தத்ததன தான தத்ததன தான
தத்ததன தான ...... தனதான
கைத்தருண சோதி யத்திமுக வேத
கற்பகச கோத்ரப் ...... பெருமாள்காண்
கற்புசிவ காமி நித்யகலி யாணி
கத்தர்குரு நாதப் ...... பெருமாள்காண்
வித்துருப ராம ருக்குமரு கான
வெற்றி யயில் பாணிப் ...... பெருமாள்காண்
வெற்புளக டாக முட்குதிர வீசு
வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண்
சித்ரமுக மாறு முத்துமணி மார்பு
திக்கினினி லாதப் ...... பெருமாள்காண்
தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு
சித்திரகு மாரப் ...... பெருமாள்காண்
சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
தொட்டகவி ராஜப் ...... பெருமாள்காண்
துப்புவளி யோடு மப்புலியுர் மேவு
சுத்தசிவ ஞானப் ...... பெருமாளே.
- கைத்தருண சோதி
துதிக்கை உடைய, இளமை வாய்ந்த, ஒளிமயமான, - அத்திமுக வேத கற்பக
யானைமுகமுடைய, வேதப்பொருளான கற்பக* விநாயகனின் - சகோத்ரப் பெருமாள்காண்
இளைய சகோதரப் பெருமான் நீதான். - கற்பு சிவகாமி நித்யகலியாணி
கற்பரசி சிவகாமசுந்தரியும், நித்திய கல்யாணியுமான - கத்தர்குரு நாதப் பெருமாள்காண்
பார்வதியின் தலைவரான சிவனாரின் குருநாதப் பெருமான் நீதான். - வித்துருப ராமருக்கு மருகான
மழைத்துளி பெய்யும் மேகத்து வண்ணனான இராமருக்கு மருமகனாகி - வெற்றி அயில் பாணிப் பெருமாள்காண்
வெற்றி வேலாயுதத்தைக் கரத்தில் ஏந்திய பெருமான் நீதான். - வெற்புள கடாகம் உட்குதிர வீசு
மலைகள் உள்ள அண்டகோளங்கள் அஞ்சும்படி தோகையை வீசும் - வெற்றிமயில் வாகப் பெருமாள்காண்
வெற்றி மயிலை வாகனமாகக் கொண்ட பெருமான் நீதான். - சித்ரமுகம் ஆறு முத்துமணி மார்பு
அழகிய முகங்கள் ஆறும், முத்துமாலைகள் அணிந்த மார்பும், - திக்கினில் இலாதப் பெருமாள்காண்
வேறு எந்தத் திசையிலும் காணமுடியாத பேரழகுப் பெருமான் நீதான். - தித்திமிதி தீதென ஒத்திவிளையாடு
தித்திமிதி தீது என தாளமிட்டு விளையாடுகின்ற - சித்திரகுமாரப் பெருமாள்காண்
அழகிய குமாரப்பெருமான் நீதான். - சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை தொட்ட
சுத்த வீரனே, சூரர்கள் அழியும்படி வேலைச் செலுத்தியவனும், - கவி ராஜப் பெருமாள்காண்
சிறந்த கவியரசனாகியவனும் ஆன பெருமான் நீதான். - துப்புவளி யோடும் அப்புலியுர் மேவு
தூயவளான வள்ளியுடன் அந்தப் புலியூர் (சிதம்பரம்) தலத்தில் மேவி, - சுத்தசிவ ஞானப் பெருமாளே.
சுத்த சிவஞான உருவான பெருமாளே.



