தனனத் தத்தன ...... தனதான
பரவைக் கெத்தனை ...... விசைதூது
பகரற் குற்றவ ...... ரெனமாணுன்
மரபுக் குச்சித ...... ப்ரபுவாக
வரமெத் தத்தர ...... வருவாயே
கரடக் கற்பக ...... னிளையோனே
கலைவிற் கட்குற ...... மகள்கேள்வா
அரனுக் குற்றது ...... புகல்வோனே
அயனைக் குட்டிய ...... பெருமாளே.
- பரவைக்கு எத்தனை விசைதூது
(அடியார் சுந்தரருக்காக) பரவை நாச்சியாரிடம் எத்தனைமுறை வேண்டுமானாலும் தூது போய் - பகரற்கு உற்றவர் என மாண்
சொல்வதற்கு உடன்பட்டவர் இவர் (அதாவது இந்த முருகனின் தந்தையாகிய சிவபிரான்) என்னும் புகழினைப் பெற்ற - உன் மரபுக்கு உச்சித ப்ரபுவாக
உனது குலத்துக்கு ஏற்ற தகுதியும் பெருமையும் கொண்ட பெரியோனாக நீயும் விளங்கி, - வரம் மெத்தத் தர வருவாயே
வரங்களை எனக்கு நிரம்பத் தருவதற்காக இங்கு எழுந்தருளி வருவாயாக. - கரடக் கற்பகன் இளையோனே
மதம்பாயும் சுவட்டை உடைய யானை முகத்தவனும், கற்பக விருட்சம்போலக் கேட்டதை அளிக்கும் கணபதியின் தம்பியே, - கலைவிற் கட்குற மகள்கேள்வா
மான் போன்றும் வில் போன்றும் கண்களை உடைய குறமகள் வள்ளியின் கணவனே, - அரனுக்கு உற்றது புகல்வோனே
சிவபிரானுக்கு அழிவில்லா உண்மைப் பொருளை உபதேசித்தவனே, - அயனைக் குட்டிய பெருமாளே.
பிரமனைக் கைகளால் குட்டின பெருமாளே.