தனன தனதன தனத்தத் தாத்த
தனன தனதன தனத்தத் தாத்த
தனன தனதன தனத்தத் தாத்த ...... தனதான
அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி
விழிகள் கடையிணை புரட்டிக் காட்டி
அணிபொ னணிகுழை புரித்துக் காட்டி ...... யநுராக
அவச இதமொழி படித்துக் காட்டி
அதர மழிதுவர் வெளுப்பைக் காட்டி
அமர்செய் நகநுதி யழுத்தைக் காட்டி ...... யணியாரம்
ஒழுகு மிருதன மசைத்துக் காட்டி
எழுத வரியிடை வளைத்துக் காட்டி
உலவு முடைதனை நெகிழ்த்திக் காட்டி ...... யுறவாடி
உருகு கடிதட மொளித்துக் காட்டி
உபய பரிபுர பதத்தைக் காட்டி
உயிரை விலைகொளு மவர்க்குத் தேட்ட ...... மொழிவேனோ
முழுகு மருமறை முகத்துப் பாட்டி
கொழுநர் குடுமியை யறுத்துப் போட்ட
முதல்வ குகைபடு திருப்பொற் கோட்டு ...... முனிநாடா
முடுகு முதலையை வரித்துக் கோட்டி
அடியர் தொழமக வழைத்துக் கூட்டி
முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட ...... முதுநீதர்
பழைய கடதட முகத்துக் கோட்டு
வழுவை யுரியணி மறைச்சொற் கூட்டு
பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு ...... பரமேசர்
பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு
குமர குலமலை யுயர்த்திக் காட்டு
பரிவொ டணிமயில் நடத்திக் காட்டு ...... பெருமாளே.
- அழகு தவழ் குழல் விரித்துக் காட்டி விழிகள் கடையிணை
புரட்டிக் காட்டி
அழகு விளங்கும் கூந்தலை விரித்துக் காட்டியும், கண்களின் கடைப் புறம் இரண்டையும் சுழற்றிக் காட்டியும், - அணி பொன் அணி குழை புரித்துக் காட்டி அநுராக அவச
இத மொழி படித்துக் காட்டி
அழகிய பொன்னாலாகிய ஆபரணங்களையும் குண்டலங்களையும் விளக்கமுறக் காட்டியும், காமத்தை விளக்க வல்லதும் தன் வசம் இழக்கச் செய்வதுமான இனிய பேச்சுக்களை பேசிக் காட்டியும், - அதரம் அழி துவர் வெளுப்பைக் காட்டி அமர் செய் நக நுதி
அழுத்தைக் காட்டி அணி ஆரம் ஒழுகும் இரு தனம்
அசைத்துக் காட்டி
வாயிதழின் செம்மை இழந்த பவளம் போன்ற வெளுப்பைக் காட்டியும், போரிடும் நகக் குறி இட்டு அழுத்தினதைக் காட்டியும், அழகிய முத்து வடம் தொங்கும் இரண்டு மார்பகங்களை அசைத்துக் காட்டியும், - எழுத அரி இடை வளைத்துக் காட்டி உலவும் உடை தனை
நெகிழ்த்திக் காட்டி உறவாடி உருகு கடி தடம் ஒளித்துக்
காட்டி
எழுதுவதற்கு அரிய இடுப்பை வளைத்துக் காட்டியும், அணிந்து உலவி வரும் புடவையை தளர்த்திக் காட்டியும், நட்புப் பேச்சுக்களைப் பேசிக் காட்டியும், உள்ளத்தை உருக வைக்கும் பெண்குறி இடத்தை மறைப்பது போல் காட்டியும், - உபய பரிபுர பதத்தைக் காட்டி உயிரை விலை கொளும்
அவர்க்குத் தேட்டம் ஒழிவேனோ
இரண்டு சிலம்பு அணியும் பாதங்களைக் காட்டியும், உயிரையே விலைக்குக் கொள்பவராகிய அந்த விலைமாதர்கள் மேலுள்ள விருப்பத்தை நான் ஒழிக்க மாட்டேனோ? - முழுகும்அரு மறை முகத்துப் பாட்டி கொழுநர் குடுமியை
அறுத்துப் போட்ட முதல்வ குகை படு திருப் பொன் கோட்டு
முனி
அரிய வேதங்களில் வல்லவளான பெரியவளின் (சரஸ்வதி - வேத முதல்வி) கணவராகிய பிரமனின் குடுமியை அறுத்துப் போட்ட முதல்வனே, குகைகள் அமைந்த பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை அழியும்படி கோபித்தவனே, - நாடா முடுகு முதலையை வரித்துக் கோட்டி அடியர் தொழ
மகவு அழைத்துக் கூட்டி முறை செய் தமிழினை விரித்துக்
கேட்ட முது நீதர்
இறைவன் திருவருளை நாடி, விரைந்து வரும்படி முதலையை வரவழைத்து, சூழ்ந்த அடியார்கள் துதிக்க, பிள்ளையை பெற்றோர்களிடம் சேர்ப்பிக்க (பிள்ளையை உயிரோடு தா என்று) முறை இட்ட சுந்தரர் பாடிய தமிழ்த் தேவாரத்தை* அன்பு பெருக்குடன் கேட்ட பழைய நீதிமான், - பழைய கட தட முகத்துக் கோட்டு வழுவை உரி அணி மறைச்
சொல் கூட்டு பரமர் பகிரதி சடைக்குள் சூட்டு பரமேசர்
பணிய அருள் சிவமயத்தைக் காட்டு குமர
பழைய மதம் பாயும் இடமாகிய முகத்தையும், தந்தத்தையும் உடைய யானையின் தோலை உரித்து அணிந்தவர், வேத மொழிகளைக் கூறும் பரம்பொருள், கங்கையைச் சடையில் சூடியுள்ள சிவபெருமான் உன்னைப் பணிய அவருக்குச் சிவ மயத்தை (பிரணவப் பொருளை) உபதேசித்த குமரனே, - குலமலை உயர்த்திக் காட்டு பரிவொடு அணி மயில் நடத்திக்
காட்டு பெருமாளே.
பழமுதிர்ச்சோலை மலையில் சிறப்புற்று விளங்கும், அன்புடன் அழகிய மயிலை நடத்திக் காட்டும் பெருமாளே.