தான தத்த தனந்த தனா தனாதன
தான தத்த தனந்த தனா தனாதன
தான தத்த தனந்த தனா தனாதன ...... தனனதான
ஓல மிட்ட சுரும்பு தனா தனாவென
வேசி ரத்தில் விழுங்கை பளீர் பளீரென
வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென ...... விரகலீலை
ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென
வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென
ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென ...... அமுதமாரன்
ஆல யத்து ளிருந்து குபீர் குபீரென
வேகு திக்க வுடம்பு விரீர் விரீரென
ஆர முத்த மணிந்து அளா வளாவென ...... மருவுமாதர்
ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவ
சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம்
ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென ...... வகைவராதோ
மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென
மேலெ ழுச்சி தரும்பல் வெளேல் வெளேலென
வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென ...... எதிர்கொள்சூரன்
மார்பு மொக்க நெரிந்து கரீல் கரீலென
பேய்கு திக்க நிணங்கள் குழூ குழூவென
வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோவென ...... உதிரமாறாய்
வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலென
மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென ...... விசைகள்கூற
வேலெ டுத்து நடந்த திவா கராசல
வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ்
வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ ...... குமரவேளே.
- ஓலம் இட்ட சுரும்பு தனா தனா எனவே சிரத்தில் விழும் கை
பளீர் பளீர் என ஓசை பெற்ற சிலம்பு கலீர் கலீர் என
ஒலிக்கின்ற வண்டு தனா தனா என்று ஒலியுடன், தலையில் உள்ள மலரை நாடி விழும் சப்தம் பளீர் பளீர் என்று கேட்க, ஓசைகளைச் செய்யும் கால்களில் அணிந்த சிலம்பு கலீர் கலீர் என்று சப்திக்க, - விரக லீலை ஓர் மிடற்றில் எழும் புள் குகூ குகூ என வேர்வை
மெத்த எழுந்து சலா சலா என ரோம குச்சு நிறைந்து சிலீர்
சிலீர் என
காம விளையாட்டின் போது, ஒப்பற்ற கழுத்தில் உண்டாகின்ற புட் குரல்கள் குகூ குகூ என்று ஒலிக்க, வியர்வை மிக்க உண்டாகி சலா சலா என்று கசகசக்க, மயிர்க் கூச்சல் மிகுந்து சிலீர் சிலீர் எனச் சிலிர்த்துப் புளகம் கொள்ள, - அமுதமாரன் ஆலயத்துள் இருந்து குபீர் குபீர் எனவே
குதிக்க உடம்பு விரீர் விரீர் என ஆர முத்தம் அணிந்து அளா
அளா என மருவு மாதர்
மன்மதன் தனது இருப்பிடத்திலிருந்து குபீர் குபீர் என்று வெளிவந்து பாய, உடல் காம வேட்கையால் விருவிருப்பை அடைய, முத்து மாலை அணிந்தவராய் அளவில்லாமல் கொடுங்கள் என்று கேட்டுச் சேர்கின்ற விலைமாதர்களின் - ஆசையில் கை கலந்து சுமா சுமா பவ சாகரத்தில் அழுந்தி
எழா எழாது உளம் ஆறு எழுத்தை நினைந்து குகா குகா என
வகை வராதோ
ஆசையில் நன்கு கலந்து உறவாடி, அடிக்கடி பிறவிப் பெருங் கடலில் மூழ்கி எழாமல், மனது மூலப் பொருளாகிய (சரவணபவ என்ற) ஆறு எழுத்துக்களை நினைத்து குகா குகா என்று கூறும்படியான பேறு எனக்கு வராதோ? - மாலை இட்ட சிரங்கள் செவேல் செவேல் என வேல் எழுச்சி
தரும் பல் வெளேல் வெளேல் என வாகை பெற்ற புயங்கள்
கறேல் கறேல் என எதிர் கொள் சூரன்
மாலைகள் அணிந்த தலைகள் (ரத்தம் பெருகுவதால்) செக்கச் சிவக்க, வேல் போன்ற கூரிய பற்கள் வெள்ளை வெளேர் என்று ஒளி தர, வெற்றிமாலைகள் முன்பு சூடிய தோள்கள் கன்னங் கறேல் என்று கரிய நிறமாக எதிர்த்து வந்த சூரன் - மார்பும் ஒக்க நெரிந்து கரீல் கரீல் என பேய் குதிக்க
நிணங்கள் குழூ குழூ என வாய் புதைத்து விழுந்து ஐயோ
ஐயோ என உதிரம் ஆறாய்
மார்பு ஒருமிக்க நொடிந்து கரிந்து போக, பேய்கள் குதித்து மகிழும்படி மாமிசங்கள் கும்பல் கும்பலாகக் கிடக்க, அசுரர்கள் வாய் அடைத்துப்போய்க் கீழே விழுந்து ஐயோ ஐயோ என்று கதறி அழ, ரத்தம் ஆறாகப் பெருக, - வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீல் என மாலை வெற்பும்
இடிந்து திடீல் திடீல் என மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா
ஐயா என இசைகள் கூற வேல் எடுத்து நடந்த திவாகரா
கடல் வற்றிப்போய் வறண்டு சுறீல் என்று சுருங்க, மாயை மயக்கங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலை இடிந்து திடீல் திடீல் என்று கீழே விழ, மேலான தேவர்கள் முதலியோர் ஐயா ஐயா என்று பாட்டுக்களைப் பாட, வேலாயுதத்தை ஏந்தி நடந்த ஞான சூரியனே, - அசல வேடுவப் பெண் மணந்த புய அசலா தமிழ் வேத
வெற்பில் அமர்ந்த க்ருபாகரா சிவ குமர வேளே.
வள்ளிமலைக் குறப் பெண்ணாகிய வள்ளியை மணம் புரிந்த மலை போன்ற புயங்களை உடையவனே, தமிழ் முழங்கும் வேதகிரியில் (திருக்கழுக்குன்றத்தில்*) வீற்றிருக்கும் அருளாளனே, சிவக் குமாரனாகிய தலைவனே.



