தனதன தத்தன தானா தானன
தனதன தத்தன தானா தானன
தனதன தத்தன தானா தானன ...... தனதான
வருமயி லொத்தவ ரீவார் மாமுக
மதியென வைத்தவர் தாவா காமிகள்
வரிசையின் முற்றிய வாகா ராமியல் ...... மடமாதர்
மயலினி லுற்றவர் மோகா வாரிதி
யதனிடை புக்கவ ராளாய் நீணிதி
தருவிய லுத்தர்கள் மாடா மாமதி ...... மிகமூழ்கி
தருபர வுத்தம வேளே சீருறை
அறுமுக நற்றவ லீலா கூருடை
அயிலுறை கைத்தல சீலா பூரண ...... பரயோக
சரவண வெற்றிவி நோதா மாமணி
தருமர வைக்கடி நீதா வாமணி
மயிலுறை வித்தவு னாதா ராமணி ...... பெறுவேனோ
திரிரிரி தித்திதி தீதீ தீதிதி
தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி ...... தொதிதீதோ
தெனவரி மத்தள மீதார் தேமுழ
திடுவென மிக்கியல் வேதா வேதொழு
திருநட மிட்டவர் காதே மூடிய ...... குருபோதம்
உரை செயு முத்தம வீரா நாரணி
உமையவ ளுத்தர பூர்வா காரணி
உறுஜக ரக்ஷணி நீரா வாரணி ...... தருசேயே
உயர்வர முற்றிய கோவே யாரண
மறைமுடி வித்தக தேவே காரண
ஒருமயி லைப்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
- வரும் மயில் ஒத்தவர் ஈவார் மா முக(ம்) மதி என வைத்தவர்
தாவா(த) காமிகள்
அசைந்து வரும் மயில் போன்றவர்கள், பொருள் கொடுப்பவர்கள் வந்தால் (அவர் முன்பு தமது) அழகிய முகத்தை பூரண நிலவைப் போல வைத்துக் கொள்பவர்கள், எதிர் பாய்தல் இல்லாத (உண்மையில் மோகம் கொள்ளாத) ஆசைக்காரிகள், - வரிசையின் முற்றிய வாகு ஆர் ஆம் இயல் மடமாதர்
ஒருவிதமான ஒழுங்கைக் கைப்பிடிக்கும், அழகு நிறைந்த, தகுதி வாய்ந்த மென்மையான (விலை) மாதர்கள், - மயலினில் உற்று அவர் மோகா வாரிதி அதன் இடை புக்கு
அவர் ஆளாய் நீள் நிதி தரு இயல் உலுத்தர்கள்
காம வசப்பட்டு அவர்களுடைய மோகம் என்னும் கடலில் புகுந்து அவர்களுடைய ஆளுகைக்கு உட்பட்டு (என்னுடைய) பெரிய சொத்துக்களை எல்லாம் தத்தம் செய்தும், மரம் போன்று அருட் குணம் இல்லாத லோபிகளாகிய விலைமாதர்கள், - மாடா மா மதி மிக மூழ்கி
இவ் வேசையர் மாட்டு ஈடுபட்டு, நல்ல அறிவு அறவே அற்று மூழ்கிக் கிடப்பவன் நான். - தரு பர உத்தம வேளே சீர் உறை அறு முக நல் தவ லீலா
கூர் உடை அயில் உறை கைத் தல சீலா பூரண
திருவருளைத் தரும் மேலான உத்தமனே, பெருமை வாய்ந்த ஆறு முகனே, நல்ல தவ விளையாடல்களை புரிபவனே, கூர்மை கொண்ட வேலைப் பிடித்த கரத்தனே, தரும மூர்த்தியே, பரிபூரணனே, - பர யோக சரவண வெற்றி விநோதா மா மணி தரும் அரவைக்
கடி நீதா ஆம் அணி மயில் உறை வித்த உன் ஆதார(ம்)
ஆ(ம்) அணி பெறுவேனோ
மேலான யோக மூர்த்தியே, சரவண பவனே, வெற்றி விநோதனே, உயர்ந்த மணியைத் தருகின்ற பாம்பை அடக்குகின்ற, நீதியாயுள்ள, அழகிய மயிலின் மேல் வீற்றிருக்கும் ஞான மூர்த்தியே, உனது பற்றுக் கோடு என்னும் பெருமையைப் பெறுவேனோ? - திரிரிரி தித்திதி தீதீ தீதிதி
தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ என
(இவ்வாறான ஒலிகளுடன்) - அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என
திருமால் மத்தளம் மீது நிரம்ப வாசிக்கும் இடத்தில் முழவு வாத்தியத்தை திடு திடு என்று வாசிக்க, - மிக்கு இயல் வேதாவே தொழு திரு நடம் இட்டவர் காதே
மூடிய குரு போதம் உரை செய்யும் உத்தம வீரா
மிகுந்த தகுதி வாய்ந்த பிரமனும் (தாளம் போட்டுத்) தொழுகின்ற போது, திரு நடனம் செய்கின்ற சிவபெருமான் தமது செவிகளை (உபதேசம் கேட்க) பொத்தச் செய்த ஞானகுருவாக இருந்து ஞானப் பொருளை உபதேசித்த மேலானவனே, வீரனே, - நாரணி உமையவள் உத்தர பூர்வ ஆகார அணி உறு ஜக
ரக்ஷணி நீர ஆவாரணி தரு சேயே
நாராயணி, உமையவள், வடக்கு கிழக்கு முதலிய திசைகளின் ஆதி தேவதை, உலகை மிகவும் காப்பவள், மறைக்கின்ற (திரோதான) சக்திக் குணம் உடையவள் ஈன்ற குழந்தையே, - உயர் வரம் உற்றிய கோவே ஆரண மறை முடி வித்தக தேவே
காரண
உயர்ந்த வரங்களைத் தரும் தலைவனே, வேத உபநிஷதங்களின் முடிவில் விளங்கும் ஞானியே, மூல காரணனே, - ஒரு மயிலைப் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே.
ஒப்பற்ற மயிலாப்பூரில்* வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே.