திருப்புகழ் · 241அருக்கி மெத்தென (திருத்தணிகை)arukkimeththena
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
Nangalappa Sharanam
அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத்
தழித்தறக் கறுத்தகட் ...... பயிலாலே
அழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க்
கடுத்தபத் தமுற்றுவித் ...... தகர்போலத்
தரிக்கும்வித் தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத்
தலத்துமற் றிலைப்பிறர்க் ...... கெனஞானம்
சமைத்துரைத் திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச்
சறுக்குமிப் பிறப்புபெற் ...... றிடலாமோ
பொருக்கெழக் கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப்
பொருப்பினிற் பெருக்கவுற் ...... றிடுமாயம்
புடைத்திடித் தடற்கரத் துறப்பிடித் தகற்பகப்
புரிக்கிரக் கம்வைத்தபொற் ...... கதிர்வேலா
திருத்தமுத் தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத்
தினைப்புனக் கிரித்தலத் ...... திடைதோயுஞ்
சிவத்தகுக் குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச்
சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.
பத உரைword meanings
- அருக்கி மெத்தெனச் சிரித்து உருக்கி இட்டு உ(ள்)ளக்
கருத்து அழித்து அறக் கறுத்த கண் பயிலாலே
சுருக்கமாகவும், அமைதியுடனும் சிரித்து, காண்பவர்களின் மனதை உருக்கி உள்ளக் கருத்தை அழித்து, மிகவும் கருநிறமுள்ள கண்களின் குறிப்புகளால், - அழைத்து அகப் படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு
அடுத்து அபத்தம் உற்று
அழைத்து தம் வலைக்குள் அகப்பட வைத்து, ஒன்றையும் விடாமல் பொருளைப் பறிக்கும் வேசியர்களிடம் செல்கின்ற தவறைச் செய்தும், - வித்தகர் போலத் தரிக்கும் வித்தரிக்கும்
அறிவாளி போல் நடித்தும், விரிவாகப் பேசியும், - மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என
ஞானம் சமைத்து உரைத்து
மேலான உண்மைகளை எடுத்துப் பேசும் கீர்த்தி (தன்னைப் போல்) எந்த ஊரிலும் வேறு யார்க்கும் கிடையாது என்று சொல்லும்படி ஞானப் பேச்சுகளை புதிதாகப் படைத்துப் பேசியும், - இமைப்பினில் சடக்கெனப் படுத்து எழச் சறுக்கும் இப் பிறப்பு
பெற்றிடலாமோ
ஒரு இமைப் பொழுதில் வேகத்துடன் படுத்து எழுதல் போல நழுவி ஒழியும் இந்த நிலையாப் பிறவியைப் பெற்றிடல் நன்றோ? - பொருக்கு எழக் கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்பு உற
வறண்டு உலர்ந்த காட்சி எழும்படி கடல் வற்றவும், அசுரர்களின் கூட்டம் மடிந்து ஒழியவும், - பொருப்பினில் பெருக்க உற்றிடு மாயம் புடைத்து இடித்து
அடல் கரத்து உறப் பிடித்த
கிரெளஞ்ச மலையில் நிரம்ப இருந்த மாயம் உடைந்து அழியவும், வலிமையான திருக்கரத்தில் தங்கும்படி பிடித்த (வேலனே), - கற்பகப் புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா
கற்பக புரியாகிய தேவநாட்டின் மீது அருள் வைத்த அழகிய கதிர் வேலனே, - திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த
செப்பிய முத்தமிழ்ப் பாடலுக்கு ஒப்பற்றவனாய் நிற்பவனே, - மைக் குறத்தியைத் தினைப் புனக் கிரித் தலத்து இடை
தோயும்
மை தீட்டிய கண்களை உடைய வள்ளியை தினைப் புனம் உள்ள வள்ளிமலை நாட்டில் அணைந்தவனே, - சிவத்த குக்குடக் கொடிச் செருக்க உற்பலச் சுனைச்
சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே.
சிவப்பு நிறம் கொண்ட சேவற்கொடி பெருமிதம் அடைய, நீலோற்பலம் மலர்கின்ற சுனையை உடைய சிறப்புள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.




