திருப்புகழ் 302 வெற்றி செயவுற்ற (திருத்தணிகை)

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்த தனதான
வெற்றிசெய  வுற்றகழை  விற்குதைவ  ளைத்துமதன் 
விட்டகணை  பட்ட  ......  விசையாலே 
வெட்டவெளி  யிற்றெருவில்  வட்டபணை  யிற்கனல்வி 
ரித்தொளிப  ரப்பு  ......  மதியாலே 
பற்றிவசை  கற்றபல  தத்தையர்த  மக்குமிசை 
பட்டதிகி  ரிக்கு  ......  மழியாதே 
பத்தியையெ  னக்கருளி  முத்தியைய  ளித்துவளர் 
பச்சைமயி  லுற்று  ......  வரவேணும் 
நெற்றிவிழி  பட்டெரிய  நட்டமிடு  முத்தமர்நி 
னைக்குமன  மொத்த  ......  கழல்வீரா 
நெய்கமல  மொக்குமுலை  மெய்க்குறவி  யிச்சையுற 
நித்தமிறு  கத்த  ......  ழுவுமார்பா 
எற்றியதி  ருச்சலதி  சுற்றியதி  ருத்தணியில் 
எப்பொழுது  நிற்கு  ......  முருகோனே 
எட்டசல  மெட்டநில  முட்டமுடி  நெட்டசுரர் 
இட்டசிறை  விட்ட  ......  பெருமாளே. 
  • வெற்றி செயவுற்ற கழை விற்குதை வளைத்து
    ஜெயமே தரவல்ல கரும்பு வில்லின் முனையை வளைத்து
  • மதன் விட்டகணை பட்ட விசையாலே
    மன்மதன் செலுத்திய மலர் அம்புகள் மேலே தைத்த வேகத்தாலும்,
  • வெட்டவெளியில் தெருவில் வட்டபணையில்
    வெட்டவெளியிலும், தெருக்களிலும், வட்டப் பறையென நின்று
  • கனல்விரித்தொளி பரப்பு மதியாலே
    நெருப்பை அள்ளி வீசி ஒளி பரப்பும் நிலவினாலும்,
  • பற்றி வசை கற்றபல தத்தையர் தமக்கும்
    வசைமொழிகளை விடாது பிடித்துக்கொண்டு பயின்று, அவற்றையே பேசும் பல மாதர்களின் ஏச்சாலும்,
  • இசை பட்ட திகிரிக்கும் அழியாதே
    இசையை எழுப்பும் புல்லாங்குழலின் ஓசையாலும் நான் நலிவுறாமல்,
  • பத்தியை யெனக்கருளி முத்தியை யளித்து
    பக்தி நெறியை எனக்குத் தந்துதவி, முக்தியையும் அளிக்க
  • வளர் பச்சைமயிலுற்று வரவேணும்
    உயர்ந்த பச்சை மயில் வாகனத்தில் ஏறி நீ வர வேண்டுகிறேன்.
  • நெற்றிவிழி பட்டெரிய
    நெற்றிக் கண்ணின் தீ பட்டு மன்மதன் எரிந்து போக,
  • நட்டமிடும் உத்தமர் நினைக்குமனமொத்த கழல்வீரா
    நடனம் செய்த பெரியோராம் சிவபிரான் உன்னைத் தியானிக்க, அவரது மனத்தில் பொருந்தி இருந்த திருவடிகளை உடைய வீரனே,
  • நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
    தேன் ததும்பும் தாமரை போன்ற இள மார்பை உடைய, சத்தியவதியான குற வள்ளி அன்பு கொள்ளும்படியாக
  • நித்தம் இறுகத் தழுவு மார்பா
    அவளை நாள்தோறும் கெட்டியாக அணைக்கும் மார்பனே,
  • எற்றியதிருச்சலதி சுற்றிய திருத்தணியில்
    அலை வீசும் கடல்கள் சூழ்ந்த புவியில் திருத்தணியில்
  • எப்பொழுது நிற்கு முருகோனே
    எப்பொழுதும் எழுந்தருளியிருக்கும் முருகனே,
  • எட்டு அசலம் எட்ட நிலமுட்டமுடி நெட்டு அசுரர்
    அஷ்ட குலகிரிகள் வரையிலும் எட்டிப் பரவ, உலகெல்லாம் தங்கள் ஆட்சியைச் செலுத்திய அசுரர்கள்
  • இட்டசிறை விட்ட பெருமாளே.
    தேவர்களை அடைத்த சிறையினின்றும் அவர்களை விடுவித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com