தனதன தான தனதன தான
தனதன தான ...... தனதான
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி ...... விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை ...... யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு ...... முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் ...... அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக ...... இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை ...... விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் ...... மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு ...... பெருமாளே.
- இருமலு ரோக முயலகன் வாதம்
இருமல் என்ற நோய், முயலகன் என்ற வலிப்பு நோய், வாத நோய், - எரிகுண நாசி விடமே நீரிழிவு
எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய், - விடாத தலைவலி சோகை
நீங்காத தலைவலி, ரத்த சோகை, - எழுகள மாலை யிவையோடே
கழுத்தைச் சுற்றி உண்டாகும் மாலை போன்ற புண் இவற்றுடன், - பெருவயி றீளை யெரிகுலை சூலை
மகோதர நோய், நுரையீரலில் கோழை நோய், நெஞ்சு எரியும் நோய், தீராத வயிற்று வலி, - பெருவலி வேறுமுளநோய்கள்
ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள் - பிறவிகள் தோறு மெனைநலி யாதபடி
ஒவ்வொரு பிறவியிலும் என்னைப் பீடிக்காதபடி, - உன தாள்கள் அருள்வாயே
உன்னுடைய திருவடிகளைத் தந்தருள்வாயாக. - வருமொரு கோடி யசுரர்பதாதி
உன்னை எதிர்த்துவந்த கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை - மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட
இறந்துபடவும், அனேக வீரப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்த ஓர் காலபைரவர் (சிவ பெருமான்) போர்க்களத்தில் நடனமாடவும், - வடிசுடர் வேலை விடுவோனே
கூரிய ஒளிவீசும் வேலைச் செலுத்தியவனே, - தருநிழல் மீதிலுறைமுகிலூர்தி
கற்பக விருட்சங்களின் நிழலில் வசிக்கும் மேக வாகனன் இந்திரன் - தருதிரு மாதின் மணவாளா
வளர்த்த அழகிய பெண் தேவயானையின் மணவாளனே, - சலமிடை பூவின்நடுவினில் வீறு
கடலால் சூழப்பட்ட இந்தப் புவியின் மத்தியில் சிறப்போடு விளங்கும் - தணிமலை மேவு பெருமாளே.
திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.