தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன ...... தந்ததான
பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள்
பரிவு போற்புணர் க்ரீடா பீடிகள்
புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் ...... கொங்கைமேலே
புடைவை போட்டிடு மாயா ரூபிகள்
மிடிய ராக்குபொ லாமூ தேவிகள்
புலையர் மாட்டும றாதே கூடிகள் ...... நெஞ்சமாயம்
கருதொ ணாப்பல கோடா கோடிகள்
விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள்
கலவி சாத்திர நூலே யோதிகள் ...... தங்களாசைக்
கவிகள் கூப்பிடு மோயா மாரிகள்
அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள்
கருணை நோக்கமி லாமா பாவிக ...... ளின்பமாமோ
குருக டாக்ஷக லாவே தாகம
பரம வாக்கிய ஞானா சாரிய
குறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முக ...... வன்பரான
கொடிய வேட்டுவர் கோகோ கோவென
மடிய நீட்டிய கூர்வே லாயுத
குருகு க்ஷேத்ரபு ரேசா வாசுகி ...... அஞ்சமாறும்
செருப ராக்ரம கேகே வாகன
சரவ ணோற்பவ மாலா லாளித
திரள்பு யாத்திரி யீரா றாகிய ...... கந்தவேளே
சிகர தீர்க்கம காசீ கோபுர
முகச டாக்கர சேணா டாக்ருத
திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.
- பொருளின் மேல் ப்ரிய காமா காரிகள் பரிவு போல் புணர்
க்ரீடா பீடிகள்
பொருளின் மேல் ஆசை கொண்ட காமமே உருவமாக ஆனவர்கள். அன்பு உடையவர்கள் போலச் சேரும் காம லீலைக்கு இருப்பிடம் ஆனவர்கள். - புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் கொங்கை மேலே
புடைவை போட்டிடு மாயா ரூபிகள்
ஆண்கள் கூட்டத்தில் வெட்கப்படாத செருக்கினர். மார்பின் மேல் புடைவையை எடுத்தெடுத்துப் போடும் மாயா உருவத்தினர். - மிடியர் ஆக்கு பொ(ல்)லா மூதேவிகள் புலையர் மாட்டும்
அறாதே கூடிகள் நெஞ்ச மாயம் கருத ஒணா பல கோடா
கோடிகள்
(தம்மிடம் வருவரை) வறியராக்குகின்ற பொல்லாத மூதேவிகள். கீழ் மக்களிடத்தும் மறுக்காமல் சேர்பவர்கள். (தமது) மனதில் வஞ்சனை (எண்ணங்கள்) கணக்கிட முடியாத பல கோடிக் கணக்காக உடையவர்கள். - விரகினால் பலர் மேல் வீழ் வீணிகள் கலவி சாத்திர நூலே
ஓதிகள் தங்கள் ஆசைக் கவிகள் கூப்பிடும் ஓயா
மாரிகள்
தந்திரத்தால் பலர் மேல் விழுகின்ற பயனற்றவர்கள். கலவி சாத்திர நூல்களையே படிப்பவர்கள். தங்களுக்கு ஆசையான பாடல்களைப் பாடும் கவிகளை அழைப்பதில் ஓயாத மழை போன்றவர்கள். - அவசம் ஆக்கிடு பேய் நீர் ஊணிகள் கருணை நோக்கம்
இ(ல்)லா மா பாவிகள் இன்பம் ஆமோ
தன் வசத்தை இழக்கச் செய்கின்ற கள்ளை உண்பவர்கள். இரக்கமுள்ள பார்வையே இல்லாத பெரிய பாவிகளாகிய விலை மகளிருடன் கூடுதல் நல்லதாகுமோ? - குரு கடாக்ஷ கலா வேத ஆகம பரம வாக்கிய ஞான ஆசாரிய
குறைவு தீர்த்து அருள் சுவாமி
குரு மூர்த்தியாகக் கடைக்கண் வைத்து அருள வல்லவனே, வேதம் ஆகமம் ஆகிய சிறப்பான மொழிகளை உபதேசிக்க வல்ல ஞான போதகனே, எனது குறைகள் எல்லாவற்றையும் நீக்க வல்ல ஸ்வாமியே, - கார்முக வன்பரான கொடிய வேட்டுவர் கோகோகோ
எனமடிய நீட்டிய கூர் வேலாயுத
வில்லை ஏந்திய வலிமையாளரான பொல்லாத வேடர்கள் கோகோவென்று கூச்சலிட்டு இறக்கும்படி செலுத்திய கூர்மையான வேலாயுதனே, - குருகு த்ர புர* ஈசா வாசுகி அஞ்ச மாறும் செரு பராக்ரம
கேக(ய)** வாகன
கோழியூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் ஈசனே, வாசுகி என்னும் பாம்பு பயப்படும்படி எதிர்த்து போர் செய்யும் வலிமை பொருந்திய மயிலை வாகனமாக உடையவனே, - சரவண உற்பவ மாலால் லாளித திரள் புய அத்திரி ஈராறு
ஆகிய கந்தவேளே
சரவணப் பொய்கையில் தோன்றியவனே, பெருமையால் அழகு பெற்ற திரண்ட புய மலைகள் பன்னிரண்டு கொண்ட கந்த வேளே, - சிகர தீர்க்க மகா சீ கோபுர முக சடா அக்கர
சிகரங்கள் நீண்ட பெரிய விசேஷமான கோபுர வாயிலில் வீற்றிருக்கும் (சரவணபவ என்ற) ஆறு அட்சரங்களுக்கு உரியவனே, - சேண் நாடு ஆக்ருத திரிசிராப்ப(ள்)ளி வாழ்வே தேவர்கள்
தம்பிரானே.
விண்ணுலகம் போல் உயர்ந்த திரிசிராப்பள்ளியில் வீற்றிருப்பவனே, தேவர்கள் தம்பிரானே.



