தனதன தத்தத் தத்தன தத்தத்
தனதன தத்தத் தத்தன தத்தத்
தனதன தத்தத் தத்தன தத்தத் ...... தனதானா
தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்
கலகலெ னப்பற் கட்டது விட்டுத்
தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் ...... தடுமாறித்
தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட்
டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச்
சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் ...... பலகாலும்
திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்
திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத்
தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் ...... டுயிர்போமுன்
திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்
திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்
செனனம றுக்கைக் குப்பர முத்திக் ...... கருள்தாராய்
கலணைவி சித்துப் பக்கரை யிட்டுப்
புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக்
கடுகந டத்தித் திட்டென எட்டிப் ...... பொருசூரன்
கனபடை கெட்டுத் தட்டற விட்டுத்
திரைகட லுக்குட் புக்கிட எற்றிக்
களிமயி லைச்சித் ரத்தில்ந டத்திப் ...... பொருகோவே
குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக்
குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக்
குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற் ...... றிரிவோனே
கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச்
சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக்
குலகிரி யிற்புக் குற்றுரை யுக்ரப் ...... பெருமாளே.
- தலைமயிர் கொக்குக் கொக்கநரைத்து
தலைமயிரானது கொக்கின் இறகு போல நரைத்தும், - கலகலெ னப்பற் கட்டது விட்டு
கலகல என்று பல்லின் கட்டுக்கள் யாவும் விட்டும், - தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டு
தளர்ந்த நடை ஏற்பட்டு, தத்தித்தத்தி அடிகளை வைத்தும், - தடுமாறித் தடிகொடு தத்தி
தடுமாற்றத்துடன் கம்பை ஊன்றித் தள்ளாடி நடந்தும், - கக்கல்பெ ருத்திட்டு அசனமும் விக்கி
இருமல் தொடர்ந்து பெருகியும், உணவு தொண்டையில் அடைத்து விக்கல் எடுத்தும், - சத்தியெடுத்துச் சளியுமி குத்து
வாந்தி எடுத்தும், சளி அதிகரித்தும், - பித்தமு முற்றிப் பலகாலும்
பித்தமும் பலத்துப் போய், பலதடவையும் - திலதயி லத்திட் டொக்கவெ ரிக்க
எள் எண்ணெயில் இட்டு ஒன்றுபட்டு எரிக்க - திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டு
கடுகு, நெல்லி, தான்றி ஆகிய மூன்றும் சேர்ந்த திரிபலை, சுக்கு, திப்பிலி முதலியவற்றை இட்டு வறுத்து, - தெளியவ டித்துற் றுய்த்து
தெளிவாக கஷாயத்தை வடிகட்டி வாய்க்குள் இட்டும், - உடல் செத்திட்டுயிர்போமுன்
உடல் செத்துப்போய், உயிர் நீங்குவதற்கு முன்னாலே, - திகழ்புகழ் கற்று
விளக்கமுடைய உனது திருப்புகழைக் கற்று, - சொற்கள்ப யிற்றி
அப்புகழுக்கு உண்டான சொற்களைப் பழகுமாறு செய்து, - திருவடியைப் பற்றித் தொழுதுற்று
உன் திருவடிகளைப் பற்றிக்கொண்டு தொழுது வணங்கி, - செனனம் அ றுக்கைக்கு
பிறப்பை அறுப்பதற்கு - பர முத்திக் கருள்தாராய்
மேலான மோக்ஷத்திற்குத் திருவருளை அருள்வாயாக. - கலணைவிசித்துப் பக்கரை யிட்டு
சேணத்தை இறுக்கக் கட்டி, அங்கவடியை அமைத்து, - புரவிசெலுத்திக் கைக்கொடு வெற்பைக் கடுகநடத்தி
குதிரைப் படையை நடத்தி, துதிக்கையை உடைய மலைபோன்ற யானைப்படையை வேகமாகச் செலுத்தி - திட்டென எட்டிப் பொருசூரன்
திடுமென ஓட்டிப் போர் செய்யும் சூரன் - கனபடை கெட்டுத் தட்டற விட்டு
பெரும் சேனை அழிந்து போய், தடுக்கமுடியாமல் கைவிட்டு, - திரைகட லுக்குட் புக்கிட
அலைமோதும் கடலுக்குள் புகுந்து ஒளிந்து கொள்ள, - எற்றிக் களிமயிலைச் சித்ரத்தில் நடத்தி
தாக்கி, செருக்குடன் கூடிய மயிலை அழகுறச் செலுத்தி - பொருகோவே
போர் செய்யும் பெருமானே, - குலிசன்மகட்குத் தப்பியு
வஜ்ராயுதப் படையுள்ள இந்திரன் மகளாம் தேவயானைக்குத் தப்பியும் - மற்றக் குறவர்மகட்குச் சித்தமும் வைத்து
குறவர் மகளாம் வள்ளிக்கு மனத்தைப் பறிகொடுத்தும், - குளிர்தினை மெத்தத் தத்து
குளிர்ந்த தினை மிகுதியாக விளைகின்ற - புனத்திற் றிரிவோனே
தினைப்புனத்திலே அலைந்து திரிந்தவனே, - கொடியபொருப்பைக் குத்திமு றித்து
கொடுமையான கிரெளஞ்சமலையை வேலால் குத்தி அழித்து, - சமரம்விளைத்துத் தற்பர முற்று
போரை விளைவித்து, தானே மேலானவனாக நின்று, - குலகிரி யிற்புக் குற்று
மேலான மலையிற் சென்று பொருந்தி - உறை யுக்ரப் பெருமாளே.
வீற்றிருக்கின்ற பெருஞ்சினத்துப் பெருமாளே.