திருப்புகழ் 654 சிகரம் அருந்த (மாயாபுரி)

தனன தனந்த தானன ...... தனதான
தனன தனந்த தானன ...... தனதான
சிகர  மருந்த  வாழ்வது  ......  சிவஞானம் 
சிதறி  யலைந்து  போவது  ......  செயலாசை 
மகர  நெருங்க  வீழ்வது  ......  மகமாய 
மருவி  நினைந்தி  டாவருள்  ......  புரிவாயே 
அகர  நெருங்கி  னாமய  ......  முறவாகி 
அவச  மொடுங்கை  யாறொடு  ......  முனமேகிக் 
ககன  மிசைந்த  சூரியர்  ......  புகமாயை 
கருணை  பொழிந்து  மேவிய  ......  பெருமாளே. 
  • சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம்
    சிவாயநம என்ற பஞ்சாட்சரத்திலுள்ள 'சி'கரம் ஆகிய எழுத்தை உச்சரிப்பதால் கிடைக்கக்கூடியது சிவஞானமாகும்.
  • சிதறி யலைந்து போவது செயலாசை
    அந்த உச்சரிப்பால் அலைந்து அழிந்து போவன மனம், வாக்கு, காயம் இவற்றின் செயலும் ஆசைகளும் ஆகும்.
  • மகர நெருங்க வீழ்வது மகமாய
    மகரம் என்னும் எழுத்தை நெருங்க உச்சரிக்கும்போது வீழ்ந்து அழிவதுதான் மஹாமாயை.
  • மருவி நினைந்திடா அருள்புரிவாயே
    உன்னை தியானித்து அதன் பயனாக நினைப்பு மறப்பு இரண்டுமே இல்லாத நிலையை அருள் புரிவாயாக.
  • அகர நெருங்கின் ஆமயம் உறவாகி
    (வீரமஹேந்திரபுரத்தின்)* வீதிகளுக்கு மிக அருகே வந்தால் துன்பம் ஏற்பட்டு,
  • அவசமொடுங் கையாறொடும் முனம் ஏகி
    மயக்கத்துடனும், தன்செயல் அற்றும் முன்பு சூரன்அரசாண்ட காலத்தில் அவதியுற்றுச் சென்று,
  • ககனம் இசைந்த சூரியர்
    ஆகாயத்தில் இருந்த பன்னிரண்டு சூரியர்களும்
  • புக கருணை பொழிந்து
    உன்னிடம் தஞ்சம் புக (சூர சம்ஹாரம் செய்து) அவர்களுக்குக் கருணை பொழிந்தனையே.
  • மாயை மேவிய பெருமாளே.
    மாயாபுரியில்** வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com