தத்தத் தனான ...... தனதான
பட்டுப் படாத ...... மதனாலும்
பக்கத்து மாதர் ...... வசையாலும்
சுட்டுச் சுடாத ...... நிலவாலும்
துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான்
தட்டுப் படாத ...... திறல்வீரா
தர்க்கித்த சூரர் ...... குலகாலா
மட்டுப் படாத ...... மயிலோனே
மற்றொப்பி லாத ...... பெருமாளே.
- பட்டுப் படாத மதனாலும்
என்னை மலர்ப் பாணங்களினால் தாக்கியும் தாக்காததுபோல மறைந்திருக்கும் மன்மதனாலும், - பக்கத்து மாதர் வசையாலும்
அண்டை அயலிலுள்ள பெண்களின் பழிச்சொற்களினாலும், - சுட்டுச் சுடாத நிலவாலும்
தன் கிரணங்களினால் எரித்தும் எரிக்காதது போல விளங்கும் நிலவினாலும், - துக்கத்தில் ஆழ்வது இயல்போதான்
நான் விரக வேதனையில் மூழ்கித் தவிப்பது தகுதியாகுமா? - தட்டுப் படாத திறல்வீரா
குறையொன்றும் இல்லாத பராக்கிரமம் உடைய வீரனே, - தர்க்கித்த சூரர் குலகாலா
உன்னுடன் வாதிட்டு எதிர்த்த சூரனின் குலத்துக்கே யமனாக வந்து வாய்ந்தவனே, - மட்டுப் படாத மயிலோனே
அடக்க முடியாத வீரம் செறிந்த மயிலை வாகனமாகக் கொண்டோனே, - மற்றொப்பி லாத பெருமாளே.
வேறு யாரையும் உனக்கு ஒப்பாகச் சொல்லமுடியாத பெருமாளே.