தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்
கருவிற் பவமுற் றுவிதிப் படியிற்
புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் ...... திடிலாவி
புரியட் டகமிட் டதுகட் டியிறுக்
கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்
புரள்வித் துவருத் திமணற் சொரிவித் ...... தனலூடே
தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்
தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்
தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் ...... திடவாய்கண்
சலனப் படஎற் றியிறைச் சியறுத்
தயில்வித் துமுரித் துநெரித் துளையத்
தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் ...... துயர்தீராய்
பவனத் தையொடுக் குமனக் கவலைப்
ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற்
படரிச் சையொழித் ததவச் சரியைக் ...... க்ரியையோகர்
பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்
பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற்
பரவப் படுசெய்ப் பதியிற் பரமக் ...... குருநாதா
சிவனுத் தமனித் தவுருத் திரன்முக்
கணனக் கன்மழுக் கரனுக் ரரணத்
த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற் ...... குணனாதி
செகவித் தனிசப் பொருள்சிற் பரனற்
புதனொப் பிலியுற் பவபத் மதடத்
த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப் ...... பெருமாளே.
- புவனத் தொருபொற்றொடி சிற் றுதரக்
இந்தப் பூமியில் ஓர் அழகிய பெண்ணின் சிறிய வயிற்றில் - கருவிற் பவமுற்று விதிப் படியில்
கருவிலே தோற்றம் ஏற்பட்டு, விதியின் ஆட்சிப்படியே - புணர்துக்கசுகப் பயில்வுற்று மரித்திடில்
கூடுகின்ற துக்கத்தையும் சுகத்தையும் அநுபவித்து, இறந்தபின் - ஆவி புரியட்டகம் இட்டு
உயிரை புரி அஷ்டகம்* என்ற சூக்ஷ்ம தேகத்தில் புகுத்தி, - அதுகட்டியிறுக்கு அடி குத்தெனஅச்சம்விளைத்து
(யமலோகத்தில்) அந்த தேகத்தைக் கட்டி, அடி, குத்து என்றெல்லாம் பயத்தை உண்டுபண்ணி, - அலறப் புரள்வித்து வருத்தி மணற் சொரிவித்து
அலறி அழும்படி புரட்டி எடுத்து, வருத்தப்படுத்தி, சூடான மணலை உடலெல்லாம் சொரிவித்து, - அனலூடே தவனப் படவிட்டு
நெருப்புக்குள்ளே அவ்வுடலைச் சூடேறும்படியாக விட்டு, - உயிர்செக்கிலரைத்து
உயிரைச் செக்கில் இட்டுப் பிழிய அரைத்து, - அணிபற்களுதிர்த்து
வரிசையாக உள்ள பற்களை தட்டி உதிர்த்து, - எரிசெப் புருவைத் தழுவப் பணி
எரிகின்ற செம்பாலான உருவம் ஒன்றைத் தழுவும்படிச் செய்து, - முட்களில்கட்டியிசித்திட
முட்களில் கட்டி இழுத்திட, - வாய்கண் சலனப் படஎற்றி
வாயும் கண்ணும் கலங்கி அசையும்படியாக உதைத்து, - இறைச்சியறுத்து அயில்வித்து
மாமிசத்தை அறுத்து உண்ணும்படியாகச் செய்து, - முரித்து நெரித்து உளையத் தளையிட்டு
எலும்பை ஒடித்து, நொறுக்கி, வலிக்கும்படியாக காலில் விலங்கு பூட்டி, - வருத்தும் யம ப்ரகரத் துயர்தீராய்
துன்பப்படுத்தும் யம தண்டனை என்ற துயரத்தை நீக்கி அருள்வாயாக. - பவனத்தை யொடுக்கு மனக்கவலைப் ப்ரமையற்று
பிராணவாயுவை ஒடுக்கும் மனக்கவலையாம் மயக்கத்தை ஒழித்து, - ஐவகைப் புலனிற் கடிதிற் படரிச்சையொழித்த
ஐந்து புலன்களில் வேகமாகச் செல்கின்ற ஆசையை நீத்த, - தவச் சரியைக் க்ரியையோகர்
தவசீலர்களான சரியையாளர்கள் * 1 , கிரியையாளர்கள் * 2 , யோகிகள் * 3 , - பரிபக்குவர் நிட்டை நிவிர்த்தியினில் பரிசுத்தர்
ஞான * 4 முதிர்ச்சி கொண்டவர்கள், தியானம், துறவு மேற்கொண்ட பரிசுத்தர்கள், - விரத்தர்கருத்ததனிற் பரவப்படு
பற்றை நீக்கியவர்கள் இவர்களின் கருத்திலே வைத்துப் போற்றப்படும், - செய்ப் பதியிற் பரமக் குருநாதா
வயலூர்ப்பதியில் வாழும் குருநாதனே, பரமனுக்கும் குருநாதனே, - சிவன் உத்தமன் நித்த வுருத்திரன்
சிவபிரான், உத்தமன், அழிவில்லாத ருத்திரன், - முக் கணன் நக்கன்மழுக்கரன்
முக்கண்ணன், திகம்பரன் (திக்குக்களையே ஆடையாகப் புனைந்தவன்), மழு ஏந்திய கரத்தன், - உக்ர ரணத் த்ரிபுரத்தை யெரித்தருள்
கடுமையான போர்க்களத்தில் திரிபுரத்தை எரித்தருளிய - சிற் குணன் நிற்குணன் ஆதி
ஞான குணத்தவன், குணமில்லாதவன், ஆதி மூர்த்தி, - செகவித்தன் நிசப் பொருள்
உலகுக்கு வித்தான மூலப் பொருளானவன், உண்மைப் பொருளானவன், - சிற்பரன்அற்புதன் ஒப்பிலி மற் பவ
அறிவுக்கு எட்டாதவன், அற்புதன், தனக்கு உவமை இல்லாதவனாகிய சிவபெருமானிடத்தே தோன்றியவனே, - பத்ம தடத் த்ரிசிரப் புர வெற்புறை
தாமரைத் தடாகங்கள் உள்ள திரிசிராப்பள்ளி மலை மேல் அமரும் - சற் குமரப் பெருமாளே.
நல்ல குமரப் பெருமாளே.



