திருப்புகழ் 544 வேத வெற்பிலே (திருக்கழுக்குன்றம்)

தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான
தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான
வேத  வெற்பி  லேபு  னத்தில்  மேவி  நிற்கு  ......  மபிராம 
வேடு  வச்சி  பாத  பத்ம  மீது  செச்சை  ......  முடிதோய 
ஆத  ரித்து  வேளை  புக்க  ஆறி  ரட்டி  ......  புயநேய 
ஆத  ரத்தோ  டாத  ரிக்க  ஆன  புத்தி  ......  புகல்வாயே 
காது  முக்ர  வீர  பத்ர  காளி  வெட்க  ......  மகுடாமா 
காச  முட்ட  வீசி  விட்ட  காலர்  பத்தி  ......  யிமையோரை 
ஓது  வித்த  நாதர்  கற்க  வோது  வித்த  ......  முநிநாண 
ஓரெ  ழுத்தி  லாறெ  ழுத்தை  யோது  வித்த  ......  பெருமாளே. 
  • வேத வெற்பிலே
    வேதகிரியாகிய திருக்கழுக்குன்றத்திலும்,
  • புனத்தில் மேவி நிற்கும்
    வள்ளிமலையில் உள்ள தினைப்புனத்திலும் விரும்பி இருக்கும்
  • அபிராம
    பேரழகு உடையவனே,
  • வேடுவச்சி பாத பத்ம மீது
    வேடுவச்சி வள்ளியின் பாதத் தாமரையின் மீது
  • செச்சை முடிதோய ஆதரித்து
    வெட்சி மாலை அணிந்த உன் திருமுடி படும்படியாக காதலித்து,
  • வேளை புக்க
    ஆட்கொள்ளும் வேளை இது என்று சமயத்தில் தினைப்புனத்துக்குள் புகுந்த
  • ஆறிரட்டி புயநேய
    பன்னிரு தோள்களை உடைய நண்பனே,
  • ஆதரத்தோடு ஆதரிக்க
    ஆர்வத்துடன் நான் உன்னை அன்பு வழிபாடு செய்ய
  • ஆன புத்தி புகல்வாயே
    உரிய புத்தியை உபதேச மொழியாகச் சொல்லி அருள்வாயாக.
  • காதும் உக்ர வீர பத்ர காளி
    வெகுண்டு வந்த வீரபத்திரரின் துணைவியான காளி
  • வெட்க மகுடத்தை ஆகாச முட்ட வீசி விட்ட காலர்
    நாணம் அடையும்படி தமது கிரீடத்தை வானில் முட்டும்படி உயரமாக வீசி விட்டு (ஊர்த்துவ தாண்டவம்) ஆடிய பாதத்தை உடைய பரமசிவன்,*
  • பத்தி இமையோரை
    பக்தியுள்ள தேவர்களுக்கு
  • ஓது வித்த நாதர் கற்க
    கற்பித்த நாதராகிய சிவபெருமான், உன்னிடம் பாடம் கேட்கவும்,
  • ஓது வித்த முநிநாண
    சிவனால் ஓதுவிக்கப்பட்ட பிரமன் வெட்கமடையவும்,
  • ஓரெழுத்தில் ஆறெழுத்தை
    ஓரெழுத்தாகிய ஒப்பற்ற ஓம்கார ப்ரணவத்தில், ஆறெழுத்தாகிய ஓம்நமசிவாய அல்லது சரவணபவ மந்திரமே அடங்கியுள்ள தன்மையை விளக்கி
  • ஓது வித்த பெருமாளே.
    அந்தச் சிவனுக்கே உபதேசித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com