தனதய்ய தானதன ...... தனதான
மருமல்லி யார்குழலின் ...... மடமாதர்
மருளுள்ளி நாயடிய ...... னலையாமல்
இருநல்ல வாகுமுன ...... தடிபேண
இனவல்ல மானமன ...... தருளாயோ
கருநெல்லி மேனியரி ...... மருகோனே
கனவள்ளி யார்கணவ ...... முருகேசா
திருவல்லி தாயமதி ...... லுறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே.
- மருமல்லி யார்குழலின் மடமாதர்
வாசனை வீசும் மல்லிகை மலர் நிறைந்த கூந்தலையுடைய இளம் பெண்களை - மருளுள்ளி நாயடியன்அலையாமல்
காம மயக்கத்தால் நினைந்து நினைந்து அடிநாயேன் அலைவுறாமல், - இரு நல்லவாகும் உனதடிபேண
நன்மை நல்கும் உன் இரண்டு திருவடிகளை விரும்பிப் போற்ற - இனவல்ல மான மனது அருளாயோ
தக்கதான பெருமையும் மானமும் உள்ள மனதினை அருளமாட்டாயோ? - கருநெல்லி மேனி அரி மருகோனே
கருநெல்லிக்காய் போல பச்சையும் கருப்பும் கலந்த நிறத்து மாலின் மருகனே, - கனவள்ளியார்கணவ முருகேசா
பெருமை வாய்ந்த வள்ளி தேவியின் கணவனே, முருகேசா, - திருவல்லிதாயம் அதில் உறைவோனே
திருவலிதாயம்* என்ற தலத்தில் வீற்றிருப்பவனே, - திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே.
விளங்குகின்ற பெருந்தவர்கள் போற்றும் பெருமாளே.