திருப்புகழ் 1328 ஏறுமயிலேறி (திருவருணை)

மங்களம் - 'ஏறுமயில் ஏறி'
ஏறுமயி  லேறிவிளை  யாடுமுக  மொன்றே 
ஈசருடன்  ஞானமொழி  பேசுமுக  மொன்றே 
கூறுமடி  யார்கள்வினை  தீர்க்குமுக  மொன்றே 
குன்றுருவ  வேல்வாங்கி  நின்றமுக  மொன்றே 
மாறுபடு  சூரரை  வதைத்தமுக  மொன்றே 
வள்ளியை  மணம்புணர  வந்தமுக  மொன்றே 
ஆறுமுக  மானபொருள்  நீயருளல்  வேண்டும் 
ஆதியரு  ணாசல  மமர்ந்த  பெருமாளே 
  • ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு முகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு முகம்தான்.
  • உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும் தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையை உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு முகம்தான்.
  • உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான்.
  • ... அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com