தனதன தனனா தனனா
தனந்த தத்தம் ...... தனதான
தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும் ...... வசையாலே
தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும் ...... மதியாலே
பொருசிலை வளையா இளையா
மதன்தொ டுக்குங் ...... கணையாலே
புளகித முலையா ளலையா
மனஞ்ச லித்தும் ...... விடலாமோ
ஒருமலை யிருகூ றெழவே
யுரம்பு குத்தும் ...... வடிவேலா
ஒளிவளர் திருவே ரகமே
யுகந்து நிற்கும் ...... முருகோனே
அருமறை தமிழ்நூ லடைவே
தெரிந்து ரைக்கும் ...... புலவோனே
அரியரி பிரமா தியர்கால்
விலங்க விழ்க்கும் ...... பெருமாளே.
- தெருவினில் நடவா மடவார்
தெருக்களில் உல்லாசமாக நடக்கு பெண்கள் - திரண்டு ஒறுக்கும் வசையாலே
ஒன்று சேர்ந்து வம்பு பேசும் வசை மொழிகளாலும், - தினகரனென வேலையிலே
சூரியனுக்கு ஒப்பான ஒளியுடனும் வெப்பத்துடனும் கடலில் - சிவந்து உதிக்கும் மதியாலே
சிவந்த நிறத்துடன் உதிக்கும் சந்திரனாலும், - பொருசிலை வளையா இளையா
காமப் போருக்குரிய கரும்பு வில்லை வளைத்து, சளைக்காமல் - மதன்தொடுக்குங் கணையாலே
மன்மதன் எய்கின்ற மலர் அம்புகளினாலும், - புளகித முலையாள் அலையா
விரகதாபத்தால் விம்மும் மார்பினளாகிய என்னை அலையுமாறும் - மனஞ்சலித்தும் விடலாமோ
உள்ளம் உடைந்து கலங்குமாறும் நீ விடுதல் முறையாகுமோ? - ஒருமலை யிருகூறெழவே
மாயையில் ஒப்பற்ற கிரெளஞ்சமலை இரண்டாகப் பிளவுபடும்படியும், - உரம் புகுத்தும் வடிவேலா
தாரகாசுரன் மார்பில் புகும்படியும் செலுத்திய கூர் வேலை உடையவனே, - ஒளிவளர் திருவேரகமே
பேரொளி பெற்று விளங்கும் சுவாமிமலை என்னும் திருத்தலத்தில் - உகந்து நிற்கும் முருகோனே
மகிழ்ச்சியோடு எழுந்தருளியிருக்கும் முருகனே, - அருமறை தமிழ்நூல் அடைவே
அருமையான வேதங்களையும் தமிழ் நூல்களையும் முழுமையாக - தெரிந்துரைக்கும் புலவோனே
கேட்பவரின் தரம் அறிந்து விரித்து உரைத்தருளும் ஞான பண்டிதா, - அரியரி பிரமாதியர்
இந்திரன், திருமால், பிரம்மா முதலிய தேவர்களின் - கால்விலங்க அவிழ்க்கும் பெருமாளே.
காலில் பூட்டிய விலங்கினைத் தகர்த்தெறிந்த பெருமாளே.