திருப்புகழ் 223 நாவேறு பா மணத்த (சுவாமிமலை)

தானான தான தத்த தானான தான தத்த
தானான தான தத்த ...... தனதான
நாவேறு  பாம  ணத்த  பாதார  மேநி  னைத்து 
நாலாறு  நாலு  பற்று  ......  வகையான 
நாலாரு  மாக  மத்தி  னூலாய  ஞான  முத்தி 
நாடோறு  நானு  ரைத்த  ......  நெறியாக 
நீவேறெ  னாதி  ருக்க  நான்வேறெ  னாதி  ருக்க 
நேராக  வாழ்வ  தற்கு  ......  னருள்கூர 
நீடார்ஷ  டாத  ரத்தின்  மீதேப  ராப  ரத்தை 
நீகாணெ  னாவ  னைச்சொ  ......  லருள்வாயே 
சேவேறு  மீசர்  சுற்ற  மாஞான  போத  புத்தி 
சீராக  வேயு  ரைத்த  ......  குருநாதா 
தேரார்கள்  நாடு  சுட்ட  சூரார்கள்  மாள  வெட்டு 
தீராகு  காகு  றத்தி  ......  மணவாளா 
காவேரி  நேர்வ  டக்கி  லேவாவி  பூம  ணத்த 
காவார்சு  வாமி  வெற்பின்  ......  முருகோனே 
கார்போலு  மேனி  பெற்ற  மாகாளி  வாலை  சத்தி 
காமாரி  வாமி  பெற்ற  ......  பெருமாளே. 
  • நாவேறு பாம ணத்த
    நாவினில் இருந்து வெளிப்படும் பாமலர்களின் நறுமணம் கமழும்
  • பாதாரமே நினைத்து
    பாதத் தாமரைகளையே நினைத்து,
  • நாலாறு நாலு பற்று வகையான
    (4 ..ஐ 6 ..ஆல் பெருக்கி வந்த 24 ..ம் 4 ..ம் சேர்ந்த) 28 * சிவ சம்பந்தத்தை உடையதும்,
  • நாலாரும் ஆகமத்தின்
    சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்கள்** பொருந்தினவாயும் உள்ள சிவாகம
  • நூலாய ஞான முத்தி
    நூல்களில் கூறப்பட்டுள்ள ஞான முத்தி நெறியே
  • நாடோறு நானு ரைத்த நெறியாக
    நாள் தோறும் நான் அனுஷ்டிக்கும் நெறியாகவும்,
  • நீவேறெ னாதிருக்க
    நீ வேறு என்றில்லாமல்
  • நான்வேறெ னாதிருக்க
    நான் வேறு என்றில்லாமல், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுபட்ட நிலையில்,
  • நேராக வாழ்வதற்குன் அருள்கூர
    நேர்பட்டு வாழ்வதற்கு உன் கிருபை பெருகி,
  • நீடு ஆர் ஷடாதரத்தின் மீதே
    பெருமை பொருந்திய ஆறு ஆதாரங்களையும் கடந்து ஹஸ்ராரத்தில்***
  • பராபரத்தை நீகாணென
    பெரிய பொருள்கட்கெல்லாம் பெரிய பொருளான சிவத்தை நீ காண்பாயாக என்று
  • ஆவனைச்சொல் அருள்வாயே
    அந்த ஐக்கிய வசனத்தை உபதேசித்து அருள்வாயாக.
  • சேவேறும் ஈசர் சுற்ற
    நந்தியின் மீது ஏறுகின்ற ஈசராம் சிவனார் உன்னை வலம் வர,
  • மாஞான போத புத்தி
    சிறந்த ஞான உபதேசத்தை
  • சீராகவே உரைத்த குருநாதா
    செம்மையாகவே சொன்ன குருநாதனே,
  • தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
    பகைவர்களாம் தேவர்களின் நாட்டைச் சுட்டழித்த அசுரர்கள் சாகும்படி வெட்டிய
  • தீரா குகா குறத்தி மணவாளா
    தீரனே, குகனே, குறத்தி வள்ளியின் மணவாளனே,
  • காவேரி நேர்வடக்கிலே வாவி பூம ணத்த
    காவேரி ஆற்றின் நேர் வடக்கில் தடாகங்களில் மலர்கள் மணக்கும்
  • கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே
    சோலைகள் சூழ்ந்த சுவாமிமலையில் எழுந்தருளிய முருகக் கடவுளே,
  • கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
    கரு மேகத்து நிற மேனியுடைய மகா காளி, என்றும் இளையாள், சக்தி,
  • காமாரி வாமி பெற்ற பெருமாளே.
    காமனை எரித்தவரின் இடதுபக்கம் உள்ள பார்வதி பெற்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com