப்பறை 
டிகுண்டிங்  குண்டி  குண்டா 
டிகுகு  டிக்குகு  டிகுகு  டிக்குகு 
டிகுண்டிங்  குண்டி  குண்டீ  ......  யெனஇரா  வணனீள் 
மலையெ  னத்திகழ்  முடிகள்  பத்தையு 
மிரண்டஞ்  சொன்ப  தொன்றேய் 
பணைபு  யத்தையு  மொருவ  கைப்பட 
வெகுண்டம்  பொன்றெ  றிந்தோன் 
மதலை  மைத்துன  அசுர  ரைக்குடல் 
திறந்தங்  கம்பி  ளந்தே  ......  மயிலின்மேல்  வருவாய் 
வயல்க  ளிற்கய  லினமி  குத்தெழு 
வரம்பின்  கண்பு  ரண்டே 
பெருக  யற்கொடு  சொரியு  நித்தில 
நிறைந்தெங்  குஞ்சி  றந்தே 
வரிசை  பெற்றுயர்  தமனி  யப்பதி 
யிடங்கொண்  டின்பு  றுஞ்சீர்  ......  இளையநா  யகனே. 
  • விலை அறுக்கவு(ம்) முலை மறைக்கவு(ம்) மணம் துன்றும் செழும் தார் புனை முகில் குழல் தனை அவிழ்க்கவும்
    விலை பேசி முடிவு செய்யவும், மார்பகத்தை (ஆடையால்) மறைக்கவும், நறு மணம் நிறைந்துள்ள செழுமை கொண்ட பூ மாலையை அணிந்துள்ள மேகம் போல் கறுத்தக் கூந்தலை அவிழ்த்து விடவும்,
  • விடம் கஞ்சம் சரம் சேர் விழி வெருட்டவு(ம்) மொழி புரட்டவு(ம்) நிணம் துன்றும் சலம் பாய் உதிர நீருடனே வெளியில் நிற்கவும்
    நஞ்சு, தாமரை, அம்பு ஆகியவைகளுக்கு நிகரான கண் கொண்டு (ஆடவர்களை) விரட்டவும், பேச்சு மாற்றிப் பேசவும், மாமிசம் நிரம்பிய நீருடனும் ரத்த நீருடனும் கலந்த உடலுடன் வீட்டின் வெளியில் வந்து நிற்கவும்,
  • வலிய முட்டரை எதிர்த்தும் பின் தொடர்ந்தே இலை சு(ண்)ணப் பொடி பிளவு எடுத்து இடை திரும்பும் பண்பர் அன்றே என உரைத்து அவர் தமை வரப் ப(ண்)ணி
    வேண்டுமென்றே மூடராக உள்ளவரின் எதிர்ப்பட்டு வரவும், அவர்களைப் பின் தொடர்ந்தும், வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு இவைகளை எடுத்துக் கொடுத்து (நீங்கள்) இடையில் அப்படியே நமது வீட்டுக்குத் திரும்பி வாரும், நற்குணத்தவர் அன்றோ என்று சொல்லி நன்மொழி பேசி அவர்களை வீட்டுக்கு வரச் செய்து,
  • உடன் கொண்டு அன்புடன் போய் சயன பாயிலின் மேல் கலை நெகிழ்க்கவு(ம்) மயல் விளைக்கவு(ம்) நயம் கொண்டு அங்கு இருந்தே குணுகியிட்டு உ(ள்)ள பொருள் பறித்து அற முனிந்து
    தம்முடன் அழைத்துச் சென்று அன்புடன் போய் உறங்கும் படுக்கையின் மேல் ஆடையைத் தளர விடவும், காம மோகத்தை உண்டு பண்ணவும், நயத்துடன் (உபசார வார்த்தைகள் சொல்லி) அங்கிருந்தபடியே கொஞ்சிப் பேசி, அவர்கள் கையிலுள்ள பொருள் அனைத்தையும் பறித்துப் (பொருள் வற்றிய பின்னர்) மிகவும் (வந்தவரிடம்) கோபம் கொண்டு,
  • அங்கு ஒன்று கண்டே கலகம் இட்டு அவர் அகல அடித்த பின் வரும் பங்கு அங்கு உணங்க ஓர் புதிய பேருடனே கதைகள் செப்பவும் வ(ல்)ல சமர்த்திகள்
    அச்சமயத்தில் ஏதேனும் ஒரு போலிக் காரணத்தை கற்பித்துக் கொண்டு கலகப் போர் செய்து வந்தவரை அகன்று ஓடும்படி அடித்து அனுப்பிய பின்னர், (அப்படி ஓட்டப் பட்டவர்களால்) வந்த பங்குப் பொருள் சுருங்க ஒரு புதிய ஆடவருடன் பொய்க் கதைகளைச் சொல்லவும் வல்ல சாமர்த்தியசாலிகள்.
