தனதன தனன தனதன தனன
தனதன தனனாத் ...... தனதான
தறுகணன் மறலி முறுகிய கயிறு
தலைகொடு விசிறீக் ...... கொடுபோகுஞ்
சளமது தவிர அளவிடு சுருதி
தலைகொடு பலசாத் ...... திரமோதி
அறுவகை சமய முறைமுறை சருவி
யலைபடு தலைமூச் ...... சினையாகும்
அருவரு வொழிய வடிவுள பொருளை
அலம்வர அடியேற் ...... கருள்வாயே
நறுமல ரிறைவி யரிதிரு மருக
நகமுத வியபார்ப் ...... பதிவாழ்வே
நதிமதி யிதழி பணியணி கடவுள்
நடமிடு புலியூர்க் ...... குமரேசா
கறுவிய நிருதர் எறிதிரை பரவு
கடலிடை பொடியாப் ...... பொருதோனே
கழலிணை பணியு மவருடன் முனிவு
கனவிலு மறியாப் ...... பெருமாளே.
- தறுகணன் மறலி
இரக்கமற்ற யமன் - முறுகிய கயிறு
திண்ணிய பாசக்கயிற்றை - தலைகொடு விசிறீ
அதன் நுனியைப் பிடித்து வீசி எறிந்து - கொடுபோகுஞ் சளமது தவிர
உயிரைக் கொண்டுபோகும் துன்பம் எனக்கு நேராமல் தவிர்க்க, - அளவிடு சுருதி தலைகொடு
நன்றாகத் தொகுக்கப்பட்ட வேதம் முதலிய - பலசாத்திரமோதி
பல சாஸ்திரங்களையும் ஓதி, - அறுவகை சமய முறைமுறை சருவி
ஆறு சமயங்களும்* ஒன்றோடொன்று மாறுபட்டு - அலைபடு தலைமூச்சினையாகும்
மோதித் தலை வேதனைதரப் போராடும் - அருவரு வொழிய
வெறுப்பேற்றும் செயல்கள் ஒழிந்து, - வடிவுள பொருளை
பேரின்ப வடிவம் உள்ள சற்குணப் பொருளை - அலம்வர
அமைதியோடு அறியும்படி - அடியேற்கு அருள்வாயே
எந்தனுக்கு நீ அருள்செய்ய வேண்டும். - நறுமல ரிறைவி யரிதிரு மருக
மணமுள்ள தாமரையில் அமர்ந்த லக்ஷ்மிக்கும் திருமாலுக்கும் மருமகனே, - நகமுதவிய பார்ப்பதி வாழ்வே
(இமய) மலை பெற்ற பார்வதியின் செல்வக் குமரா, - நதிமதி யிதழி பணியணி கடவுள்
கங்கை, சந்திரன், கொன்றை, பாம்பு இவற்றை அணிந்த இறைவன் - நடமிடு புலியூர்க் குமரேசா
நடனமாடும் புலியூரின் (சிதம்பரத்தின்) குமரேசனே, - கறுவிய நிருதர்
கோபத்தோடு வந்த அசுரர்களை, - எறிதிரை பரவு
வீசுகின்ற அலைகள் நிறைந்த - கடலிடை பொடியாப் பொருதோனே
கடலிடத்தில் தூளாக்கிப் போர் செய்தவனே, - கழலிணை பணியு மவருடன்
திருவடிகளின் வீரக் கழல்களை வணங்குவோரிடம் - முனிவு கனவிலு மறியாப் பெருமாளே.
கோபம் காட்டுவதைக் கனவிலும் அறியாத கருணாமூர்த்திப் பெருமாளே.



