திருப்புகழ் 690 அறமிலா அதி (திருமயிலை)

தனன தானன தானன தந்தத் ...... தனதான
அறமி  லாவதி  பாதக  வஞ்சத்  ......  தொழிலாலே 
அடிய  னேன்மெலி  வாகிம  னஞ்சற்  ......  றிளையாதே 
திறல்கு  லாவிய  சேவடி  வந்தித்  ......  தருள்கூடத் 
தினமு  மேமிக  வாழ்வுறு  மின்பைத்  ......  தருவாயே 
விறல்நி  சாசரர்  சேனைக  ளஞ்சப்  ......  பொரும்வேலா 
விமல  மாதபி  ராமித  ருஞ்செய்ப்  ......  புதல்வோனே 
மறவர்  வாணுதல்  வேடைகொ  ளும்பொற்  ......  புயவீரா 
மயிலை  மாநகர்  மேவிய  கந்தப்  ......  பெருமாளே. 
  • அறமிலா அதி பாதக வஞ்சத் தொழிலாலே
    தர்மமே இல்லாத மிக்க பாவம் நிறைந்த வஞ்சனை கொண்ட செயல்களாலே,
  • அடியனேன்மெலிவாக
    அடியவனாகிய நான் உடல் தளர்ச்சி அடைந்தும்
  • மனஞ் சற்று இளையாதே
    மனம் மட்டும் கொஞ்சமும் சோர்வு அடையாமல்,
  • திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள்கூட
    வெற்றி விளங்கும் உனது செவ்விய பாதமலர்களை வணங்கிப் போற்றி உன் திருவருள் கிடைக்குமாறு
  • தினமுமே மிக வாழ்வுறும் இன்பைத் தருவாயே
    நாள்தோறும் நல்ல வாழ்வு ஏற்படும் இன்பத்தைத் தந்தருள்வாயாக.
  • விறல் நி சாசரர் சேனைகள் அஞ்சப் பொரும்வேலா
    வீரமுள்ள அசுரர்களின் படைகள் பயப்படும்படியாகப் போர் புரிந்த வேலனே,
  • விமல, மாது அபிராமி தருஞ்செய்ப் புதல்வோனே
    பரிசுத்தமானவனே, தாயார் அபிராமி தந்த செந்நிறத்துக் குழந்தையே,
  • மறவர் வாணுதல் வேடைகொளும் பொற்புயவீரா
    வேடர் குலத்தில் ஒளிபடைத்த நெற்றியுள்ள வள்ளிமீது வேட்கை கொண்ட அழகிய தோள்கள் அமைந்த வீரனே,
  • மயிலை மாநகர் மேவிய கந்தப் பெருமாளே.
    திருமயிலை* மாநகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com