திருப்புகழ் 244 உடலி னூடு (திருத்தணிகை)

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
உடலி  னூடு  போய்மீளு  முயிரி  னூடு  மாயாத 
உணர்வி  னூடு  வானூடு  ......  முதுதீயூ 
டுலவை  யூடு  நீரூடு  புவியி  னூடு  வாதாடு 
மொருவ  ரோடு  மேவாத  ......  தனிஞானச் 
சுடரி  னூடு  நால்வேத  முடியி  னூடு  மூடாடு 
துரிய  வாகு  லாதீத  ......  சிவரூபம் 
தொலைவி  லாத  பேராசை  துரிச  றாத  வோர்பேதை 
தொடுமு  பாய  மேதோசொ  ......  லருள்வாயே 
மடல  றாத  வாரீச  அடவி  சாடி  மாறான 
வரிவ  ரால்கு  வால்சாய  ......  அமராடி 
மதகு  தாவி  மீதோடி  யுழவ  ரால  டாதோடி 
மடையை  மோதி  யாறூடு  ......  தடமாகக் 
கடல்பு  காம  காமீனை  முடுகி  வாளை  தான்மேவு 
கமல  வாவி  மேல்வீழு  ......  மலர்வாவிக் 
கடவுள்  நீல  மாறாத  தணிகை  காவ  லாவீர 
கருணை  மேரு  வேதேவர்  ......  பெருமாளே. 
  • உடலி னூடு போய்மீளும் உயிரி னூடு
    உடலுக்கு உள்ளும், உடலில் சென்று மீளுகின்ற உயிருக்குள்ளும்,
  • மாயாத உணர்வினூடு வானூடு முதுதீயூடு
    அழியாத உணர்ச்சியுள்ளும், ஆகாயத்துள்ளும், முற்றிய தீக்குள்ளும்,
  • உலவையூடு நீரூடு புவியினூடு
    காற்றினுள்ளும், நீரின் உள்ளும், மண்ணினுள்ளும்,
  • வாதாடும் ஒருவரோடு மேவாத
    சமயவாதம் புரிகின்ற எவரிடத்திலும் காணக்கிடைக்காத
  • தனிஞானச் சுடரினூடு
    ஒப்பற்ற ஞான ஒளியினுக்குள்ளும்,
  • நால்வேத முடியினூடும் ஊடாடு
    நான்கு வேத உச்சியிலும் ஊடாடுகின்றதும்,
  • துரிய ஆகுல அதீத சிவரூபம்
    துரிய* நிலையில் இருப்பதும், துன்பங்கள் கடந்த நிலையில் உள்ளதுமாகிய சிவ ரூபத்தை,
  • தொலைவிலாத பேராசை துரிசு அறாத வோர்பேதை
    முடிவற்ற பேராசையும் குற்றமும் நீங்காத ஓர் மூடனாகிய அடியேன்
  • தொடுமுபாயம் ஏதோசொல் அருள்வாயே
    அடைவதற்கு உரிய வழி எதுவோ, அந்த உபதேச மொழியைச் சொல்லி வழிகாட்டி அருள்வாயாக.
  • மடல் அறாத வாரீச அடவி சாடி
    இதழ்கள் நீங்காத தாமரைப் பூவின்காட்டை அழித்து,
  • மாறான வரி வரால் குவால் சாய அமராடி
    தனக்குப் பகையான வரிபடர்ந்த வரால் மீன்கள் தோற்றுப்போய் பின்வாங்கும்படி போர் புரிந்து,
  • மதகு தாவி மீதோடி
    செல்லும் வழியில் இருந்த நீர்பாயும் மதகைத் தாண்டி மேலே ஓடி,
  • உழவரால் அடாது ஓடி
    வயலில் உழும் உழவர்கள் தன்னை வருத்தாதபடி தப்பி ஓடி,
  • மடையை மோதி யாறூடு தடமாக
    வழியில் உள்ள நீர் மடைகளைத் தாக்கி, ஆற்றின் வழியிலே சென்று,
  • கடல்புகா மகாமீனை முடுகி
    கடலில் புகுந்து, அங்குள்ள பெரிய மீனை விரட்டித் தாக்கி,
  • வாளை தான்மேவு கமல வாவி மேல்வீழு
    வாளை மீன் தான் இருந்த தாமரைக்குளத்தில் வந்து வீழும்
  • மலர்வாவி
    (இத்தனை பெருமையை உடைய) மலர்ச் சுனையில்**
  • கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர
    தெய்வமணம் உள்ள நீலோத்பல மலர் மலர்வது என்றும் தவறாத திருத்தணிகைக்குக் காவலனே, வீரனே,
  • கருணை மேருவே தேவர் பெருமாளே.
    கருணையில் மேரு மலை போன்றவனே, தேவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com