திருப்புகழ் · 495இரசபா கொத்தமொழி (சிதம்பரம்)

irasabAkoththamozhi

தனதனா தத்ததன தனதனா தத்ததன
தனதனா தத்ததன தானனந் தனன
தனதனா தத்ததன தனதனா தத்ததன
இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை
யிணையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர்
எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்க
ளெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர்
எழுதுதோ டிட்டசெவி பவளநீ லக்கொடிக
ளிகலியா டப்படிக மோடடும் பொனுரு ...... திங்கள்மேவும்
இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழி
லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி
யிணைசொல்க்ரீ வத்தரள வினவொள்தா லப்பனையி
னியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி
யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட
ரிகலியா ரத்தொடையு மாருமின் பரச ...... தங்கமார்பின்
வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின்
வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழிய
மடுவுரோ மக்கொடியென் அளிகள்சூழ் வுற்றநிரை
மருவுநூ லொத்தஇடை யாரசம் பையல்குல்
மணமெலா முற்றநறை கமலபோ துத்தொடையென்
வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை ...... ரம்பைமாதர்
மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு
மதனபா ணத்தினுடன் மேவிமஞ் சமிசை
வதனம்வேர் வுற்றவிர முலைகள்பூ ரிக்கமிடர்
மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளி
வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ்
வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையை ...... தந்துஆள்வாய்
முரசுபே ரித்திமிலை துடிகள்பூ ரித்தவில்கள்
முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை
முகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறை
முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர்
முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பிணமொ
டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை ...... யெங்குமோட
முடுகிவேல் விட்டுவட குவடுவாய் விட்டமரர்
முநிவரா டிப்புகழ வேதவிஞ் சையர்கள்
முழவுவீ ணைக்கினரி யமுர்தகீ தத்தொனிகள்
முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள்
முலைகள்பா ரிக்கவுட னடனமா டிற்றுவர
முடிபதா கைப்பொலிய வேநடங் குலவு ...... கந்தவேளே
அரசுமா கற்பகமொ டகில்பலா இர்ப்பைமகி
ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன்
அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்க
ளளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய
அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்க
ளடையுமே ரக்கனக நாடெனும் புலியுர் ...... சந்தவேலா
அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவி
யளிகுலா வுற்றகுழல் சேர்கடம் புதொடை
அரசிவே தச்சொருபி கமலபா தக்கரவி
யரியவே டச்சிறுமி யாளணைந் தபுகழ்
அருணரூ பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ
டணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந் துபுணர் ...... தம்பிரானே.

பத உரை · word meanings

  • இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை இணையிலா சத்தி விழியார் பசும் பொன் நீரார்*
    சுவை நிறைந்த சர்க்கரை போன்ற சொற்கள், அமுத மாணிக்கம் போன்ற பற்கள், நிகரில்லாத வேல் போன்ற கண்களை உடையவர்கள். பசும் பொன் போன்ற தன்மை உடையவர்கள்.
  • எழிலி நேர் ஒத்த இருள் அளக பாரச் செயல்கள் எழுத ஒணாதப் பிறையினார் அரும் புருவர்
    மேகத்துக்கு ஒப்பான கருத்த கூந்தல் பாரத்தை உடைய செயலினர். எழுதற்கு முடியாத பிறை போன்ற அரிய புருவத்தினர்.
  • எழுது தோடிட்ட செவி பவள நீலக் கொடிகள் இகலி ஆடப் படிகமோடு அடும் பொன் உரு திங்கள் மேவும் இலவு தாவித்த இதழ்
    எழுதினது போல் அமைந்துள்ள தோடு இட்ட காது. பவளக் கொடியும் நீலக் கொடியும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு ஆடுவது போல் படிகத்தை வென்ற தெளிவும், பொன்னின் உருவமும் கொண்டதுமான மதி போன்ற முகத்தில் உள்ள இலவம் பூப் போல அமைந்துள்ள வாயிதழ்.
  • குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசிக் கமுகு மால சங்கின் ஒளி இணை சொல் க்ரீவத் தரள இன
    குமிழம் பூவுக்கு ஒப்பான அழகு பெற்று விளங்கும் மூக்கு. கமுகு போன்றும் திருமாலின் ஒளிவீசும் சங்குக்கு இணை சொல்லக் கூடியதுமான கழுத்தில் முத்து மாலைக் கூட்டம்.
