திருப்புகழ் 446 சரக்கு ஏறி இத்த (திருக்காளத்தி)

தனத்தா தத்தத் தனனா தந்தத்
தனத்தா தத்தத் தனனா தந்தத்
தனத்தா தத்தத் தனனா தந்தத் ...... தனதான
சரக்கே  றித்தப்  பதிவாழ்  தொந்தப் 
பரிக்கா  யத்திற்  பரிவோ  டைந்துச் 
சதிக்கா  ரர்ப்புக்  குலைமே  விந்தச்  ......  செயல்மேவிச் 
சலித்தே  மெத்தச்  சமுசா  ரம்பொற் 
சுகித்தே  சுற்றத்  தவரோ  டின்பத் 
தழைத்தே  மெச்சத்  தயவோ  டிந்தக்  ......  குடிபேணிக் 
குரக்கோ  ணத்திற்  கழுநா  யுண்பக் 
குழிக்கே  வைத்துச்  சவமாய்  நந்திக் 
குடிற்கே  நத்திப்  பழுதாய்  மங்கப்  ......  படுவேனைக் 
குறித்தே  முத்திக்  குமறா  வின்பத் 
தடத்தே  பற்றிச்  சகமா  யம்பொய்க் 
குலக்கால்  வற்றச்  சிவஞா  னம்பொற்  ......  கழல்தாராய் 
புரக்கா  டற்றுப்  பொடியாய்  மங்கக் 
கழைச்சா  பத்தைச்  சடலா  னுங்கப் 
புகைத்தீ  பற்றப்  புகலோ  ரன்புற்  ......  றருள்வோனே 
புடைத்தே  யெட்டுத்  திசையோ  ரஞ்சத் 
தனிக்கோ  லத்துப்  புகுசூர்  மங்கப் 
புகழ்ப்போர்  சத்திக்  கிரையா  நந்தத்  ......  தருள்வோனே 
திருக்கா  னத்திற்  பரிவோ  டந்தக் 
குறக்கோ  லத்துச்  செயலா  ளஞ்சத் 
திகழ்ச்சீ  ரத்திக்  கழல்வா  வென்பப்  ......  புணர்வோனே 
சிவப்பே  றுக்குக்  கடையேன்  வந்துட் 
புகச்சீர்  வைத்துக்  கொளுஞா  னம்பொற் 
றிருக்கா  ளத்திப்  பதிவாழ்  கந்தப்  ......  பெருமாளே. 
  • சரக்கு ஏறி இத்தப் பதி வாழ் தொந்தப் பரிக் காயத்தில்
    பொருள் மிகுந்த இந்தப் பூமியில் வாழ்கின்ற சம்பந்தத்தை வகிக்கின்ற இவ்வுடலில்
  • பரிவோடு ஐந்து சதி காரர் புக்கு
    அன்பு பூண்டவர் போன்று உள்ள ஐந்து (பொறிகளாகிய) மோசக்காரர்கள் புகுந்து,
  • உலை மேவு இந்தச் செயல் மேவி
    அழிவுக்குக் காரணமான இத்தகைய தொழில்களை விரும்பி மேற்கொண்டு,
  • சலித்தே மெத்தச் சமுசாரம் பொன் சுகித்தே
    சஞ்சலப்பட்டு, மிகவும் குடும்பம், செல்வம் ஆகியவற்றைச் சுகத்துடன் அனுபவித்து,
  • சுற்றத்தவரோடு இன்ப(ம்) தழைத்தே மெச்ச
    சுற்றத்தாருடன் மகிழ்ச்சி மிகுந்து புகழும்படி
  • தயவோடு இந்தக் குடி பேணி
    அன்புடனே இந்த வாழ்விடத்தை விரும்பி, (இறுதியில்)
  • குரக்கோணத்தில் கழு நாய் உண்ப
    பிளவுபட்ட கூர்மையான மூக்கை உடைய கழுகும், நாயும் உண்ணும்படி
  • குழிக்கே வைத்துச் சவமாய் நந்து
    குழியில் வைத்துப் பிணமாய்க் கெடுகின்ற
  • இக் குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் படுவேனை
    இந்தக் குடிசையாகிய உடலையே விரும்பி, பயனற்று அழிதல் உறுகின்ற என்னை,
  • குறித்தே முத்திக்கு ம(மா)றா இன்பத் தடத்தே பற்றி
    குறிக் கொண்டு, முக்திக்கு மாறுதல் இல்லாத இன்ப வழியைக் கைப்பற்றி,
  • சக மாயம் பொய்க் குலம் கால் வற்ற
    உலக மாயை, பொய், குலம், குடி என்கின்ற பற்றுக் கோடுகள் வற்றிப்போக,
  • சிவ ஞானம் பொன் கழல் தாராய்
    சிவ ஞானமாகிய உனது அழகிய திருவடியைத் தந்து அருளுக.
  • புரக் காடு அற்றுப் பொடியாய் மங்க
    திரி புரம் என்னும் காடு அழிந்து பொடியாய் மறையவும்,
  • கழைச் சாபத்து ஐச் சடலான் உங்க
    கரும்பு வில்லை ஏந்தியவனும் அழகிய உடலை உடையவனுமான மன்மதன் அழியவும்,
  • புகைத் தீ பற்ற அப்புகலோர் அன்புற்று அருள்வோனே
    புகை கொண்ட தீயை (நெற்றிக் கண்ணால்) பற்றச் செய்த அந்த வெற்றியாளராகிய சிவபிரானால் அன்பு கொண்டு அருளப்பட்டவனே,
  • புடைத்தே எட்டுத் திசையோர் அஞ்ச
    அடித்து வீழ்த்தியே எட்டுத் திக்குகளிலும் உள்ளோர்களும் பயப்படும்படி,
  • தனிக்கோலத்துப் புகு சூர் மங்க
    தனிப்பட்ட உருவத்துடன் புகுந்த சூரன் அழியும்படி அவனை
  • புகழ்ப் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து அருள்வோனே
    போரில் புகழ் கொண்ட சக்தி வேலாயுதத்துக்கு உணவாக மகிழ்ச்சியுடன் அருளியவனே,
  • திருக் கானத்தில் பரிவோடு
    அழகிய வள்ளி மலைக் காட்டில் நீஅன்பு பூண்டு செல்ல,
  • அந்தக் குறக் கோலத்துச் செயலாள் அஞ்ச
    அந்தக் குறக்கோலம் பூண்டிருந்த இலக்குமி போன்ற வள்ளி (யானையைக் கண்டு) பயப்பட்டதும்
  • திகழ்ச்சீர் அத்திக்கு அழல் வா என்பப் புணர்வோனே
    விளங்கும் சீர் பெற்ற (இந்த) யானைக்கு பயந்து அழ வேண்டாம், வா என்று சொல்லி, அவளை அணைந்தவனே,
  • சிவப் பேறுக்குக் கடையேன் வந்து உள் புக
    சிவகதி அடையும் பேற்றுக்கு, கடையவனாகிய நான் வந்து உட்சேருவதற்கு
  • சீர் வைத்துக் கொ(ள்)ளு
    வேண்டிய சிறப்பினைத் தந்து என்னை ஏற்றுக் கொள்வாயாக.
  • ஞானம் பொன் திருக் காளத்திப் பதி வாழ் கந்தப் பெருமாளே.
    ஞானமும் பொலிவும் அழகும் நிறைந்த திருக் காளத்தி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com