திருப்புகழ் 598 காலனிடத்து (திருச்செங்கோடு)

தான தனத் ...... தனதான
காலனிடத்  ......  தணுகாதே 
காசினியிற்  ......  பிறவாதே 
சீலஅகத்  ......  தியஞான 
தேனமுதைத்  ......  தருவாயே 
மாலயனுக்  ......  கரியானே 
மாதவரைப்  ......  பிரியானே 
நாலுமறைப்  ......  பொருளானே 
நாககிரிப்  ......  பெருமாளே. 
  • காலனிடத்து அணுகாதே
    யமனுடைய ஊரை நெருங்காத வகைக்கும்,
  • காசினியிற் பிறவாதே
    இந்தப் பூமியில் மீண்டும் பிறவாத வகைக்கும்,
  • சீலஅகத்திய ஞான
    நற்குணம் வாய்ந்த அகத்திய முநிவருக்கு நீ அருளிய ஞானோபதேசம் என்ற
  • தேனமுதைத் தருவாயே
    தேன் போன்று இனிக்கும் நல்லமிர்தத்தை எனக்கும் தந்தருள்க.
  • மாலயனுக்கு அரியானே
    திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே,
  • மாதவரைப் பிரியானே
    சிறந்த தவசிரேஷ்டர்களை விட்டுப் பிரியாதவனே,
  • நாலுமறைப் பொருளானே
    நான்கு வேதங்களின் மறை பொருளாக உள்ளவனே,
  • நாககிரிப் பெருமாளே.
    நாககிரியாகிய திருச்செங்கோட்டில்* எழுந்தருளியுள்ள பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com