  • ஒள் தாலப் பனையின் இயல் கலா புத்தகம் ஒடு ஏர் சிறந்த அடி
    ஒளி வீசும் பனை ஓலையால் அமைந்துள்ள பெருமை வாய்ந்த நூல் எழுதப்பட்ட ஓலைப் புத்தகம் போல அழகிய சிறந்த பாதம்.
  • இணை இலா ஆனைக் குவடு எனா ஒளி நிலா துத்தி படர் இகலி ஆரத் தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில் வரிகள் தாபித்த முலை
    ஒப்பு இல்லாத யானை, மலை என்று சொல்லும்படியானதும், ஒளி நிலவுகின்றதும், தேமல் படர்ந்ததும், பிணைந்துள்ள முத்து மாலை அணிந்துள்ளதும், நிறைந்த இன்ப ரசத்தைக் கொண்டுள்ளதுமான தங்க வடிவான மார்பில் ரேகைகள் கொண்டதுமான மார்பகங்கள்.
  • இசைய ஆலின் தளிரின் வயிறு நாபிக் கமலம் ஆம் எனும் சுழிய மடு உரோமக் கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை
    சொல்லத்தக்க ஆலின் தளிர் இலை போன்ற வயிறு. கொப்பூழ் என்பது தாமரை மொட்டுப் போன்றது. நீர்ச்சுழி, மடு, மயிர்க் கொடி என்கின்ற வண்டுகள் சூழ்ந்த வரிசை. பொருந்திய நூல் போன்று நுண்ணியதான இடுப்பு நிறைந்த செழிப்புள்ள மின்னல்.
  • அல்குல் மணம் எலாம் உற்ற நறை கமல போதுத் தொடை என் வளமை ஆர்புக் கதலி சேரு செம் பொன் உடை ரம்பை மாதர் மயல் அதால் இற்று அடியென் அவர்கள் பால் உற்று
    பெண்குறி நறுமணம் எல்லாம் உள்ள தேன் நிறை தாமரைப் பூ. தொடை என்பது செழிப்பு நிறைந்த வாழைத் தண்டு. இங்ஙனம் சேர்ந்துள்ள செம்பொன் ஆடை அணிந்துள்ள, தெய்வப் பெண்ணாகிய ரம்பை போன்ற விலைமாதர்களின் காம மயக்கத்தால் அடியேனாகிய நான் மனம் ஒடிந்து அவர்களிடமே பொருந்தி இருந்து,
  • வெகு மதன பாணத்தினுடன் மேவி மஞ்ச மிசை வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர் மயில் புறா தத்தை குயில் போல் இலங்க
    நிரம்ப மன்மதனுடைய பாணங்களால் தாக்கப்பட்டு, கட்டிலின் மேல் முகம் வேர்வை அடைந்து விளங்க, மார்பகங்கள் புளகித்துப் பூரிக்க, கழுத்தினின்றும் மயில், புறா, கிளி, குயில் முதலியனவற்றைப் போல (புட்குரல்கள்) விளங்கி ஒலிக்க,
  • அமளி வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய்
    படுக்கைப் பேச்சாய் நிறைந்து, இடை துவள, அந்த மாதர்களுடைய மோகத்துள் அமிழ்கின்ற குண நிலைமை எல்லாம் விட்டு ஒழிவதற்காக, (நல்ல) சிந்தனைகளை எனக்குத் தந்து அருளுக.
