திருப்புகழ் 611 ஆதிமக மாயி (ஊதிமலை)

தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
ஆதிமக  மாயி  யம்பை  தேவிசிவ  னார்ம  கிழ்ந்த 
ஆவுடைய  மாது  தந்த  ......  குமரேசா 
ஆதரவ  தாய்வ  ருந்தி  யாதியரு  ணேச  ரென்று 
ஆளுமுனை  யேவ  ணங்க  ......  அருள்வாயே 
பூதமது  வான  வைந்து  பேதமிட  வேய  லைந்து 
பூரணசி  வாக  மங்க  ......  ளறியாதே 
பூணுமுலை  மாதர்  தங்கள்  ஆசைவகை  யேநி  னைந்து 
போகமுற  வேவி  ரும்பு  ......  மடியேனை 
நீதயவ  தாயி  ரங்கி  நேசவரு  ளேபு  ரிந்து 
நீதிநெறி  யேவி  ளங்க  ......  வுபதேச 
நேர்மைசிவ  னார்தி  கழ்ந்த  காதிலுரை  வேத  மந்த்ர 
நீலமயி  லேறி  வந்த  ......  வடிவேலா 
ஓதுமறை  யாக  மஞ்சொல்  யோகமது  வேபு  ரிந்து 
ஊழியுணர்  வார்கள்  தங்கள்  ......  வினைதீர 
ஊனுமுயி  ராய்வ  ளர்ந்து  ஓசையுடன்  வாழ்வு  தந்த 
ஊதிமலை  மீது  கந்த  ......  பெருமாளே. 
  • ஆதிமக மாயி யம்பை
    முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும், அம்பாளும்,
  • தேவி சிவனார்மகிழ்ந்த ஆவுடைய மாது
    தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள்* என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார்
  • தந்த குமரேசா
    பெற்றருளிய குமாரக் கடவுளே,
  • ஆதரவதாய் வருந்தி
    அன்புடன் மனம் கசிந்து உருகி,
  • ஆதியருணேச ரென்று
    முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே என்று துதித்து,
  • ஆளும் உனையே வணங்க அருள்வாயே
    ஆட்கொள்கின்ற உன்னை வணங்க அருள்வாய்.
  • பூதமதுவான ஐந்து பேதமிடவே அலைந்து
    ஐந்து பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய இந்த உடம்போடு எங்கெல்லாமோ அலைந்து,
  • பூரண சிவாகமங்கள் அறியாதே
    நிறைவான சிவ ஆகமங்களைத் தெரிந்துகொள்ளாமல்,
  • பூணுமுலை மாதர் தங்கள்
    நகைகள் அணிந்த மார்புடைய பெண்களின்
  • ஆசைவகை யேநி னைந்து
    விதவிதமான ஆசைகளையே நினைந்து,
  • போகமுறவே விரும்பும் அடியேனை
    இன்பம் சுகிக்கவே விரும்பும் என்னை
  • நீதயவதாய் இரங்கி
    நீ மிக்க கருணை கொண்டு இரக்கப்பட்டு
  • நேசவருளே புரிந்து
    அன்போடு திருவருள் புரிந்து,
  • நீதிநெறியே விளங்க
    சைவ நீதியும் சன்மார்க்க நெறியும் விளங்குமாறு
  • உபதேச நேர்மை
    எனக்கு உபதேசம் செய்த தன்மையானது,
  • சிவனார் திகழ்ந்த காதிலுரை
    சிவபிரானின் விளங்கும் காதில் உரைத்த
  • வேத மந்த்ர
    ஓம் என்னும் பிரணவ மந்திரப் பொருளே ஆகும்.
  • நீலமயி லேறி வந்த
    அவ்வாறு எனக்கு உபதேசிக்க நீலமயிலில் ஏறி வந்தருளிய,
  • வடிவேலா
    கூர்மையான வேலாயுதத்தைக் கொண்ட கடவுளே,
  • ஓதுமறை யாகமஞ்சொல்
    ஓதப்படும் வேதங்கள், ஆகமங்கள் ஆகியவை கூறும்
  • யோகமதுவே புரிந்து
    சிவயோகத்தையே செய்து,
  • ஊழியுணர்வார்கள் தங்கள்
    விதியின் வழியை நன்கு உணரும் பெரியோர்களின்
  • வினைதீர
    வினைகள் தீருமாறு
  • ஊனும் உயிராய் வளர்ந்து
    அவர்களின் உடலோடும் உயிரோடும் கலந்து வளர்ந்து
  • ஓசையுடன் வாழ்வு தந்த
    கீர்த்தியுடன் சிவானுபவ வாழ்வைத் தந்த
  • ஊதிமலை* மீது உகந்த பெருமாளே.
    ஊதிமலை** மேல் உள்ளம் உவந்து வாழும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com