  • குணம் கண்டும் துளங்கா மனிதனில் சிறு பொழுதும் உற்று உற நினைந்தும் கண்டு உகந்தே கடி மலர்ப் பதம் அணுகுதற்கு அறிவிலன் பொங்கும் பெரும் பாதகனை ஆளுவையோ
    (அத்தகைய விலைமாதர்களின்) குணத்தைக் கண்டும் நிலை கலங்காத மனிதர்களைப் போல சிறு பொழுதேனும் (மனம் பொருந்தி உன்னை) நினைந்தும், (உன்னைத்) தரிசித்து மனம் களித்தும், நறு மணமுள்ள மலர்கள் பொருந்திய உனது திருவடிகளை அணுகிச் சேர்வதற்கு உரிய அறிவு இல்லாதவனாய் மிக்கு எழும் பெரிய பாவியாகிய என்னை ஆண்டு அருள்வாயாக.
  • சிலை தனைக் கொ(ண்)டு மிக அடித்திட மனம் தந்து அந்தணன் தாமரை மலர்ப் பிரமனை நடுத் தலை அரிந்தும் கொண்டு இரந்தே திரி புரத்து எரி புக நகைத்து அருள் சிவன் பங்கு அங்கு இருந்தாள் அருளு(ம்) மா முருகா
    வில்லால் நன்றாய்த் தன்னை அடிக்கும்படியான மனத்தை (அர்ச்சுனனுக்குக்) கொடுத்தும், மறையோனும் தாமரை மலரில் வீற்றிருப்பவனும் ஆகிய பிரமனுடைய உச்சித் தலையை அரிந்தும், (அந்தத் தலையில்) பலிப் பிச்சை ஏற்றும், திரிபுரங்களில் நெருப்பு எழும்படி சிரித்தும் திருவருள் விளையாடல்களைச் செய்த சிவபெருமானுடைய (இடது) பாகத்தில் இருப்பவளாகிய பார்வதி தேவி அருளிய சிறந்த முருகனே,
  • செரு இடத்து அலகைகள் தெனத்தென தெனந்தெந்தெந் தெனந்தா என இடக்கைகள் மணி கணப் பறை டிகுண்டிங்குண் டிகுண்டா டிகுகுடிக்குகு டிகுகுடிக்குகு டிகுண்டிங்குண் டிகுண்டீ என
    போர்க் களத்தில் பேய்கள் தெனத்தென தெனந்தெந்தெந் தெனந்தா என்று கூறி, இடக் கையால் கொட்டப்படும் முரசுகளும், மணிகளும், அதம ஒலி எழுப்பும் பறைகளும் டிகுண்டிங்குண் டிகுண்டா டிகுகுடிக்குகு டிகுகுடிக்குகு டிகுண்டிங்குண் டிகுண்டீ இவ்வாறான ஒலிகளை எழுப்ப,
  • இராவணன் நீள் மலை எனத் திகழ் முடிகள் பத்தையும் இரண்டு அஞ்சு ஒன்பது ஒன்று ஏய் பணை புயத்தையும் ஒரு வகைப்பட வெகுண்டு அம்பு ஒன்று எறிந்தோன் மதலை மைத்துன
    ராவணனுடைய பெரிய மலை போல் விளங்கிய பத்துத் தலைகளையும் (2x5=10; & 9+1=10) இருபது பெரிய புயங்களையும் ஒரு வழிப்பட்டு ஒழியும்படி கோபித்து ஒப்பற்ற அம்பை எறிந்தவனாகிய ராமனாகிய திருமாலின் பிள்ளையாகிய மன்மதனுக்கு மைத்துன முறையினனே*,
  • அசுரரைக் குடல் திறந்து அங்கம் பிளந்தே மயிலின் மேல் வருவாய்
    அசுரர்களுடைய குடலை வெளிப்படுத்தி, அவர்களுடைய உடலைப் பிளந்து மயிலின் மீது ஏறி வருபவனே,
  • வயல்களில் கயல் இன(ம்) மிகுத்து எழு வரம்பின் கண் புரண்டே பெருகு அயல் (கொ)டு சொரியு(ம்) நித்தில(ம்) நிறைந்து எங்கும் சிறந்தே வரிசை பெற்று உயர் தமனியப் பதி இடம் கொண்டு இன்புறும் சேர் இளைய நாயகனே
    வயல்களில் கயல் மீன் கூட்டங்கள் மிக்கு எழுந்து வரப்பில் புரண்டு பெருகும் பக்கங்களில், சங்குகள் சொரிகின்ற முத்துக்கள் நிறைந்து எங்கும் விளக்கம் தரும் மேம்பாட்டினைப் பெற்று, உயர்ந்த மாடம்பாக்கம் என்னும் அழகிய தலத்தை இடமாகக் கொண்டு இன்புறுகின்ற மேன்மை மிக்க இளமை வாய்ந்த தலைவனே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com