திருப்புகழ் · 1330வானவராதி யோர் (திருப்பூவணம்)
vAnavarAdhiyOr
தானனதான தானனதான தானனதான ...... தனதான
தானனதான தானனதான தானனதான ...... தனதான
வானவராதி யோர்சிறைமேவ மாவலியேசெய் ...... திடுசூரன்
மார்பிருகூற தாய்விடவாரி வாய்விடவேலை ...... விடுதீரா
கானவர்பாவை காதலனான காசணிபார ...... தனமார்பா
காலனைமோது காலகபால *காளகளேசர் ...... தருபாலா
தேனமர்நீப மாலைவிடாத சேவகஞான ...... முதல்வோனே
தீயகுணாதி பாவிநினாது சேவடிகாண ...... அருள்வாயே
**போனகசாலை யாதுலர்வாழ வீதிகடோறும் ...... நனிமேவு
பூவணமான மாநகர்வாழு நாதகுகேச ...... பெருமாளே.
பத உரை · word meanings
- வானவராதி யோர்சிறைமேவ மாவலியேசெய் ...... திடுசூரன்
மார்பிருகூற தாய்விடவாரி வாய்விடவேலை ...... விடுதீரா
வானவர்கள் அனைவரும் பத்மாசுரனால் சிறையில் அடைக்கப்பட்டனர். மிகவும் வலிமை பொருந்திய இந்த அசுரனின் மார்பினை இரண்டு கூறாக ஆக்கிடுமாறு வேலைவிடுத்த தீரனாகிய முருகப் பெருமானே! - கானவர்பாவை காதலனான காசணிபார ...... தனமார்பா
காலனைமோது காலகபால காளகளேசர் ...... தருபாலா
கானகத்தின் குறமகளான வள்ளியின் காதலுக்கு அடிமையானவனே! எமனை எதிர்த்து காலங்களையெல்லாம் கடந்து ஆலகால விசத்தையுண்ட பரமேசுரனின் மைந்தனே! - தேனமர்நீப மாலைவிடாத சேவகஞான ...... முதல்வோனே
தீயகுணாதி பாவிநினாது சேவடிகாண ...... அருள்வாயே
தேன் உதிரும் நீபமாலையை எப்பொழுதும் அணிந்து சேவக ஞான முதல்வனாய் விளங்குபவனே. தீயகுணங்களைக் கொண்ட பாவியாகிய நான் உனது சேவடிகளைக் காண நீ அருளவேண்டும். - போனகசாலை யாதுலர்வாழ வீதிகடோறும் ...... நனிமேவு
பூவணமான மாநகர்வாழு நாதகுகேச ...... பெருமாளே.
வீதிகள் தோறும் அன்னதானம் நடைபெறும் சிறப்புப் பெற்ற திருப்பூவணமான மாநகரில் வாழும் நாதகுகேசப் பெருமானே, நீ எனக்கு அருளவேண்டும்.



