திருப்புகழ் 218 செகமாயை உற்று (சுவாமிமலை)

தனதான தத்த தனதான தத்த
தனதான தத்த ...... தனதான
செகமாயை  யுற்றெ  னகவாழ்வில்  வைத்த 
திருமாது  கெர்ப்ப  ......  முடலூறித் 
தெசமாத  முற்றி  வடிவாய்நி  லத்தில் 
திரமாய  ளித்த  ......  பொருளாகி 
மகவாவி  னுச்சி  விழியாந  நத்தில் 
மலைநேர்பு  யத்தி  ......  லுறவாடி 
மடிமீத  டுத்து  விளையாடி  நித்த 
மணிவாயின்  முத்தி  ......  தரவேணும் 
முகமாய  மிட்ட  குறமாதி  னுக்கு 
முலைமேல  ணைக்க  ......  வருநீதா 
முதுமாம  றைக்கு  ளொருமாபொ  ருட்குள் 
மொழியேயு  ரைத்த  ......  குருநாதா 
தகையாதெ  னக்கு  னடிகாண  வைத்த 
தனியேர  கத்தின்  ......  முருகோனே 
தருகாவி  ரிக்கு  வடபாரி  சத்தில் 
சமர்வேலெ  டுத்த  ......  பெருமாளே. 
  • செகமாயை யுற்று
    இந்த உலக மாயையில் சிக்குண்டு,
  • என் அகவாழ்வில் வைத்த
    எனது இல்லற வாழ்வில் எனக்குக் கிட்டிய
  • திருமாது கெர்ப்பம் உடல் ஊறி
    அழகிய மனைவியின் கருவில் உருவாகி அவளது உடலில் ஊறி
  • தெசமாத முற்றி
    பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து,
  • வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த
    நல்ல வடிவோடு கூடி பூமியில் நன்கு தோன்றிய
  • பொருளாகி
    குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து,
  • மக அவாவின்
    குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை
  • உச்சி விழி ஆநநத்தில்
    உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து, முகத்தோடு முகம் சேர்த்து,
  • மலைநேர்புயத்தில் உறவாடி
    எனது மலை போன்ற தோள்களில் நீ தழுவி உறவாடி,
  • மடிமீதடுத்து விளையாடி
    என் மடித்தலத்தில் அமர்ந்து குழந்தையாக விளையாடி,
  • நித்த மணிவாயின் முத்தி தரவேணும்
    நாள்தோறும் உன் மணி வாயினால் முத்தம் தந்தருள வேண்டும்.
  • முகமாய மிட்ட குறமாதி னுக்கு
    முக வசீகரம் மிக்க குறப்பெண் வள்ளியின்
  • முலைமேல் அணைக்க வருநீதா
    மார்பினை அணைக்க வந்த நீதிபதியே*,
  • முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள்
    பழம் பெரும் வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே
  • மொழியேயு ரைத்த குருநாதா
    பிரணவப் பொருளை சிவனாருக்கு உபதேசித்த குருநாதனே,
  • தகையாது எனக்கு
    தடையொன்றும் இல்லாது எனக்கு
  • உன் அடிகாண வைத்த
    உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த
  • தனியேரகத்தின் முருகோனே
    ஒப்பற்ற திருவேரகத்தின் (சுவாமிமலையின்) முருகனே,
  • தருகாவிரிக்கு வடபாரிசத்தில்
    மரங்கள் இருபுறமும் நிறைந்த காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே
  • சமர்வேலெடுத்த பெருமாளே.
    போர் வேல் விளங்க நிற்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com