திருப்புகழ் 447 சிரத்தானத்தி (திருக்காளத்தி)

தனத்தா தத்தத் ...... தனதான
தனத்தா தத்தத் ...... தனதான
சிரத்தா  னத்திற்  ......  பணியாதே 
செகத்தோர்  பற்றைக்  ......  குறியாதே 
வருத்தா  மற்றொப்  ......  பிலதான 
மலர்த்தாள்  வைத்தெத்  ......  தனையாள்வாய் 
நிருத்தா  கர்த்தத்  ......  துவநேசா 
நினைத்தார்  சித்தத்  ......  துறைவோனே 
திருத்தாள்  முத்தர்க்  ......  கருள்வோனே 
திருக்கா  ளத்திப்  ......  பெருமாளே. 
  • சிரத்தா னத்திற் பணியாதே
    தலையைக் கொண்டு உன்னைப் பணியாமல் இருக்கும் யான்
  • செகத்தோர் பற்றைக் குறியாதே
    உலகத்தோர்தம் பாசங்களில் நோக்கம் செலுத்தாமல் இருக்கும்படியாக
  • வருத்தா
    என்னை வருத்தி,
  • மற்றொப்பிலதான
    தமக்கு வேறு நிகர் இல்லாத
  • மலர்த்தாள் வைத்து
    மலர் போன்ற உன் திருவடிகளில் சேர்த்து,
  • எத்தனை
    ஏமாற்றுக்காரனாகிய என்னை
  • ஆள்வாய்
    ஆண்டருள்வாயாக.
  • நிருத்தா
    நடனம் ஆட வல்லவனே,
  • கர்த்தத்துவ நேசா
    தலைமை ஸ்தானம் வகிக்கும் நேசனே,
  • நினைத்தார் சித்தத்து
    உன்னை நினைப்பவர்களது சித்தத்தில்
  • உறைவோனே
    வீற்றிருப்பவனே,
  • திருத்தாள் முத்தர்க்கு
    உன் திருவடிகளை ஜீவன் முக்தர்களுக்கு*
  • அருள்வோனே
    தந்தருள்பவனே,
  • திருக்கா ளத்திப் பெருமாளே.
    திருக்காளத்தியில் உள்ள பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com