தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டு
தனைவிடுசொல் தூது தண்ட ...... முதலான
சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப
தருமுதல தான செஞ்சொல் ...... வகைபாடி
மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து
வரினுமிவர் வீத மெங்க ...... ளிடமாக
வருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல்
மடையரிட மேந டந்து ...... மனம்வேறாய்
உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து
உழல்வதுவு மேத விர்ந்து ...... விடவேநல்
உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப
முதவியெனை யாள அன்பு ...... தருவாயே
குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள்
குதிகொளிள வாளை கண்டு ...... பயமாகக்
குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்கு
குருமலையின் மேல மர்ந்த ...... பெருமாளே.
- தருவர் இவர் ஆகும் என்று பொருள் நசையில் நாடி
இவர் நிச்சயமாகக் கொடுப்பார் என்று பொருளின்மேல் உள்ள பேராசையால் பலரை விரும்பித் தேடிச் சென்று, - வண்டு தனை விடு சொல் தூது தண்ட(கம்) முதலான
வண்டு விடு தூது* 1 , தண்டகம்* 2 முதலான, - சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல்
அதான செம் சொல் வகை பாடி
இனிமையான கவி மாலைகள், சிந்து* 3 , கலித்துறைகள்* 4 , ஏசல்* 5 , இன்பமான தரு* 6 முதலிய செவ்விய பா வகைகளைப் பாடி, - மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து
வரினும்
அடிக்கடி வந்து போவதையும் சொல்லித் தெரிவித்து, அவர்களுடைய அடி முதல் முடி வரையும் வாழ்க்கை வரலாற்றை அறிந்து வந்தாலும், - இவர் வீதம் எங்களிடம் ஆக வரும் அதுவொ போதும்
என்று
(அவர்கள்) அமைதியாக எங்களிடத்தில் (நீங்கள்) வருவது போதும் என்று கூறி, - ஒரு பணம் உதாசினம் சொல்
ஒரு பணம் கூடத் தராமல் அலட்சிய வார்த்தை பேசுவார்கள். - மடையரிடமே நடந்து மனம் வேறாய் உருகி மிகவாக
வெந்து
அத்தகைய முட்டாள்களிடத்தில் நான் நடந்து, மனம் உடைந்து வேறுபட்டு, உள்ளம் உருகி மிகவும் வெந்து, - கவிதை சொ(ல்)லியே திரிந்து உழல்வதுவுமே தவிர்ந்து
விடவே
பாடல்களைச் சொல்லியே திரிந்து, அலைச்சல் உறுவது ஒழிவதற்காகவே, - நல் உபய பத மால் விளங்கி இக பரமும் ஏவ இன்பம் உதவி
எனை ஆள அன்பு தருவாயே
உனது நல்ல இரு திருவடிகளிலும் ஆசை மேலிட்டு விளங்கி, இம்மையிலும் மறுமையிலும் பொருந்தும்படியான இன்பத்தை நான் பெற உதவி, என்னை ஆட்கொள்ள அன்பு தருவாயாக. - குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி
கொக்கினோடு நாரை, அன்றில் என்னும் நீர்ப் பறவைகள் இரையை விரும்பித் தேடி - தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக
(காவிரியின் நீர் நிலையில்) குதிக்கின்றதை, இள வாளை மீன்கள் கண்டு பயம் கொள்ள, - குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு
ஒலிக்கும் கடல்களே அதிர்ந்து வருவதுபோல காவிரி ஆறு வந்து விளங்கும் - குரு மலையின் மேல் அமர்ந்த பெருமாளே.
சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.