திருப்புகழ் · 496இருளும் ஓர்கதிரணு (சிதம்பரம்)
iruLumOrkadhiraNu
தனன தானன தனன தானன
தனன தானன ...... தனதான
இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ
னிடம தேறியெ ...... னிருநோயும்
எரிய வேமல மொழிய வேசுட
ரிலகு மூலக ...... வொளிமேவி
அருவி பாயஇ னமுத மூறவுன்
அருளெ லாமென ...... தளவாக
அருளி யேசிவ மகிழ வேபெற
அருளி யேயிணை ...... யடிதாராய்
பரம தேசிகர் குருவி லாதவர்
பரவை வான்மதி ...... தவழ்வேணிப்
பவள மேனியர் எனது தாதையர்
பரம ராசியர் ...... அருள்பாலா
மருவி நாயெனை யடிமை யாமென
மகிழ்மெய் ஞானமு ...... மருள்வோனே
மறைகு லாவிய புலியுர் வாழ்குற
மகள்மெ லாசைகொள் ...... பெருமாளே.
பத உரை · word meanings
- இருளும் ஓர்கதிரணுகொணாத
இருட்டும் சூரிய ஒளியின் ஒரு கதிரும் புகமுடியாத - பொனிடம தேறி
தேவலோகத்தை யான் அடைந்து, - என் இருநோயும் எரியவே
என் நல்வினை, தீவினை என்ற இரு நோய்களும் எரிந்து போகவும், - மல மொழியவே
ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் ஒழிந்திடவும், - சுடரிலகு மூலகவொளிமேவி
ஒளி பொருந்திய மூலாதார அக்கினி பொருந்தி, - அருவி பாயஇ னமுத மூற
அருவி பாய்வது போல இனிய தேவாமிர்தம் ஊற, - உன் அருளெலாம் எனது அளவாக
உன் திருவருள் யாவும் என் வசமாகும்படியாக - அருளியே சிவ மகிழவேபெற
உதவியருளி, சிவஞானத்தை யான் மகிழ்ந்து பெறுமாறு - அருளி யேயிணை யடிதாராய்
அருள் செய்து உன் இரு திருவடிகளையும் தருவாயாக. - பரம தேசிகர் குருவிலாதவர்
மேலான தக்ஷிணாமூர்த்தி தேசிகரும், தமக்கு ஒரு குரு இல்லாதவரும், - பரவை வான்மதி தவழ்வேணி
பரந்த கடல் போன்ற கங்கையும் வானத்துச் சந்திரனும் தவழ்கின்ற சடையரும், - பவள மேனியர் எனது தாதையர்
பவள நிற மேனியருமான எனது தந்தையாரும், - பரம ராசியர் அருள்பாலா
பரம ரகசியமாகும் சிதம்பர ரகசியருமான சிவபிரான் அருளிய பாலனே, - மருவி நாயெனை யடிமை யாமென
அடியேனிடம் வந்து கூடி, என்னை ஓர் அடிமையாக ஏற்றுக் கொண்டு, - மகிழ்மெய் ஞானமும் அருள்வோனே
மகிழ்ந்து மெய்ஞ்ஞானத்தை அருள்வோனே, - மறைகுலாவிய புலியுர் வாழ்
வேதங்கள் விளங்கும் புலியூர் சிதம்பரத்தில் வாழ்பவனே, - குற மகள்மெ லாசைகொள் பெருமாளே.
குறப்பெண் வள்ளிமீது ஆசை கொண்ட பெருமாளே.



