திருப்புகழ் 627 பிறர் புகழ் இன்சொல் (குன்றக்குடி)

தனதன தந்தத் தனதன தந்தத்
தனதன தந்தத் ...... தனதான
பிறர்புக  ழின்சொற்  பயிலுமி  ளந்தைப் 
பருவம  தன்கைச்  ......  சிலையாலே 
பிறவித  ருஞ்சிக்  கதுபெரு  கும்பொய்ப் 
பெருவழி  சென்றக்  ......  குணமேவிச் 
சிறுமைபொ  ருந்திப்  பெருமைமு  டங்கிச் 
செயலும  ழிந்தற்  ......  பமதான 
தெரிவையர்  தங்கட்  கயலைவி  ரும்பிச் 
சிலசில  பங்கப்  ......  படலாமோ 
கெறுவித  வஞ்சக்  கபடமொ  டெண்டிக் 
கிலுமெதிர்  சண்டைக்  ......  கெழுசூரன் 
கிளையுடன்  மங்கத்  தலைமுடி  சிந்தக் 
கிழிபட  துன்றிப்  ......  பொருதோனே 
குறுமுநி  யின்பப்  பொருள்பெற  அன்றுற் 
பனமநு  வுஞ்சொற்  ......  குருநாதா 
குலகிரி  துங்கக்  கிரியுயர்  குன்றக் 
குடிவளர்  கந்தப்  ......  பெருமாளே. 
  • பிறர் புகழ் இன் சொல் பயிலும் இளந்தைப் பருவ மதன் கைச் சிலையாலே
    ஞானிகள் அல்லாத பிறர் புகழும், இனிய சொல்லைப் பேசும் வாலிபப் பருவமுள்ள மன்மதனுடைய கையில் உள்ள வில்லால்,
  • பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய்ப் பெரு வழி சென்று அக் குணம் மேவி
    பிறவியினால் உண்டாகும் சிக்கல்கள் பெருகும் பொய்யான பெரிய (காம) வழியில் போய் அந்தப் பொய்க் குணத்திலே பொருந்தி,
  • சிறுமை பொருந்திப் பெருமை முடங்கிச் செயலும் அழிந்து
    அதனால் சிறுமை அடைந்து, பெருமை சுருங்கி, செயல்கள் அழிந்து,
  • அற்பம் அது ஆன தெரிவையர் தங்கள் கயலை விரும்பிச் சிலசில பங்கப் படலாமோ
    அற்ப குணமுள்ள மாதர்களின் கயல் மீன் போன்ற கண்ணை விரும்பி, (அதனால்) சில சில அவமானங்களை அடையலாமோ?
  • கெறு வித வஞ்சக் கபடமொடு எண் திக்கிலும் எதிர் சண்டைக்கு எழு சூரன்
    கர்வமும், வஞ்சக எண்ணமும், சூதும் கொண்டு, எட்டுத் திசைகளிலும் எதிர்த்து போருக்கு எழுந்த சூரன்
  • கிளையுடன் மங்கத் தலை முடி சிந்தக் கிழி பட துன்றிப் பொருதோனே
    அவனுடைய சுற்றத்தாருடன் மங்கி அழிய, அவர்கள் தலை முடிகள் சிதைந்து கிழிபட, நெருங்கிச் சண்டை செய்தவனே,
  • குறு முநி இன்பப் பொருள் பெற அன்று உற்பன மநுவும் சொல் குரு நாதா
    குட்டை வடிவு உள்ள (அகத்திய) முனிவர் உண்மைப் பொருளை அறியும்படி அன்று மனத்தில் தோன்றிய மந்திரத்தை உபதேசித்த குருநாதனே,
  • குலகிரி துங்கக் கிரி உயர் குன்றக்குடி வளர் கந்தப் பெருமாளே.
    விளங்கும் மலையாக, பரிசுத்தமான மலையாக மேம்பட்டு விளங்கும் குன்றக் குடியில்* வீற்றிருந்து அருளும் கந்தப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com