தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தனதான
வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு
மேருகிரி யானகொடு ...... தனபார
மீதுபுர ளாபரண சோதிவித மானநகை
மேகமனு காடுகட ...... லிருள்மேவி
நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவள
நாணமழி வார்களுட ...... னுறவாடி
நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்
ஞானசிவ மானபத ...... மருள்வாயே
கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய
கோலமயி லானபத ...... மருள்வோனே
கூடஅர னோடுநட மாடரிய காளியருள்
கூருசிவ காமியுமை ...... யருள்பாலா
ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன
மாரவிளை யாடிமண ...... மருள்வோனே
ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய
ஆதியரு ணாபுரியில் ...... பெருமாளே.
- வீறு புழுகான பனிநீர்கள் மல(ம்) தோயல் விடு
(மணம் வீசும்) புனுகு, பன்னீர் ஆகியவைகளை மலம் தோய்ந்துள்ள உடலின் மீது விட்டுப் பூசி, - மேரு கிரியான கொடு தன பார மீது புரள ஆபரண சோதி
விதமான நகை
மேரு மலை போன்ற, தீமைக்கு இடமான, மார்பகப் பாரங்களின் மேல் புரள்கின்ற ஆபரணங்களின் ஒளியும், பல விதமான சிரிப்பும் கொண்டு, - மேகம் அனு காடு கடல் இருள் மேவி நாறு மலர் வாச மயிர்
நூல் இடையதே துவள
மேகம், பின்னும் காடு, கடல் ஆகியவைகளின் கறுப்பு நிறத்துடன் மணம் வீசும் மலர்களின் வாசனையைக் கொண்ட கூந்தலை விரித்து, நூல் போல் நுண்ணிய இடையை துவளச் செய்து, - நாணம் அழிவார்கள் உடன் உறவாடி நாடி அதுவே கதி எனா
சுழலு(ம்) மோடனை
நாணம் என்பதே இல்லாது அழியும் விலைமாதர்களுடன் நட்பு பூண்டு, விரும்பி அந்த வேசையருடன் ஆடுவதே கதி என்று சுழல்கின்ற மூடனாகிய எனக்கு - நின் ஞான சிவமான பதம் அருள்வாயே
உனது சிவஞான மயமான திருவடியைத் தந்து அருள்வாயாக. - கூறும் அடியார்கள் வினை நீறுபடவே அரிய கோல மயிலான
பதம் அருள்வாயே
உன்னைப் போற்றும் அடியார்களின் வினை தூளாகிப் போக, அருமையான அழகிய மயிலான பதவியை அருள்பவனே, - கூட அரனோடே நடமாடு அரிய காளி அருள் கூரும்
சிவகாமி உமை அருள் பாலா
சிவபெருமானோடு சேர்ந்து நடனம் ஆடும் அரிய காளியும் திருவருள் மிக்க சிவகாமியும் ஆன உமாதேவி அருளிய குழந்தையே, - ஆறு முகமான நதி பால குற மாது தனம் ஆர விளையாடி
மணம் அருள்வோனே
ஆறு முகங்கள் கொண்ட கங்கா நதியின் குழந்தையே, குறப் பெண் வள்ளியின் நெஞ்சம் குளிர விளையாடி அவளை மணம் புரிந்தவனே, - ஆதி ரகுராம ஜய மாலின் மருகா பெரிய ஆதி அருணா
புரியில் பெருமாளே.
ஆதி ரகுராமனும் வெற்றி பொருந்தியவனுமான திருமாலின் மருகனே, பெரிய திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.



