தானா தானா தந்தன தத்தன
தானா தானா தந்தன தத்தன
தானா தானா தந்தன தத்தன ...... தனதான
நேசா சாரா டம்பர மட்டைகள்
பேசா தேயே சுங்கள மட்டைகள்
நீசா ளோடே யும்பழ கிக்கவர் ...... பொருளாலே
நீயே நானே யென்றொரு சத்தியம்
வாய்கூ சாதோ துங்க படத்திகள்
நேரா லேதா னின்றுபி லுக்கிகள் ...... எவர்மேலும்
ஆசா பாசா தொந்தரை யிட்டவர்
மேல்வீழ் வார்பால் சண்டிகள் கட்டழ
காயே மீதோ லெங்கு மினுக்கிகள் ...... வெகுமோகம்
ஆகா தாவே சந்தரு திப்பொழு
தோகோ வாவா வென்று பகட்டிக
ளாகா மோகா வம்பிகள் கிட்டிலு ...... முறவாமோ
பேசா தேபோய் நின்றுறி யிற்றயிர்
வாயா வாவா வென்று குடித்தருள்
பேரா லேநீள் கஞ்சன் விடுத்தெதிர் ...... வருதூது
பேழ்வாய் வேதா ளம்பக டைப்பகு
வாய்நீள் மானா ளுஞ்சர ளத்தொடு
பேயானாள் போர் வென்றெதி ரிட்டவன் ...... மருகோனே
மாசூ டாடா டும்பகை யைப்பகை
சூரா ளோடே வன்செரு வைச்செறு
மாசூ ராபா ரெங்கும ருட்பொலி ...... முருகோனே
வானா டேழ்நா டும்புகழ் பெற்றிடு
தேனா றேசூழ் துங்க மலைப்பதி
மாயூ ராவாழ் குன்றை தழைத்தருள் ...... பெருமாளே.
- நேச(ம்) ஆசார(ம்) ஆடம்பர(ம்) மட்டைகள் பேசாதே ஏசும்
க(ள்)ள மட்டைகள்
அன்பு, ஆசாரம், ஆடம்பரம் இவை பொருந்திய பயனிலிகள், பேசாமலிருந்து கொண்டே பிறரைப் பழிக்கின்ற கள்ள வீணிகள், - நீசாளோடேயும் பழகிக் கவர் பொருளாலே நீயே நானே
என்று ஒரு சத்தியம் வாய் கூசாது ஓதும் கபடத்திகள்
கீழ்க் குலத்து இழிந்தோர்களோடும் பழக, பறிக்கின்ற பொருளாலே, உன் மேல் ஆணை, என் மேல் ஆணை என்று ஆணையிட்டு வாய் கூசாமல் பேசுகின்ற வஞ்சக எண்ணத்தினர், - நேராலே தான் நின்று பிலுக்கிகள்
எதிரிலேயே நின்று தளுக்கு, ஆடம்பரம் செய்பவர்கள், - எவர் மேலும் ஆசா பாசா தொந்தரை இட்டவர் மேல்
வீழ்வார் பால் சண்டிகள்
யார் மேலும் ஆசையாகிய பந்தத்தைக் காட்டித் தொந்தரவு செய்து, அவர்கள் மேல் விழுபவர்களிடம் சண்டித்தனம் செய்பவர்கள், - கட்டழகு ஆயே மீ தோலெங்கு(ம்) மினுக்கிகள்
நல்ல பேரழகுடனே மேலே தோல் எங்கும் மினுக்குபவர்கள், - வெகு மோகம் ஆகாது ஆவேசம் தருது இப்பொழுது ஓகோ
வா வா என்று பகட்டிகள்
அதிக மோகம் வைக்கலாகாது, காம மயக்கம் இப்போது உண்டாகிறது, ஓகோ வாரும் வாரும் என்று (ஒரு பக்கம்) கூறி (மறு பக்கம்) வஞ்சிப்பவர்கள், - ஆகா(த) மோகா வம்பிகள் கிட்டிலும் உறவு ஆமோ
பொருந்தாத மோகம் தரும் வீணர்கள் ஆகிய வேசைகளின் அருகிலும் உறவு சம்பந்தம் ஆகுமோ? - பேசாதே போய் நின்று உறியில் தயிர் ஆ ஆ ஆ ஆ என்று
குடித்து
எவருக்கும் தெரியாமல் போய் நின்று, உறியிலிருந்த தயிரை ஆஹா ஆஹா என்று பருகி, - அருள் பேராலே நீள் கஞ்சன் விடுத்த எதிர் வரு தூது பேழ்
வாய் வேதாளம் பகடு ஐப் பகுவாய் நீள் மானாளும்
அருள் பேர் அளவுக்கு மாத்திரம் (உண்மையில் அருள் இல்லாது) வைத்து, பெரும் கம்சன் அனுப்பி எதிரில் விடுத்த தூதுவளாகிய, பெரிய வாயைக் கொண்ட (பூதனை என்னும்) பேய், பரந்த வியக்கத் தக்க பிளந்த வாயைக் கொண்ட பெரிய பெண்ணும் - சரளத்தோடு பேய் ஆ(னா)ள் போர் வென்று எதிரிட்டவன்
மருகோனே
எளிதாகவே பேய் ரூபம் எடுத்தவளாகிய அந்த அரக்கியின் போரை வென்று எதிர் நின்றவனாகிய கண்ணனின் மருகனே, - மாசு ஊடாடும் பகையைப் பகை சூராளோடே வன் செருவைச்
செறு மா சூரா
குற்றத்தில் ஊடாடி ஆடுகின்ற பகைவர்களையும், பகைத்து நின்ற சூரர்களையும் வலிய போரில் அழித்த மகா சூரனே, - பார் எங்கும் அருள் பொலி முருகோனே
பூமி முழுவதும் அருள் பாலித்து விளங்கும் முருகனே, - வான் நாடு ஏழ் நாடும் புகழ் பெற்றிடு தேன் ஆறே சூழ் துங்க
மலைப் பதி மாயூரா
வானாடு முதலான ஏழு பூமியும் புகழ்பெற்று விளங்கும் தேனாறு என்னும் நதி சூழ்ந்த பரிசுத்த மயூரமலைப் பதியில் உறைபவனே, - வாழ் குன்றை தழைத்து அருள் பெருமாளே.
தழைக்கும் குன்றக்குடியில்* வீற்றருளும் பெருமாளே.