  • முரசு பேரித் திமிலை துடிகள் பூரித் தவில்கள் முருடு காளப் பறைகள் தாரை கொம்பு வளை முகடு பேர் உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த
    முரசு, பேரிகை, திமிலை முதலிய பறை வகைகள், உடுக்கைகள், ஊதுங் கருவி வகை, தவில் முதலிய மேள வகைகள், மத்தள வகைகள், எக்காளம், நீண்ட ஊது குழல், ஊதுங் கொம்பு, சங்கு ஆகியவை ஆகாச முகட்டையும் அசைக்கும்படி ஒலியாய் இடிகள் இடிப்பது போல முழங்க,
  • மறை முதுவர் பாடிக் குமுறவே இறந்த அசுரர் முடிகளோடு எற்றி அரி இரதம் யானைப் பிணம் ஒடு இவுளி வேலைக் குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட
    வேதம் வல்ல பெரியோர்கள் பாடி ஒலி எழுப்ப, இறந்து போன அசுரர்களின் தலைகளை அடித்துத் தள்ளி, சிங்கம், தேர், யானைப் பிணங்களோடு, குதிரை ஆகியவை ரத்தக் கடலில் மிதந்து பல திக்குகளிலும் ஓட,
  • முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர் முநிவர் ஆடிப் புகழ வேத விஞ்சையர்கள் முழுவு வீணைக் கி(ன்)னரி அமுர்த கீதத் தொனிகள் முறையதாகப் பறைய ஓதி
    வேகமாக வேலாயுதத்தைச் செலுத்தி வடக்கே உள்ள மேரு மலை கலங்கிக் குலுங்க, தேவர்களும் முனிவர்களும் ஆடிப் புகழ, வேதம் வல்ல புலவர்கள் குட முழா என்ற பறை, வீணை, கி(ன்)னரியாழ் (இவைகளின்) அமுத கீதம் போன்ற ஒலிகளுடன் முறை முறையாக ஒலியை எழுப்பி ஓதிட,
  • ரம்பையர்கள் முலைகள் பாரிக்க உடன் நடனம் ஆடிற்று வர முடி பதாகைப் பொலியவே நடம் குலவு கந்த வேளே
    ரம்பை முதலான தேவமாதர்களின் மார்பகங்கள் கனக்க, ஒன்று கூடி நடனம் ஆடினவராய் வர, மகுடமும் கொடியும் விளங்கவே முருகன் ஆடலான குடைக்கூத்தும் துடைக்கூத்தும் ஆடி விளங்கிய கந்த வேளே,
  • அரசு மா கற்பகம் ஒடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பை உடன் அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட குயில்கள் அளிகள் தோகைக் கிளிகள் கோ என
    அரச மரம், மாமரம், தென்னை இவற்றுடன் அகில், பலா மரம், இலுப்பை மரம், மகிழ மரம், அழகான மூங்கில், அத்தி மரம், கமுக மரம், இவற்றுடன் வாழை மரம் (கலந்து) மேக மண்டலம் வரை உயர்ந்த செழித்த சோலைகளில் உலவும் குயில்கள், வண்டுகள், மயில்கள், கிளிகள் கோ என்று ஒலி செய்ய,
  • பெரிய அமுர்த வாவிக் கழனி வயலில் வாளைக் கயல்கள் அடையும் ஏர் அக் கனக நாடெனும் புலியுர் சந்த வேலா
    பெரிதான அமுத நீரைக் கொண்ட குளங்களிலும், கழனிகளிலும், வயல்களிலும் வாளை மீன்களுடன் கயல் மீன்களும் அடைகின்ற அழகினிலே, அந்தப் பொன்னுலகம் என்று சொல்லும்படியான சிதம்பரத்தில் வீற்றிருக்கும் அழகிய வேலனே,
  • அழகு மோகக் குமரி விபுதை ஏனல் புனவி அளி குலா உற்ற குழல் சேர் படம்பு தொடை அரசி வேதச் சொருபி கமல பாதக் கரவி அரிய வேடச் சிறுமியாள் அணைந்த புகழ்
    அழகும் ஆசையும் கொண்ட குமரி, தேவதை போன்றவள், தினைப் புனத்தில் இருப்பவள், வண்டுகள் குலவும் கூந்தலில் சேர்ந்துள்ள கடப்ப மாலையை உடைய அரசி, வேத உருவம் கொண்டவள், தாமரை போன்ற சிவந்த பாதங்களை உடைய அருமை வாய்ந்த வேடப் பெண்ணாகிய வள்ளி நாயகி அணைந்த புகழையும் கொண்டு,
  • அருண ரூபப் பதம் ஒடு இவுளி தோகைச் செயல் கொடு அணை தெய்வானைத் தனமுமே மகிழ்ந்து புணர் தம்பிரானே
    சிவந்த உருவம் கொண்ட பதங்களுடன், கலாபம் கொண்ட குதிரையாம் மயில் மீது ஏறின நீ அணைந்த தேவயானையின் மார்பகங்களையும் மகிழ்ந்து அவளையும் சேர்ந்த தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits