திருப்புகழ் · 240அரகர சிவன் அரி (திருத்தணிகை)

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான

Yaazh Music

அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண ...... பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அநலென எழவிடு ...... மதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள் ...... முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி ...... களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர ...... வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர ...... முநிவோரும்
பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு ...... பெருமாளே.

பத உரை

  • அரகர சிவன்
    பாவங்களைப் போக்கவல்ல சிவனும்,
  • அரிஅயனிவர்
    திருமாலும், பிரம்மாவும், ஆகிய இம்மூவரும்
  • பரவி முன்
    போற்றி நின்று உனது முன்னிலையில்
  • அறுமுக சரவண பவனே
    ஆறுமுகனே, சரவணபவனே,
  • என்று அநுதின மொழிதர
    என்று கூறி நாள்தோறும் துதிக்க,
  • அசுரர்கள் கெட
    சூரன் முதலிய அசுரர்கள் அழியுமாறு
  • அநலென எழ
    அக்கினி போல எழும்பிய
  • அயில்விடும் அதிவீரா
    வேலினை விடுத்த வீர மூர்த்தியே,
  • பரிபுர கமலமது
    வீரச் சிலம்பு அணிந்த, தாமரை மலர் போன்ற
  • அடியிணை யடியவர்
    உன் திருவடிகளை உன் அடியார்களின்
  • உளமதில் உற
    உள்ளத்தில் பொருந்துமாறு
  • அருள் முருகேசா
    அருள்செய்யும் முருகக் கடவுளே.
  • பகவதி வரைமகள் உமை
    மலையரசன் மகளாக வந்த பகவதியின்
  • உமாதேவி தர வருகுக
    அருளினால் வந்த குகனே,
  • பரமன திருசெவி களிகூர
    சிவனின் இருசெவிகளும் மகிழும்படி
  • உரைசெயு மொருமொழி
    யாவரும் புகழும் ஒப்பற்ற மொழியாகிய
  • பிரணவ முடிவதை
    பிரணவ மந்திரத்தின் முடிவுப்பொருளை
  • உரைதரு குருபர
    உபதேசித்த மேலான குருவே,
  • உயர்வாய உலக மன்
    உயர்ந்த இவ்வுலகில் வாழும்
  • அலகில வுயிர்களும்
    எண்ணற்ற உயிர்களும்
  • இமையவர் அவர்களும்
    தேவர்களும்
  • உறுவர முநிவோரும்
    பெருந்தவ சிரேஷ்டரான முனிவர்களும்
  • பரவிமுன்
    உன் முன்னேவணங்கி துதி செய்து,
  • அநுதின மனமகிழ் வுற
    நாள்தோறும் மனம் மகிழ்ச்சி அடையுமாறு
  • அணி பணிதிகழ்
    அழகியதும், வாசுகி என்ற நாகம் வழிபட்டதுமாகிய*
  • தணிகையில் உறைவோனே
    திருத்தணிகைத் தலத்தில் வாழ்பவனே,
  • பகர்தரு குறமகள்
    புகழ்வாய்ந்த குறப்பெண் வள்ளியும்,
  • தருவமை வநிதையும்
    கற்பகத்தருவின் கீழே வளர்ந்த தேவயானையும்,
  • இருபுடை யுறவரு பெருமாளே.
    இருபுறமும் பொருந்த வந்த பெருமாளே**.

குறிப்புகள் · notes

  • * பாற்கடல் கடைந்தபோது வாசுகி என்ற நாகம் கயிறாக உதவியது. அதனால் புண்பட்ட நோய் நீங்க, வாசுகி திருத்தணிகைக்கு வந்து முருகனைப் பூஜிக்க நோய் தணிந்த வரலாறு இங்கு கூறப்பட்டுள்ளது.
  • ** வள்ளியும் தேவயானையும் வலமும் இடமுமாக விளங்க முருகன் திருத்தணியில் வீற்றிருக்கிறான். வள்ளி = இச்சாசக்தி, தேவயானை = ஞானசக்தி.
  • இப்பாடல் துதிமயமானது. வேண்டுதல் ஒன்றும் இல்லாதது.
  • * When the Great Milky Ocean was churned, the Serpent VAsuki served as the rope. The soreness in its body due to churning was unbearable, and VAsuki came to ThiruththaNigai to worship Lord MurugA who removed its pain.
  • ** VaLLi and DEvayAnai are the two consorts on both sides of Murugan at ThiruththaNigai. VaLLi on the right side is 'ichchAsakthi' (Desire) and DEvayAnai on the left side is 'gnAnasakthi' (Knowledge).
  • This song is all worship sans petition of any kind.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout