திருப்புகழ் · 1294நாளு மிகுத்த (பொதுப்பாடல்கள்)

தான தனத்த ...... தனதான

Thiruppugazh Anbargal

நாளு மிகுத்த ...... கசிவாகி
ஞான நிருத்த ...... மதைநாடும்
ஏழை தனக்கு ...... மநுபூதி
ராசி தழைக்க ...... அருள்வாயே
பூளை யெருக்கு ...... மதிநாக
பூண ரளித்த ...... சிறியோனே
வேளை தனக்கு ...... சிதமாக
வேழ மழைத்த ...... பெருமாளே.

பத உரை

  • நாளு மிகுத்த கசிவாகி
    நாள்தோறும் மிகுந்த அன்பு ஊறி நெகிழ்ந்த மனத்தினனாய்,
  • ஞான நிருத்தம் அதைநாடும்
    உனது நடனக் கோலத்தைக் காண விரும்பும்
  • ஏழை தனக்கும் அநுபூதி
    எளியோனாகிய எனக்கும் அனுபவ ஞானம் என்னும்
  • ராசி தழைக்க அருள்வாயே
    பாக்கியம் பொருந்தி பெருகி விளங்க அருள் புரிவாயாக.
  • பூளை யெருக்கு மதிநாக
    பூளைப்பூ, எருக்கு இலை, பிறைச் சந்திரன், பாம்பு ஆகியவற்றை
  • பூண ரளித்த சிறியோனே
    சடையிலே அணிந்துள்ள சிவபெருமான் அளித்த குழந்தையே,
  • வேளை தனக்கு உசிதமாக
    உனக்கு வேண்டிய சமயத்தில்* சமயோசிதமாக
  • வேழ மழைத்த பெருமாளே.
    யானையாகக் கணபதியை வரவழைத்த பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * வள்ளியை, யானையைக் காட்டி அச்சுறுத்தி, பின்பு ஆட்கொண்ட சாமர்த்தியம் கூறப்படுகிறது.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout