திருப்புகழ் 691 இகல வருதிரை (திருமயிலை)

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
இகல  வருதிரை  பெருகிய  சலநிதி 
நிலவு  முலகினி  லிகமுறு  பிறவியி 
னினிமை  பெறவரு  மிடருறு  மிருவினை  ......  யதுதீர 
இசையு  முனதிரு  பதமலர்  தனைமன 
மிசைய  நினைகிலி  யிதமுற  வுனதரு 
ளிவர  வுருகிலி  அயர்கிலி  தொழுகிலி  ......  உமைபாகர் 
மகிழு  மகவென  அறைகிலி  நிறைகிலி 
மடமை  குறைகிலி  மதியுணர்  வறிகிலி 
வசன  மறவுறு  மவுனமொ  டுறைகிலி  ......  மடமாதர் 
மயம  தடரிட  இடருறு  மடியனு 
மினிமை  தருமுன  தடியவ  ருடனுற 
மருவ  அருள்தரு  கிருபையின்  மலிகுவ  ......  தொருநாளே 
சிகர  தனகிரி  குறமக  ளினிதுற 
சிலத  நலமுறு  சிலபல  வசனமு 
திறைய  அறைபயி  லறுமுக  நிறைதரு  ......  மருணீத 
சிரண  புரணவி  தரணவி  சிரவண 
சரணு  சரவண  பவகுக  சயனொளி 
திரவ  பரவதி  சிரமறை  முடிவுறு  ......  பொருணீத 
அகர  உகரதி  மகரதி  சிகரதி 
யகர  அருளதி  தெருளதி  வலவல 
அரண  முரணுறு  மசுரர்கள்  கெடஅயில்  ......  விடுவோனே 
அழகு  மிலகிய  புலமையு  மகிமையும் 
வளமு  முறைதிரு  மயிலையி  லநுதின 
மமரு  மரகர  சிவசுத  அடியவர்  ......  பெருமாளே. 
  • இகல வருதிரை பெருகிய சலநிதி
    மாறுபட்டு எழும் அலைகள் பெருகிய கடல்கள்
  • நிலவும் உலகினில் இகமுறு பிறவியின் இனிமை பெற
    சூழ்ந்த இவ்வுலகில் இம்மையிலுள்ள பிறப்பின் இன்பத்தைப் பெறவும்,
  • வரும் இடருறும் இருவினை யதுதீர
    வருகின்ற துன்பத்தோடு மோதும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகள் நீங்கவும்,
  • இசையு முனதிரு பதமலர் தனை
    இணைந்த உன்னிரு பாத மலர்களை
  • மனமிசைய நினைகிலி
    மனம் பொருந்த நினையாதவன் யான்.
  • இதமுற வுனதருள் இவர வுருகிலி
    இன்பமுற உன் திருவருள் கைகூட உருகித் துதியாதவன் யான்.
  • அயர்கிலி தொழுகிலி
    பக்தியால் தளர்ச்சி அடையாதவனும், வணங்காதவனும் யான்.
  • உமைபாகர் மகிழு மகவென அறைகிலி
    உமாதேவியைப் பாகத்தில் வைத்த சிவபிரான் மகிழ்கின்ற குழந்தையே என்று கூறாதவன் யான்.
  • நிறைகிலி மடமை குறைகிலி
    திருப்தியே இல்லாத, பேதைமை குறையாதவன் யான்.
  • மதியுணர் வறிகிலி
    அறிவும், தெளிவும் அறியாதவன் யான்.
  • வசன மறவுறு மவுனமொடு உறைகிலி
    பேச்சற்றுப்போய் மெளன நிலையினில் இருக்காதவன் யான்.
  • மடமாதர் மயமது அடரிட
    அழகிய பெண்களின் மயக்கும் எழிலானது மனத்தில் இடம் பிடிக்க,
  • இடருறு மடியனும்
    அதனால் துன்பம் அடைகிற அடியேனும்,
  • இனிமை தருமுனது அடியவ ருடனுற மருவ
    இன்பத்தை நல்கும் உன் அடியார்களுடன் கூடிப் பொருந்தும்
  • அருள்தரு கிருபையின் மலிகுவ தொருநாளே
    திருவருளைத் தரும் உன் கிருபைக்கு ஆளாகும் ஒரு நாளும் கிடைக்குமோ?
  • சிகர தனகிரி குறமகள் இனிதுற
    உயர்ந்த மார்பினளான குறப்பெண் வள்ளி இனிமை அடையுமாறு
  • சிலத நலமுறு சிலபல வசனமு
    தோழன் போன்று அவளிடம் நன்மைமிக்க சில பல வார்த்தைகளை
  • திறைய அறைபயில் அறுமுக
    அமுதமென அள்ளி வீசி, பேச்சுப் பயின்ற ஆறுமுக வேளே,
  • நிறைதரும் அருள் நீத
    நிறைந்து விளங்கும் அருள் கொண்ட நீதிமானே,
  • சிரண புரண விதரண
    பெருமை நிறைந்த பூரண நிறைவே, தயாள குணமுடையோனே,
  • விசிரவண சரணு சரவண பவகுக
    நிரம்பிய கேள்வி உடையவனே, அடைக்கலம் புகுதற்குரிய இறைவனே, சரவணப்பொய்கையில் தோன்றியவனே, குகனே,
  • சயனொளி திரவ பர
    சிவபிரானின் ஒளியின் சாரமே, பரனே,
  • அதி சிர மறை முடிவுறு பொருள் நீத
    அதிக மேன்மை உடையோனே, வேதத்தின் முடிவான பொருளாக விளங்கும் நீதியனே,
  • அகர உகரதி மகரதி சிகரதி
    அகரம் போன்ற முதற்பொருளே, உகர சிவசக்தியாக விளங்கும் நல்லறிவே, மமகாரமாகிய ஆணவத்தைத் தகிப்பவனே, சிவமாகிய தூய அறிவே,
  • யகர அருளதி தெருளதி
    யகரமாகிய ஜீவாத்மாவில் விளங்குபவனே, அதிகமான அருளே, மிகுந்த ஞானமே,
  • வலவல அரண முரணுறும்
    மிகுந்த வல்லமை படைத்த காவற் கோட்டையில் இருந்த பகைமை பூண்ட
  • அசுரர்கள் கெடஅயில் விடுவோனே
    அசுரர்கள் அழியும்படி வேலைச் செலுத்தியவனே,
  • அழகும் இலகிய புலமையு மகிமையும்
    அழகும், விளங்கும் கல்வி ஞானமும், பெருமையும்,
  • வளமும் உறைதிரு மயிலையில் அநுதினம்
    செழிப்பும் நிலைத்த மயிலாப்பூரில் நாள் தோறும்
  • அமரும் அரகர சிவசுத அடியவர் பெருமாளே.
    வீற்றிருக்கும், ஹர ஹர கோஷத்துக்கு உரியவருமான, சிவபிரானின் மைந்தனே, அடியவர்கள்தம் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com