தானதன தந்த தத்த தானதன தந்த தத்த
தானதன தந்த தத்த ...... தனதான
சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண்
மாதரைவ சம்ப டைத்த ...... வசமாகிச்
சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தை
காலமுமு டன்கி டக்கு ...... மவர்போலே
காலுமயி ரும்பி டித்து மேவுசிலு கும்பி ணக்கு
நாளுமிக நின்ற லைத்த ...... விதமாய
காமகல கம்பி ணித்த தோதகமெ னுந்து வக்கி
லேயடிமை யுங்க லக்க ...... முறலாமோ
ஏலமில வங்க வர்க்க நாகம்வகு ளம்ப டப்பை
பூகமரு தந்த ழைத்த ...... கரவீரம்
யாவுமலை கொண்டு கைத்த காவிரிபு றம்பு சுற்றும்
ஏரகம மர்ந்த பச்சை ...... மயில்வீரா
சோலைமடல் கொண்டு சக்ர மால்வரைய ரிந்த வஜ்ர
பாணியர்தொ ழுந்தி ருக்கை ...... வடிவேலா
சூர்முதிர்க்ர வுஞ்ச வெற்பும் வேலைநில மும்ப கைத்த
சூரனுட லுந்து ணித்த ...... பெருமாளே.
- சேலும் அயிலும் தரித்த வாளை அடரும் கடைக் கண்
சேல் மீன், வேல் இவை போன்றதும், வாளாயுதத்தைப்போல் தாக்கி வருத்த வல்லதுமான கடைக்கண்களை உடைய - மாதரை வசம் படைத்த வசமாகி
விலைமாதர்களுடைய வசத்தில்பட்ட ஆளாகி, - சீலம் மறையும் பணத்தில் ஆசை இலை என்று அவத்தை
காலமும் உடன் கிடக்கும் அவர் போலே
நல்ல ஒழுக்கத்தை மறைக்கும் பொருளின்மேல் ஆசை இல்லை என்று சொல்லி, நித்திரை செய்யும்போதும் கூடப் படுத்துக் கிடக்கும் அன்புடையவர்போல் நடித்து, - காலும் மயிரும் பிடித்து மேவும் சிலுகும் பிணக்கு நாளும் மிக
நின்று அலைத்த விதம் ஆய
கால்களையும் (பின்னர்) மயிரையும் பிடித்து, சண்டையும் ஊடலும் நாளுக்கு நாள் அதிகமாக அலைப்பிக்கின்ற வகைக்குச் செய்கின்ற - காம கலகம் பிணித்த தோதகம் எனும் துவக்கிலே அடிமையும்
கலக்கம் உறலாமோ
மாதர்களின் காமக் கலகத்தில் சிக்குதலால் ஏற்படும் வருத்தமாகிய தொடர்பில் அடிமையாகிய நானும் கலக்கம் அடையலாமோ? - ஏலம் இலவங்க வர்க்க நாகம் வகுளம் படப்பை பூகம் மருதம்
தழைத்த கர வீரம்
ஏலம், கிராம்பு வகை, சுரபுன்னை, மகிழ மரத் தோட்டங்கள், கமுகு, மருத மரம், செழிப்புள்ள தாமரை - யாவும் அலை கொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்றும்
யாவையும் தனது அலையில் அடித்துத் தள்ளி வருகின்ற காவிரி ஆறு வெளிப் புறத்தில் சூழ்ந்து செல்லும் - ஏரகம் அமர்ந்த பச்சை மயில் வீரா
திருவேரகம் என்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பச்சை மயில் வீரனே, - சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த
கற்பகச் சோலையில் உள்ள பூ இதழால் சக்ரவாள கிரி ஆகிய பெரிய மலைகளின் (சிறகுகளை)* வெட்டித்தள்ளிய - வஜ்ரபாணியர் தொழும் திருக் கை வடி வேலா
வஜ்ராயுதம் கொண்ட கைகளை உடைய இந்திரன் வணங்கும் திருக்கை வடிவேலனே, - சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த சூரன்
உடலும் துணித்த பெருமாளே.
அச்சத்தை நிரம்பத் தரும் கிரெளஞ்ச மலையையும், கடலிடத்தையும், பகைத்து வந்த சூரனுடைய உடலையும் அழித்த பெருமாளே.