திருப்புகழ் · 179போதகம் தரு (பழநி)

தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன ...... தனதான

சீமான் சிவானி

போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ்
ாமீ நமோநம ...... அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்
பாத கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே
பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர்
ஆதி சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

பத உரை

  • போத கந்தரு கோவே நமோநம
    ஞான உபதேசம் தருகிற தலைவனே, போற்றி, போற்றி,
  • நீதி தங்கிய தேவா நமோநம
    நீதிக்கு இருப்பிடம் ஆன இறைவனே, போற்றி, போற்றி,
  • பூத லந்தனை யாள்வாய் நமோநம
    இந்தப் பூமண்டலத்தை ஆள்கின்றவனே, போற்றி, போற்றி,
  • பணியாவும் பூணு கின்றபி ரானே நமோநம
    அணிகலன்கள் அனைத்தையும் அணிகின்ற பெருமானே, போற்றி, போற்றி,
  • வேடர் தங்கொடி மாலா நமோநம
    வேடர்கள் தம்குலத்தில் அவதரித்த பைங்கொடி வள்ளியிடம் மையல் கொண்டவனே, போற்றி, போற்றி,
  • போதவன்புகழ் ாமீ நமோநம
    தாமரை மலர்வாசனாம் பிரமன் துதிக்கும் ஸ்வாமியே, போற்றி, போற்றி,
  • அரிதான வேத மந்திர ரூபா நமோநம
    அருமையான வேத மந்திரங்களின் வடிவானவனே, போற்றி, போற்றி,
  • ஞான பண்டித நாதா நமோநம
    மெய்ஞ்ஞானப் புலவனான தலைவனே, போற்றி, போற்றி,
  • வீர கண்டைகொள் தாளா நமோநம
    வீரக் கழலை அணிந்த திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி,
  • அழகான மேனி தங்கிய வேளே நமோநம
    அழகு நிறைந்த திருமேனியை உடைய வேளே, போற்றி, போற்றி,
  • வான பைந்தொடி வாழ்வே நமோநம
    தேவருலகில் வாழும் பசுமையான வளையல் அணிந்த தேவயானையின் மணவாளனே, போற்றி, போற்றி,
  • வீறு கொண்டவிசாகா நமோநம
    வெற்றி நிறைந்த விசாக மூர்த்தியே, போற்றி, போற்றி,
  • அருள்தாராய்
    உனது திருவருளைத் தந்து உதவுவாயாக.
  • பாத கஞ்செறி சூராதி மாளவெ
    தீவினை நிறைந்த சூரன் முதலிய அசுரர்கள் இறக்குமாறு
  • கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
    கூர்மையான வேலாயுதத்தால் போர் புரிந்து,
  • பார அண்டர்கள் வானாடு சேர்தர அருள்வோனே
    பெருமை பொருந்திய தேவர்கள் மீண்டும் வான் நாடு சேரும்படியாக அருள் புரிந்தவனே,
  • பாதி சந்திரனேசூடும் வேணியர்
    பிறைச்சந்திரனைத் தரித்த ஜடாமுடியினரும்,
  • சூல சங்கரனார் கீத நாயகர்
    திரிசூலத்தைத் தாங்கும் சங்கரனாரும், இசைத் தலைவரும்,
  • பார திண்புயமேசேரு சோதியர் கயிலாயர்
    வலிமையும் திண்மையும் உடைய புயங்கள் வாய்ந்த ஜோதி ஸ்வரூபமும், திருக்கயிலையில் வாழ்பவருமான
  • ஆதி சங்கரனார்பாக மாதுமை
    முதன்மையான சிவப்பரம்பொருளும் ஆகிய சிவபிரானின் இடப்பாகத்தில் இருக்கும் உமாதேவியும்,
  • கோல அம்பிகை மாதா மநோமணி
    அழகிய அம்பிகையும், உலக மாதாவும், மனோன்மணியும்,
  • ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி
    அன்னையும், சிவகாமசுந்தரியும், உயிர்களுக்குத் தாயான நாராயணியும், அதிரூபவதியுமான பார்வதிதேவி
  • ஆவல் கொண்டு விறாலே சிராடவெ
    அன்பு கொண்டு பெருமையுடன்சீராட்ட,
  • கோமளம்பல சூழ்கோயில்மீறிய
    அழகு பலவாக அமைந்த திருக்கோயில்கள் மிகுந்த
  • ஆவினன்குடி வாழ்வான
    திருவாவினன்குடியில் வாழ்வாக வீற்றிருக்கும்,
  • தேவர்கள் பெருமாளே.
    தேவர்கள் போற்றும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout