திருப்புகழ் · 455கொந்தளம் புழு (சிதம்பரம்)

kondhaLampuzhu

தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன
தந்த தந்தன தந்த தந்தன ...... தனதான
கொந்த ளம்புழு கெந்த வண்பனி
ரம்ப சம்ப்ரம ணிந்த மந்தர
கொங்கை வெண்கரி கொம்பி ணங்கிய ...... மடமாதர்
கொந்த ணங்குழ லின்ப மஞ்சள
ணிந்து சண்பக வஞ்சி ளங்கொடி
கொஞ்சு பைங்கிளி யன்பெ னுங்குயில் ...... மயில்போலே
வந்து பஞ்சணை யின்ப முங்கொடு
கொங்கை யும்புய முந்த ழும்புற
மஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவ ...... மயல்மேலாய்
வஞ்சி னங்கள்தி ரண்டு கண்செவி
யுஞ்சு கங்கள்தி ரும்பி முன்செய்த
வஞ்சி னங்களு டன்கி டந்துட ...... லழிவேனோ
தந்த னந்தன தந்த னந்தன
திந்தி மிந்திமி திந்தி மிந்திமி
சங்கு வெண்கல கொம்பு துந்துமி ...... பலபேரி
சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி
தங்கு டுண்டுடு டுண்டு டன்பல
சந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர் ...... களமீதே
சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழு
செம்பு ளங்கரு டன்ப ருந்துகள்
செங்க ளந்திகை யெங்கு மண்டிட ...... விடும்வேலா
திங்க ளிந்திர னும்ப ரந்தர
ரும்பு கழ்ந்துரு கும்ப ரன்சபை
செம்பொ னம்பல மங்கொ ளன்பர்கள் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • கொந்தளம் புழுகு கெந்த வண் ப(ன்)னிர் ரம்ப சம்ப்ரம் அணிந்த மந்தர கொங்கை வெண் கரி கொம்பு இணங்கிய மட மாதர்
    தலை மயிரில் புனுகு சட்டமும் வாசனை உள்ள நல்ல பன்னீரும் நிரம்பச் சிறப்பாக அணிந்துள்ளவர்களும், மந்தர மலை போல் பருத்த மார்பகங்கள் என்னும் வெண்ணிறமான யானைத் தந்தங்கள் பொருந்தியுள்ள அழகிய விலைமாதர்கள்.
  • கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள் அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி கொஞ்சு பைங்கிளி அன்பு எனும் குயில் மயில் போலே
    பூங்கொத்துக்கள் சேர்ந்துள்ள அழகிய கூந்தல் உடையவராய், சுகம் தரக் கூடிய மஞ்சளைப் பூசிக் கொண்டு, சண்பக மலர் சூடி, வஞ்சியின் இளமை வாய்ந்த கொடி போல் விளங்கி, கொஞ்சுகின்ற பச்சைக் கிளி போலவும் அன்பு வாய்ந்த குயில் போலவும், மயில் போலவும்,
  • வந்து பஞ்சணை இன்பமும் கொடு கொங்கையும் புயமும் தழும்பு உற மஞ்சு ஒண் கலையும் குலைந்து அவ(ம்) மயல் மேலாய்
    வந்து, பஞ்சு மெத்தையில் இன்பத்தையும் கொடுக்கும் மார்பகமும் தோள்களும் (நகக்குறிகளால்) வடுப்பட, அழகிய நல்ல ஆடையும் கலைந்து, கேடும் காம இச்சையும் மிகுவதாய்,
  • வஞ்சினங்கள் திரண்டு கண் செவியும் சுகங்கள் திரும்பி முன் செய்த வஞ்சினங்களுடன் கிடந்து உடல் அழிவேனோ
    சபத மொழிகள் நிரம்பச் சொல்லி, கண்கள், காதுகள் ஆகியவை (முன்பு கொடுத்திருந்த) சுகங்கள் மாறுபட்டு (குருடாய், செவிடாய்), முன்பு செய்திருந்த சூள்களுடன் சேர்ந்து படுக்கையிலே கிடந்து இறப்பேனோ?
  • தந்தனந்தன தந்தனந்தன திந்திமிந்திமி திந்திமிந்திமி சங்கு வெண்கல கெம்பு துந்துமி பல பேரி சஞ்சலஞ் சல கொஞ்சு கிண்கிணி தங்கு டுண்டுடு டுண்டுடன் பல சந்திர அம்பறை பொங்கு வஞ்சகர் களம் மீதே சிந்த
    தந்தனந்தன தந்தனந்தன திந்திமிந்திமி திந்திமிந்திமி இவ்வாறு ஒலிக்கும் சங்கும், ஊது கொம்பும், துந்துமி பேரிகை முதலான பல முரசு வாத்தியங்களும், சஞ்சலஞ்சல என்று கொஞ்சும் கிண்கிணி, பொருந்தும் டுண்டுடு டுண்டுடன் என்னும் ஒலியுடன் பல சந்திரன் போல் வட்ட வடிவமான அழகிய பறைகள மிக்க எழ, வஞ்சகர்களாகிய அசுரர்கள் போர்க் களத்தில் மடிந்து போக,
  • வெண் கழுகு ஒ(ஓ)ங்கு பொங்கு எழு செம் புள் அம் கருடன் பருந்துகள் செம் களம் திகை எங்கும் அண்டிட விடும் வேலா
    வெண்ணிறக் கழுகுகளும், ஓங்கி உயர்ந்து எழுகின்ற செம்மை நிறமான பறவையான அழகிய கருடனும், பருந்துகளும் (இரத்தத்தால்) செந்நிறம் கொண்ட போர்க் களத்தில் எல்லா திசைகளிலும் நெருங்கி அடையும்படியாகச் செலுத்திய வேலனே,
  • திங்கள் இந்திரன் உம்பர் அந்தரரும் புகழ்ந்து உருகும் பரன் சபை செம் பொன் அம்பலம் அம்கொள் அன்பர்கள் பெருமாளே.
    சந்திரனும் இந்திரனும் தேவர்களும் வேறு விண்ணில் உறைபவர்களும் புகழ்ந்து உருகும் சிவனாரின் சபையாகிய செவ்விய பொன்னம்பலத்தை அழகாக உன் இருப்பிடமாகக் கொண்ட பெருமாளே, அன்பர்கள் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits