திருப்புகழ் 542 எழுகு நிறை நாபி (திருக்கழுக்குன்றம்)

தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
எழுகுநிறை  நாபி  அரிபிரமர்  சோதி 
யிலகுமரன்  மூவர்  ......  முதலானோர் 
இறைவியெனு  மாதி  பரைமுலையி  னூறி 
யெழுமமிர்த  நாறு  ......  கனிவாயா 
புழுகொழுகு  காழி  கவுணியரில்  ஞான 
புநிதனென  ஏடு  ......  தமிழாலே 
புனலிலெதி  ரேற  சமணர்கழு  வேற 
பொருதகவி  வீர  ......  குருநாதா 
மழுவுழைக  பால  டமரகத்ரி  சூல 
மணிகரவி  நோத  ......  ரருள்பாலா 
மலரயனை  நீடு  சிறைசெய்தவன்  வேலை 
வளமைபெற  வேசெய்  ......  முருகோனே 
கழுகுதொழு  வேத  கிரிசிகரி  வீறு 
கதிருலவு  வாசல்  ......  நிறைவானோர் 
கடலொலிய  தான  மறைதமிழ்க  ளோது 
கதலிவன  மேவு  ......  பெருமாளே. 
  • எழுகு
    ஏழு உலகங்களையும்
  • நிறை நாபி அரி
    தன் வயிற்றிலே அடக்கிய திருமால்,
  • பிரமர் சோதி யிலகுமரன்
    பிரமன், ஜோதிமயமான ருத்திரன்,
  • மூவர் முதலானோர்
    ஆகிய மூவருக்கும் மற்ற தேவர்களுக்கும்
  • இறைவியெனு மாதி பரை
    தலைவியான ஆதி பராசக்தியின்
  • முலையினூறி எழும் அமிர்த
    திருமார்பிலிருந்து சுரந்த அமிர்தமாம் ஞானப்பால்
  • நாறு கனிவாயா
    மணக்கும் கனி போன்ற வாயை உடையவனே,
  • புழுகொழுகு காழி
    புனுகு வாசனை வீசும் சீர்காழிப் பகுதியில்
  • கவுணியரில் ஞான புநிதனென
    கவுணியர் குடியில் ஞானசம்பந்தனாக அவதரித்து
  • தமிழாலே ஏடு புனலிலெதிர் ஏற
    தமிழ்ப்பாசுர மகிமையாலே ஏடு வைகை ஆற்றின் நீரில் எதிர் ஏற்றத்தில் செல்லவும்,
  • சமணர்கழுவேற
    சமணர்கள் கழுவில் ஏறவும்,
  • பொருதகவி வீர
    தமிழினால் வாதப் போர் புரிந்த கவிவீரன் ஞானசம்பந்தனே,
  • குருநாதா
    குருநாதனே,
  • மழு உழை கபால டமரக த்ரிசூலம்
    கோடரியையும், மானையும், பிரம கபாலத்தையும், உடுக்கையையும், திரிசூலத்தையும்
  • அணிகர விநோதர் அருள்பாலா
    ஏந்திய கரங்கள் கொண்ட அற்புதமூர்த்தி சிவபிரான் அருளிய திருக்குமாரனே,
  • மலரயனை நீடு சிறைசெய்து
    தாமரை மலரில் உள்ள பிரமனை பெருஞ்சிறையில் அடைத்து,
  • அவன் வேலை வளமைபெறவே
    அவனது படைப்புத் தொழிலைச் செம்மையாகச்
  • செய் முருகோனே
    செய்தருளிய முருகக் கடவுளே,
  • கழுகுதொழு
    கழுகுகள்* தொழுகின்ற
  • வேதகிரி சிகரி வீறு
    வேதமலையின் உச்சியில் விளங்கும்,
  • கதிருலவு வாசல் நிறைவானோர்
    ஒளிவீசும் வாசலில் நிறைந்த தேவர்கள்
  • கடலொலிய தான
    கடலின் அலை ஓசை போன்று ஓம் என்று
  • மறைதமிழ்க ளோது
    வேதமந்திரங்களையும் தமிழ் மறைகளையும் ஓதுகின்ற,
  • கதலிவனம் மேவு பெருமாளே.
    கதலிவனம்** (என்ற திருக்கழுக்குன்றத்தில்) வாழுகின்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com