தனனத் தனதன ...... தனதான
அயிலொத் தெழுமிரு ...... விழியாலே
அமுதொத் திடுமரு ...... மொழியாலே
சயிலத் தெழுதுணை ...... முலையாலே
தடையுற் றடியனு ...... மடிவேனோ
கயிலைப் பதியரன் ...... முருகோனே
கடலக் கரைதிரை ...... யருகேசூழ்
மயிலைப் பதிதனி ...... லுறைவோனே
மகிமைக் கடியவர் ...... பெருமாளே.
- அயில் ஒத்து எழும் இரு விழியாலே
வேலை நிகர்த்து எழுந்துள்ள இரண்டு கண்களாலும், - அமுது ஒத்திடும் அரு மொழியாலே
அமுதத்துக்கு ஒப்பான அருமையான பேச்சினாலும், - சயிலத்து எழு துணை முலையாலே
மலைக்கு இணையாக எழுந்துள்ள இரு மார்பகங்களாலும், - தடையுற்று அடியனு(ம்) மடிவேனோ
வாழ்க்கை தடைப்பட்டு, அடியேனும் இறந்து படுவேனோ? - கயிலைப் பதி அரன் முருகோனே
கயிலைப்பதியில் வீற்றிருக்கும் சிவபிரானின் குழந்தை முருகனே, - கடல் அக் கரை திரையருகே சூழ்
கடலின் கரையும், அலையும் அருகிலே சூழ்ந்திருக்கும் - மயிலைப் பதிதனில் உறைவோனே
திருமயிலைப்பதியில்* வீற்றிருப்பவனே, - மகிமைக்கு அடியவர் பெருமாளே.
பெருமை பொருந்திய அடியவர்களின் பெருமாளே.